Sunday, August 2, 2015

என்னம்மா..... இப்படி பண்றீங்களேம்மா!!!!!!!!

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு "நோ தங்கமணி டே" ல கையில கேம‌ராவோட மைசூர் உயிரியல் பூங்கால மர்மோசெட் குரங்க படம் புடிச்சிட்டு இருந்தேன்... அப்போ அங்கே ஒரு குரூப் கேரளாவுல இருந்து வந்தாங்ய... அதுல ஒரு ஆளு "இதா.... நம்மட‌ மலை அண்ணான்..." அப்டின்னாரு  (இது தான் நம்ம ஊரு மலை அணில்னு அர்த்தம்)... நம்மளும் சும்மா இருக்க முடியாம.. இது அணில் இல்லங்க உலகின் மிகச்சிறிய குரங்கு அப்டின்னேன்... அதுல கடுப்பான அந்தாளும்... கொரங்கு எங்கயாச்சும் இத்துணூண்டு இருக்குமா? இது மலபார் அணில்னு சத்யாகிரகம் பண்ணுணாரு...



வேணும்னா கீழ போர்டு இருக்கு பாருங்க அப்டின்னேன்... "ம்ம்.. நீ பாரு... மருமோ....செட்டு...  அப்டின்னா மலையாளத்துல மலை அண்ணான்...." அப்டின்னுட்டு.. (அவர்கூட வந்தவர்கிட்ட "எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுராம் பாரு...  அணில் எது குரங்கு எதுன்னுகூட  தெரியாம" அப்டின்னு பேசிகிட்டே நகர்ந்துட்டாரு)..

நம்ம மனசாட்சியும்... விவேக் வாய்சுல "அடப்பாவிங்களா...  மர்மோசெட்ட மலையாளம் வரைக்கும் கொண்டாந்துட்டீங்களாடா???.. நல்ல வேள‌.. இது தான் மம்மூட்டியோட  அடுத்த படத்துல  ஹீரோயின் அப்டின்னு சொல்லாம விட்டீங்களே அதுவே பெருசு தான்... அது சரி உங்க ஊருக்கு ஒரு ராம.நாராயணன் சார் இல்லாமலா போயிருப்பாரு...." அப்டின்னு பொலம்ப ஆரம்பிச்சிடுச்சு....

இந்த ஒரு ஆளு மட்டுமில்ல... பொதுவாவே Zoo க்கு வர்ர ஆளுக  அடிக்கிற கூத்து இருக்கே... சொல்லி மாளாது... வீட்டுல சீரீயல் பாக்கும் போதெல்லாம் மயில் கழுத்து பொடவை, புள்ளிமான் பார்டர்னு Discovery Channel effect ல‌ பாக்குற குடும்ப இஸ்திரிகள்...  இங்க வரும்போது தான்.. "ஆமாக்கா, நேத்து கரெக்டா எட்டு மணிக்கு கரண்ட கட் பண்ணிட்டானுங்க.. தெய்வ மகளே பாக்க முடியலன்னு ஃபீல் பண்ணுங்க... (அடி பிசாசு மகளே, இங்க வந்தும் உனக்கு தெய்வ மகள் நெனப்பு தானா..)

ஈமு கோழியப் பாத்து... நம்ம ஈரோட்டுல ஈமு வளக்கச் சொல்லி ஏமாத்திட்டு ஓடுனாங்யளே அந்தக் கோழி தான் இது... இது ஒரு குரூப்பு (ஈமுவ பத்தி  Intro குடுக்க எப்புடி ஒரு மேட்டர புடிச்சு வச்சிருக்காங்ய பாரு.. இதுல டெல்லி கணேஷ வேற திட்டுவாங்ய.. )

ஹான் ராஜூ பாய்... போலியே... I have submitted the timesheets for this week... சோனு பேட்டா... Cage கே பாஸ் மத் ஜாவோ... (இது ஒரு பக்கம் போனுக்கும், இன்னொரு பக்கம் சோனுக்கும் நடுவுல வாரக் கடைசிலையும் டீ ஆத்துர ஐ.டி குருப்பு... இங்க வந்துமாடா??? )

மாப்ள.. இதான்டா வான்கோழி.. போன தீவாளிக்கு மன்னார்குடி சாந்தில பிரியாணி அடிச்சமே அதே தான்...  இது ஒரு தின்னிப் பண்டார குருப்பு... (இதுல கொடும என்னன்னா அவிங்ய சொன்னது Ostrich பறவையப் பாத்து... அடேய். இது நெருப்புக் கோழிடா.. ஒயரமா இருக்குன்றதுக்காக இத வான்கோழிங்கிறாம் பாரு...)



இதுக்கு நடுவுல நியூஸ் ரிப்போர்டர் கிட்ட சீரியசா பேட்டி குடுக்குற குரூப்பு ஒண்ணு... "இங்க நாங்க நெரைய தரம் வந்துருக்கோம்... இங்க புலியெல்லாம் தூங்கிகிட்டே இருக்கு.. இந்த மத்திய அரசும், மாநில அரசும் எதாச்சும் நடவடிக்கை எடுத்தா நல்லாருக்கும்... (மத்திய மாநில அரசுக்கெல்லாம் வேர வேலை வெட்டியே இல்லையாம்மா??? இப்டி கெளம்புறீங்களே!!!)

இவங்ய இப்டின்னா ஸ்கூல்ல இருந்து பசங்கள கூட்டிட்டு வர்ர குரூப் வேர மாதிரி இருக்கும்... "மேத்ஸ் மிஸ் போட்டுட்டு வந்திருக்குர Chocker Set நல்லாருக்குல்ல... எங்க வாங்கினாங்கன்னு கேக்கணும்..." இது டீச்சர் குரூப்புன்னா.. பசங்க வேர லெவல்ல மெரட்டுவாங்ய... "இதான்டா நீர் யான... இதுக்கு மூணு கண்ணு இருக்கும்..." (என்னது மூணு கண்ணா?? நல்லவேளடா... இதான் மூணு கண்ணன்னு சொல்லாம போனியே... )

இவங்களாச்சும் பரவால்ல, Facebook ல ஒரு குரூப்பு இருக்கானுங்க பாருங்க... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா.....

டெல்லி உயிரியல் பூங்கால புலி ஒருத்தர இழுத்துட்டு போனப்போ ஆளாளுக்கு ஆராய்ச்சில இரங்கி கதிகலங்க அடிச்சிட்டாங்ய... இதுல உச்சகட்டமா ஒரு ஆளு எழுதுறாரு பாருங்க "அது ஒரு பெண் புலி... தாய்மையின் அடையாளம்.. ஒரு தாய் தன் கண்முன் ஒரு குழந்தை அடிபடுவதை தாங்க முடியாமல் எப்படி காப்பாற்றுவாளோ அப்படித்தான் அந்த இளைஞனை காப்பாற்ற முயன்றது..." (நீங்கல்லாம் எங்கேந்துடா கெளம்புறீங்க... முடியல....) உண்மையில அது ஒரு ஆண் புலி.. பேரு விஜய்... (நம்ம யங் டளபதி இல்லப்பா) புலின்னு இல்ல, நம்ம வீட்டுல இருக்குற நாய், பூனை கூட தன் எல்லைக்குள் இருக்குற பொருளை யாராச்சும் எடுக்க வந்தா அல்லது கல்லால அடிச்சா, தூக்கிட்டு ஓடும்... காரணம்.. "நிம்மதியா இருக்க உடமாட்டீங்களாடா சனியன் புடிச்சவனுங்களான்னு" அர்த்தம்... எல்லாரும் கல்லால அடிச்சப்போ அந்த புலியும் அதையே தான் செஞ்சிச்சு.. ஒரே வித்தியாசம் புலி தன் குட்டிகளைக் கூட கழுத்தைப் பற்றி தான் தூக்கும்.. அப்படி அந்த இளைஞனைத் தூக்குனப்போ அதனுடைய 3 இன்ச் நீளமுள்ள பல் (Canine) கழுத்துல இரங்கி செத்துட்டான்...


இவங்யள சொல்லிக் குத்தமில்ல... நமக்கு நம்ம பக்கத்துல இருக்கிற விலங்குகளப் பத்தியே சரியாத் தெரியாது.. பாலம் கட்டும்போது ராமருக்கு அணில் எளநி ஊத்திக் குடுத்துச்சு.. ஓணான் ஒண்ணுக்கு ஊத்திகுடுத்துச்சுனு சொல்லி அத கல்லால அடிக்க்கிற பரம்பர தான நாம...

நமக்கு தமிழ் சினிமா சொல்லிக் குடுத்த விலங்கியல் கல்வியே நாய்னா "ராஜா", குரங்குன்னா "ராமு", பாம்புன்னா "நாகராஜா", யானைன்னா "வெள்ளிக்கெழம ராமசாமி"... அதுங்க என்னடா செய்யும்???னா... ஹீரோயினுக்கு வளையல் வாங்குறது, வில்லன் ஷூவுக்குள்ள தேள வைக்கிறது, கிளைமாக்ஸ் பைட்டுல நெருப்புக்குள்ள பாஞ்சு சண்ட போடுறது... இதெல்லாம் தான்...

பொதுவா நம்ம ஊருல ஒரு வீட்டுல‌, இந்த வாரம் Zooக்கு போகலாம்னு முடிவு செஞ்சாங்கன்னா, மொதல்ல செய்யிர வேலையே ஒரு தூக்கு வாளி நெரைய புளி சாதமோ இல்ல பிரியாணியோ கட்டுறது தான்... அப்புரம் ரெண்டு ஷட்டில்காக் மட்டையும் ஒரு ஜமுக்காள‌மும் எடுத்துக்கிறது... பத்து பத்தரைக்கா கெளம்பி, அப்டியே போயி ஜமுக்காளத்த விரிச்சு புளிசோத்த ஒரு கட்டு கட்டிட்டு.. மிச்ச சோத்த அங்கேயே கொட்டிட்டு... ரெண்டு ரவுண்டு ஷட்டில் ஆடிட்டு... மதியம் ஒரு ரெண்டு மணிக்காட்ட புலியையும் சிங்கத்தையும் தேடிப் போனா, உச்சி வெய்யில்ல அதது உள்ளார தூங்கிகிட்டு இருக்கும்...

அப்புற‌ம் மத்திய மாநில அரசுகள நடவடிக்கை எடுக்கச் சொல்லிட்டு வந்துருவோம்... குரங்கு இருக்குற எடத்துல நானும் உன் சொந்தக்காரப்பயதான்ற மாதிரி உர்ர்ருனு கத்துறது... அது திரும்பலைன்னா கல்லக் கொண்டு அடிக்கிறது... புதுசா கெளம்பியிருக்கிற ஃபோட்டோ மோகத்துல  அதப் புடிச்சி பப்ளிகுட்டி பண்ணிக்கிறதுண்ணு நமக்குன்னு ஒரு தனி அஜெண்டாவே உண்டு... இந்த போட்டோ கிருக்கு முத்தி சமீபத்துல ஒரு ஆளு பூங்காவுல இருந்த ஒரு ஊழியர கரெக்ட் பண்ணி ஜாகுவார் கூண்டுக்குப் போயி கையக் கால இழுத்து போட்டோ புடிச்சது மட்டுமில்லாம Facebook ல பப்ளிகுட்டி பண்ணப்போயி போலிசுல மாட்டி கம்பி எண்ணுற அளவுக்கு போயிருச்சு...


இது ஒரு பக்கம் இருக்கும்போது, பூங்காக்கள்ள இந்த விலங்குகளப் பராமரிக்கிற ஊழியர்கள் பண்ணுற அலப்பறை இன்னும் அதிகம்... காச வாங்கிகிட்டு கண்டவனையும் விலங்குகளின் தனியறைக்குள் விடுவது... பூங்காக்கள்ல இருக்குற சந்தன மரங்கள வெட்டிவித்து மாட்டிகிறது, சமீபத்துல.. ஒரு சிம்பன்சிய தப்பிக்க விட்டு அதுக்கப்புறம் அத வெளக்கமாத்தால அடிச்ச‌து (நெஜந்தாங்க)... இப்படி அடுக்கிகிட்டே போகலாம்...

இந்தியாவுல 164 உயிரியல் பூங்காக்கள் (Central Zoo Authority of India accredited)  இருந்தாலும் WAZA அப்டிங்கிற "World Assocciation of Zoos and Aquariums"அங்கீகாரம் பெற்ற பூங்காக்கள் வெறும் நாலே நாலு தான்... இவ்வளவு பெரிய துணைக்கண்டத்துல நாலு பூங்காக்களுக்கு உலக அங்கீகாரம் வாங்கவே முக்கவேண்டி இருப்பதற்கு காரணங்களே நாம மேல பார்த்த விழிப்புணர்வின்மை, சரியான பராமரிப்பின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்.. இது மூணும் தான்....

சரி Zooவுல அப்டி என்னத்த பண்ணணும்?? என்ன பண்ணலாம்??

Zooக்கள் அமைக்கப்படுவதன் நோக்கமே 3 காரணங்களுக்காக, Creating Awareness, Captive Breeding, Introduction of new blood lines. இதுல முதல் காரணமான விலங்குகள் மற்றும் அதன் சுற்றுச் சூழல் மேலான விழிப்புணர்வை வளர்ப்பது...

  • உதாரணத்திற்கு, நமது உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற‌ Leopard, Cheetah, Jaguar இந்த மூன்று புள்ளிப்புலிகளையும் நாம சொல்றது சிறுத்தைன்னு தான்..  பார்வைக்கு ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் உடலமைப்பிலும், வேட்டையாடும் முறை, அவை வசிக்கும் சூழலும் முற்றிலும் வேறானவை... Leopard ஆசிய மலைக்காடுகளிலும், Cheetah ஆப்பிரிக்க சமவெளிகளிலும், Jaguar தென்னமெரிக்க மழைக்காடுகளிலும் வசிப்பவை. இந்த வேறுபாடுகளையும், அவற்றின் சூழலையும் பாக்க வர்ர பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
  • வெள்ளைப் புலியையும், கருஞ்சிறுத்தையயும் பார்த்து வெறுமனே ஆச்சர்யப் படாமல் அவைகளின் தோலின் நிறமி மாற்றத்தால் ஏற்படும் melanism மற்றும் albinism பத்தி பசங்களுக்கு சொல்லித் தரலாம்.
  • பார்வைக்கு மான்னு தெரிந்தாலும் உருவ அமைப்பில் வேறுபாடு கொண்ட Deer மற்றும் Antelope பற்றிய வேறுபாடுகளை சொல்லித்தரலாம்...
என்னய்யா எல்லாமே பள்ளிக்கூடத்து பசங்களுக்கா சொல்ற, பூங்காவுக்கு சின்னப்பய மட்டுமா போறான்ன்னு கேக்குற ஆட்களுக்கு நாம தெரிஞ்சுக்கவும் ஏராளம் இருக்கு...

  • மொதல்ல எந்த சமயத்துல Zooக்கு போகணும்னு தெரிஞ்சுக்கணும்... அதிகாலை 08:30 - 10:30 அல்லது மாலை 4 முதல் போகலாம்.. இந்த நேரத்தில் அவை சுறுசுறுப்பாக இயங்கும். மதிய நேரத்துல போனா அவைகள் ஓய்வு எடுக்கும். (அப்புறம் மத்திய மாநில அரசுகளத் தான் திட்டணும்).
  • ரொம்ப அடிப்படையா ஒரு விலங்கு எந்தப் பகுதியை சேர்ந்தது, அதன் உணவுப் பழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம். Zooக்களில் அவற்றின் அடிப்படையான உணவுப் பழக்கவழக்கதைப் பொருத்து தான் உணவு கொடுப்பாங்க.. குரங்கினங்களுக்கு பழங்கள் மற்றும் வெள்ளரி, மான், மிளா, காட்டெருமை போன்ற தாவர உண்ணிகளுக்கு தீவனப்புல்லும், தவிடும், நரி, செந்நாய், ஓநாய் போன்ற சிறிய ஊனுண்ணிகளுக்கு கோழி இறைச்சி, புலி, சிங்கம் போன்ற பெரிய ஊனுண்ணிகளுக்க்கு மாட்டிறைச்சி, கரடிகளுக்கு பூச்சிகள் மற்றும் தேன், சிறிய பாம்புகளுக்கு எலிகள், ராஜநாகத்திற்கு உணவாக சிறிய பாம்புகள், பறவைகளுக்கு தானியங்கள் இப்படி நிரைய இருக்கு.. 
  • இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசியப் பறவை மயில்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம்மில் ரொம்ப பேருக்கு தெரியாத விஷயம், அதே போல ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில விலங்கும் பறவையும் கூட உண்டு அப்டிங்கிறது... உதாரணத்துக்கு தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு, கேரளத்திற்கும், கர்நாடகாவுக்கும் இந்திய யானை, ஆந்திராவுக்கு கிருஷ்ண ஜிங்க்கா என்கிற மானினம், தெலுங்கானாவுக்கு புள்ளிமான்...

  • இந்தியாவில் ஒரே ஒரு உயிரியல் பூங்காவில் மட்டுமே உள்ள அறிய வகை வெளிநாட்டு உயிரினங்கள் உண்டு... உதாரணத்துக்கு "வண்டலூரில் மட்டுமே உள்ள "European Brown Bear" மற்றும் "Pygmy Hippo", மைசூரில் மட்டுமே உள்ள "Brazilian Tapir", "Madagascar Meerkat", மற்றும் "Savannah Bat Eared Fox", ஒரிசாவின் நந்தன் கானனில் மட்டுமே உள்ள "Orangutan", டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் மட்டும் உள்ள பாகிஸ்தானின் தேசிய விலங்கு "Markhor", ஐதராபாத்தில் மட்டுமுள்ள "Galapagos tortoise" மெகா சைஸ் ஆமை.
  • உலகிலேயே ஒரு உயிரியல் பூங்காவின் பெயரில் ஒரு விரைவு ரயில் வண்டி இயங்குவது இந்தியாவில் தான்... அது ஒரிசா மாநிலத்தின் பூரி நகரிலிருந்து புதுதில்லி வரை செல்லும் 'நந்தன் கானன் விரைவு வண்டி".
இப்படி எழுதிகிட்டே போகலாம்... இதெல்லாம் எழுதும்போது ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்... Zoo ல உச்சக்கட்டமா ஒரு அக்கப்போர் பண்றாங்யப்பா... தப்பித் தவறிக்கூட எந்தப் புதர்கிட்டயும் போயிடாதீங்க... ஜோடி ஜோடியா உள்ளேந்து வர்ராங்ய... நம்ம வீட்டு வாசல்ல ரெண்டு நாயோ அல்லது கழுதையோ ஒண்ணா இருந்தா "ச்சீ சனியனுங்களா வீட்டு வாசல்ல வந்து மோந்துகிட்டு அலையிதுங்க பாரு.."னு கல்லத்தூக்கி அடிப்போம்... அதே வேலைய ஆறாம் அறிவு இருக்கிற நம்மாளுங்க அதுங்க வீட்டு வாசல்ல (Zoo ல) பண்றது தான் நான் சொன்ன உச்சக்கட்ட அசிங்கம்...


பேச்சு மொழி மட்டும் இருந்தா அந்த விலங்குகளும் இதையே சொல்லித்தான் நம்மை திட்டும்...

"என்னம்மா..... இப்படி பண்றீங்களேம்மா!!!!!!!!"

No comments:

Post a Comment