Sunday, January 8, 2017

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே!!!

இளையராஜாவின் இசையமைப்பை சிலாகித்து ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீமான் பேசும் போது இந்த உதாரணத்தை சொன்னார் "மூடு பனின்னு ஒரு படம்.. அதுல பிரதாப் போத்தன் கெட்டவர்... படம் முழுக்க பெண்களை கடத்தி கொண்டுபோய் கொலை செய்யிற கதாபாத்திரம்... படத்தில உச்சகட்ட காட்சி.. எல்லாரும் அவரை வெரட்டிக்கிட்டு போகும் போது ஒரு பாழடைஞ்ச வீட்டுக்குள்ள போவாரு.. அங்கே வெள்ளையா ஒண்ணு போத்தி இருக்கும்.. என்னன்னு பாத்தா எலும்புக்கூடு.. அவரு உடனே "மாமா.... அம்மா மாமா.. அம்மா மாமான்னு அழுவ ஆரம்பிப்பாரு... அப்ப அப்டியே மென்மையா பின்னணியில் "ஆசை ராஜா ஆரீரோ" அப்டின்னு ஒரு பாட்டு வரும்... அதுவரைக்கும் பிரதாப்பை திட்டுனவன் பூராவும் கரகர ன்னு அழுவான்... ஒரு கதையை அந்தப் பாட்டு அப்படியே காவியமா உந்தித் தள்ளிரும்..." என்று... அப்பேற்பட்ட குரலுக்கு சொந்தக்காரரைப் பற்றிய பதிவு தான் இது...

கதாநாயகர்களை சார்ந்த தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு கிடைக்கிற வாய்ப்புக்கள் பாடகிகளுக்கு இயல்பாகவே குறைவு தான்.. அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சுசீலா, ஜானகி, சித்ரா என்று ஆயிரக்கணக்கில் பாடித்தள்ளிவிடும் பிரதான பாடகிகள் இருப்பார்கள். இதில் நுழைந்து வாய்ப்புக்களை பெறுவது என்பதே பெரிய காரியம்.. அதே நேரம் ஒரே மாதிரி மூன்று நான்கு பாடல்கள் பாடினாலே இவரு இந்த மாதிரி பாடத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தி விடுவார்கள்... கேரியர் கதம் கதம் தான்... யாருடைய குரலையும் காப்பி அடிக்க கூடாது.. நம்ம குரலையும் யாரும் காப்பி அடிக்கிற மாதிரி இருக்க கூடாது... எனவே புதிதாக வரும் பாடகிகளின் நிலை என்பது டி-20 மேட்சில் இறக்கி விடப்பட்ட ஆறாவது பேட்ஸ்மேனின் நிலை தான்.. கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விடாது விளாச வேண்டும்.. அப்படி ஒப்பீட்டு அளவில் குறைவாகவே பாடி இருந்தாலும் 37 ஆண்டுகள் ஒவ்வொரு பாட்டையும் தெறிக்க விட்ட ஹிட் பாடல்களாக பாடிய பாடகி அவர்...

மெல்லிசைப் பாடல் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த அவருக்கு
ஒரு நாள் இயக்குனர் அருட்செல்வர் ஏ.பி.என் அவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது... ஏற்கனவே ஹிந்தியில் "பிளே பாய்" என்கிற படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தாலும் தமிழில் வந்த முதல் வாய்ப்பு அது... "மீரா படத்தில் "காற்றினிலே வரும் கீதம்", "கிருஷ்ண பக்தியில் "ஸாரஸம் வசீகர கண்கள்", "ஞான சௌந்தரியில் "அருள் தாரும் தேவ மாதாவே" போன்ற பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதையின் இசையமைப்பில் பாட...  1977ல் வெளிவந்த "கிருஷ்ண லீலா" படத்தில் இசை மேதை "எஸ்.வி.வெங்கட்ராமன்" இசையில் "மோகன கண்ணன் முரளி கானன்" என்கிற பாடலைப் பாடி தமிழில் அறிமுகம் ஆனார்...

பிறகு மெல்லிசை மன்னர் இசையில் "குடும்பம் ஒரு கதம்பம்", ஏ.வி.ரமணன் இசையில் "நீரோட்டம்", ஷியாம் இசையில் "அல்லி தர்பார்" ஆகிய படங்களில் பாடிவந்தாலும் அவருக்கான சரியான பிரேக் கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆனது...1980ல் நான் முதல் பத்தியில் சொன்ன பாடலை இளையராஜா இசையில் பாடினார்... ஆனாலும் அவரது வெற்றி பயணத்தின் பாதையை உண்மையிலேயே திறந்து விட்டது அவரது அடுத்த பாடல் தான்....
 "பூங்கதவே தாழ் திறவாய்" ....



"உமா ரமணன்" என்ற பெயரை தமிழ் திரையிசை ரசிகர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிய வைத்தது அந்தப் பாட்டு... பிறகு அந்தப் பத்தாண்டுகளில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடினார்... பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் தான்.. ஆனால் ஒவ்வொன்றும் எவர் கிரீன் ஹிட்ஸ் :


  • ஆனந்த ராகம் கேட்கும் நேரம் - பன்னீர் புஷ்பங்கள்
  • மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே - நண்டு
  • பொன்மானே கோபம் ஏனோ - ஒரு கைதியின் டைரி
  • பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு
  • கஸ்தூரி மானே கல்யாண தேனே - புதுமைப்பெண்
  • செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள்
  • கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - தென்றலே என்னைத் தொடு
  • ஆறும் அது ஆழம் இல்ல - முதல் வசந்தம்
  • செவ்வரளித் தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வே கேட்


என்று 80களின் முதல் 5 வருடங்களில் மட்டும் இளையராஜாவின் இசையில் முத்து முத்தான பாடல்கள்...

இதைத்தொடர்ந்து மற்ற இசைஅமைப்பாளர்களிடம் இருந்தும் வாய்ப்புக்கள் வந்தன...


  • வானமே மழை மேகமே - மதுமலர் (கங்கை அமரன்)
  • இந்த அழகுதீபம் ஒளிவீசும் பொழுது  - திறமை (சங்கர் - கணேஷ்)
  • ராக்கோழி கூவையில - ஒரு தாயின் சபதம் (விஜய டி. ராஜேந்தர்)


அற்புதமான குரல் வளம் உடையவர் உமா ரமணன். பழனி விஜயலட்சுமியிடம் பயின்ற கர்நாடக சங்கீத ஞானமும், மேல் ஸ்தாயியில் பாடும் போது குரல் துல்லியமாக ஒலிப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக நறுக்குத் தெறித்த மாதிரி தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்குத் தொடர்ந்து கைகொடுத்து வந்திருக்கின்றன...

உமா ரமணனின் Peak Period என்று 90களை சொல்லலாம்.. பெரும்பாலும் இளையராஜா பாடல்கள் தான் என்றாலும் எக்கச்சக்க ஹிட் பாடல்கள்.... சும்மா கொஞ்சம் பாப்போமே


  • நீ பாதி நான் பாதி கண்ணே - கேளடி கண்மணி
  • ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
  • ஏலேலக்குயிலே ஏல மல மயிலே - பாண்டி நாட்டுத் தங்கம்
  • கோட்டய விட்டு வேட்டைக்கு போகும் - சின்னத்தாயி
  • தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்
  • பூத்து பூத்து குலுங்குதடி பூவு - கும்பக்கரை தங்கய்யா
  • வெள்ளி நிலவே வெள்ளி நிலவே - நந்தவன தேரு
  • ஓ  உன்னாலே நான் பெண்ணானேனே - என்னருகில் நீ இருந்தால்
  • நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் - பாட்டுப் பாடவா
  • முத்தம்மா முத்து முத்து - தந்துவிட்டேன் என்னை
  • ராஜா இல்லா ராணி - எதிர்காற்று




மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அருமையான பாடல்கள் :


  • யாரோ அழைத்தது போலே - சிஷ்யா (தேவா)
  • பொன்மாலையில் ஒரு பூ பூத்தது - கோகுலம் (சிற்பி)
  • உதயமே உயிரே நிலவே - ஒரு பொண்ணு நெனச்சா (எஸ்.ஏ. ராஜ்குமார்)
  • பூத்திருக்கும் மனமே மனமே - புதையல் (வித்யாசாகர்)
  • வா சகி வாசகி... வள்ளுவன் வாசுகி - அரசியல் (வித்யாசாகர்)


இப்படி நிறைய சொல்லலாம்...


2000க்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லையென்றாலும் திருப்பாச்சி, கஜா, இளவட்டம், ஆப்பிள் பெண்ணே என்று தனது படங்களில் இசையமைப்பாளர் மணி சர்மா இவருக்கு நிறைய வாய்ப்புக்களைத் தந்திருக்கிறார்...

சிவகாசியில் "இது என்ன இது என்ன", திருப்பாச்சியில் "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" இரண்டும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் பாடல்கள்

உமா ரமணன் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஏசுதாஸுடன் இணைந்து அவர் பாடிய பாடல்கள்.. அதே போல மற்றொன்று இரண்டு பெண்குரல்களில் ஒருவராக அவர் பாடிய பாடல்கள்.. ரெண்டு female voices வருதுன்னா உடனே கொஞ்சம் மென்மையான குரல் உள்ள கதாபாத்திரத்திற்கு உமா ரமணனை போட்டுக்கோங்கப்பான்னு ராஜா சொல்லிடுவார் போல.... கிட்டத்தட்ட அவரது சமகாலப் பாடகிகள் எல்லோருடனும் பாடியிருக்கிறார். உதாரணத்திற்கு :


  • அமுதே தமிழே அழகிய மொழியே - கோயில் புறா (பி.சுசீலாவுடன்)
  • கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் யாரோ - கை கொடுக்கும் கை (எஸ்.பி.சைலஜாவுடன்)
  • நானொரு சின்னப்பா - தழுவாத கைகள் (பி.எஸ்.சசிரேகாவுடன்)
  • ஏ மரிக்கொழுந்து - புது நெல்லு புது நாத்து (சித்ராவுடன்)
  • பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - வால்டர் வெற்றிவேல் (சுனந்தாவுடன்)
  • ஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி (சுவர்ணலதாவுடன்)
  • ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் - மகாநதி (ஷோபனாவுடன்)


எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் "கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி" என்கிற பாடலில் "வாணி ஜெயராம், எஸ்.பி.சைலஜா, பி.எஸ்.சசிரேகா ஆகிய 3 பேருடன் இணைந்து பாடி இருக்கிறார்...

உமா ரமணன் சில சுவாரஸ்யமான குறிப்புகள் :


  • இசைத்துறைக்கு வருவதற்கு முன்பு இவர் ஒரு தேர்ந்த பரதக்கலைஞர். டாகடர் பத்மா சுப்ரமணியத்தின் சிஷ்யை.
  • 40 வருடங்களில் தன் கணவர் ஏ.வி.ரமணனுடன் 6000 கச்சேரிகளுக்கு மேல் பாடி இருக்கிறார் 
  • இவரது தந்தை முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்
  • தமிழ் சினிமாவில் தீபன் சக்ரவர்த்தி, உன்னி மேனன், ஹரிஷ் ராகவேந்திரா, மகாநதி ஷோபனா ஆகியோர் தங்கள் முதல் பாடலை இவருடன் தான் இனைந்து பாடி இருக்கிறார்கள்.
  • இசையமைப்பாளர் தேவாவின் முதல் படத்தின் முதல் பாடலைப் பாடியவர் உமா ரமணன் (மனசுக்கேத்த மகராசா படத்தில் "மஞ்சக்குளிக்கிற" என்கிற பாடல்)


நல்ல குரல் வளம் உடைய பாடகியாக இருந்தும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருந்தாலும் இவருக்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.. இளையராஜாவிடம் பாடிய பாடல்கள் அளவிற்கு வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் இவர் பாடவில்லை என்பதே இதற்கு நல்ல சான்று... சமீபத்திய இளையராஜா இசைநிகழ்ச்சியிலும் குரல் பிசிறில்லாமல் அதே இனிமையோடு பாடினார். தற்கால இசைமைப்பாளர்களும் இவரது குரலை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஒரு இசை ரசிகனாக நமது விருப்பம்....

No comments:

Post a Comment