Saturday, September 10, 2016

அது ஒரு "பாப்" காலம்

நேத்து டிவில பிஸ்தா படத்துல வர்ற "அழகு புயலா அல்ட்ரா மாடர்னா" பாட்டு பாத்திட்டு இருந்தேன்.. மைண்டு அப்படியே பின்னோக்கி போயிடிச்சு.. இந்த படம் வந்த புதுசுல சன் டிவி திரைவிமர்சனம் ல இந்த பாட்டப் பத்தி "நீங்க வழக்கமா மெலடி தானே பண்ணுவீங்க.... இது எப்படின்னு?" கேள்விக்கு "நான் பாப் ஆல்பம் எல்லாம் பண்ணிருக்கேங்க.. அதனால அதெல்லாம்.. ஈஸியா வந்துருச்சு.." அப்படின்னு பதில் சொன்னாரு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.. இன்னிக்கு தேதி வரைக்கும் நானும் அந்த ஆல்பத்தை தேடிட்டே இருக்கேன் கிடைக்க மாட்டேங்குது...

அவரு போட்டது இருக்கட்டும்... 90 களின் மத்தியில தமிழ்நாட்டுக்கே புதுசா ஒரு ஜுரம் வந்தது.. அது தான் "பாப்" ஜுரம்.. அதாவது பாப் பாடல்கள் அல்லது அந்த வகையைச் சேர்ந்த தனிப் பாடல்கள்னு நாம இதை வச்சுக்குவோம்.. சரியா சொல்லனும்னா 1995ல வெளிவந்து சக்கைப்போடு போட்ட "Alisha Chinay" யின் "Made In India" தான் இதுக்கு  பிள்ளையார் சுழி.. ஸ்கூல், காலேஜ் னு எங்க ஆண்டு விழா நடந்தாலும் "Made In India" தான்..

அதுக்கு அடுத்த ஆண்டு வெளிவந்த "Hariharan - Lesle Lewis" ஜோடியின் "Colonial Cousins" ஆல்பம் ரெண்டாவது பெரிய காரணி... முதன்முதலா "டாடா காப்பி" விளம்பரத்துல தான் அதை நம்மாளுங்க கேட்டாங்க... "கிருஷ்ணா நீ பேகனே"ல ஆரம்பிச்சு ஆங்கில வரிகள் ல தொடரும் வித்யாசமான கலப்பிசை... ஆல்பம் பயங்கர ஹிட்.. அத்தோட நாம சும்மா இருக்க மாட்டோமே... இறங்கினாங்கப்பா நம்மாளுங்க தமிழ் பாப் பாடல்களோடு களத்துல... அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு என்னென்ன எல்லாம் நடந்ததுன்னு பாப்போம்...

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கால இசை ரசனை மற்றும் சூழல் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சிக்கிறது நல்லது.. 80களின் கிராமியப் பின்னணி படங்கள் மாறி 90களின் காலேஜ் பின்னணிப் படங்கள் வெற்றிகரமா ஓடிட்டு இருந்தன.. ராஜா தன்னோட "Peak Period" முடிந்து அவரது அடுத்த கட்டத்துக்கு போயிருந்தார்.. 92ல ரகுமானின் வருகை நிறைய புதிய இசை ரசனையை (மேற்கத்திய கலப்பிசை) ஏற்படுத்தி இருந்தது.. அதே மாதிரி இளையராஜா பாணியிலே ஜெராக்ஸ் அடிச்ச தேவாவும் இதே 95ல வெளிவந்த ஆசை படத்து மூலம் வேறு இசை வடிவத்துக்கு தன்னை மாத்திக்கிட்டாரு.. தூர்தர்ஷனே கதின்னு இருந்த தமிழனுக்கு 93-94ல சன் டிவி, ராஜ் டிவி ன்னு ரெண்டு புதிய சேனல்களும் அதன் புதிய விளம்பர யுக்திகளும் ஏற்படுத்திய ஈர்ப்பு முக்கியமான ஒரு மாற்றம்... இந்த சூழல்ல தான் நான் சொன்ன தமிழ் பாப் பாடல்கள் வரிசை கட்டின... அதுக்கு பெரும் பங்கு "ராஜ் டிவி யில் முக்கால் வாசி நேரம் வந்த அவற்றின் விளம்பரங்கள்.."

1987லேயே தமிழில் பாப் ஆல்பம் வரத்தொடங்கி விட்டதாக இணையத்தில் சில தகவல்கள் கிடைக்கின்றன... என் நினைவுக்கு எட்டிய வரை சன் மியூஸிக்கில் 1995/96ல் வெளிவந்த பாப் பாடல் "Philip - Jerry" இரட்டையர்களின்  "Dance Natyam" ஆல்பத்தில் உள்ள "Banana Boat" தான் முதல் ஹிட் ... அரை நிஜாரும் தலையில் தொப்பியுமாய் இவர்கள் ஆடும் விஷுவல் அடிக்கடி அப்போது ஒளிபரப்பாகும்...

இதே காலகட்டத்தில் இந்த தமிழ் பாப் இசை அலையின் இரண்டு முக்கிய நபர்களின் ஆல்பங்கள் வெளி வந்தன.. ஒன்று 13 வயதில் பாப் ஷாலினி பாடி வெளியிட்ட "ஷாலினி" என்கிற ஆல்பம்.. மற்றொன்று "சுரேஷ் பீட்டர்ஸ் பாடி வெளிவந்த "மின்னல்"... இரண்டும் செம ஹிட்.. மின்னலில் "இது வானம் சிந்தும் ஆனந்த கண்ணீர்", வா மானே வா தேனே ரெண்டும் நிறைய முறை கேட்டிருக்கிறேன்.. இதில் ரெண்டாவது பாட்டை , பின்னாளில் தான் இசையமைத்த "கூலி" படத்தில் "பூப்பூவா பூப்பூவா" என்று மீண்டும் பயன்படுத்திக் கொண்டார் சுரேஷ் பீட்டர்ஸ்..

1997 தமிழ் பாப் இசையில் தமிழ் நாட்டையே கலக்கிய 4 ஆல்பங்கள் வெளிவந்தன.. முதலாவது.... மால்குடி சுபா பாடிய "வால்பாறை வட்டப்பாறை"..... மொத்தம் 10 டிராக்குகள் என்றாலும் டைட்டில் டிராக் இன்றும் பாப்புலர்.. (இந்த பாட்ட கேக்கும் போது "என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா" எதுக்கு எனக்கு நியாபகம் வருது??? ) எஸ்.எஸ். மியூஸிக்கில் அடிக்கடி வரும்... (திமிரு ஹீரோயின் ஷ்ரியாவுக்காகவே எஸ்.எஸ்.மியூசிக் பார்த்த காலம் அது... ம்ஹ்ஹ்ஹம்ம்ம்.. இப்போ ஷ்ரியாவுக்கெல்லாம் வயசாகி இருக்கும்)

இரண்டாவது... ஹிந்தியில் ஹரிஹரன் பாடி வெளிவந்த காதல் பாடல்களை தமிழில் வைரமுத்துவின் வரிகளில் மொழிபெயர்த்து வெளிவந்த "காதல் வேதம்".. இரண்டே நாட்களில் இதன் எட்டுப் பாடல்களையும் வைரமுத்து எழுதி இருக்கிறார்..

"இருதயம் இடம் மாறித் துடிக்கும் வலது புறத்திலே" ,

"மலையும் நதியும் நிலவும் ஒருநாள் மறையும்
 காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு".. இந்த இரண்டும் அடிக்கடி ராஜ் டிவியில் விளம்பரங்களில் வரும்.. எட்டுமே மெலடி ரகம் தான்..

மூன்றாவது.... அன்று புதுமுகங்களாக இருந்து இன்று பிரபலங்கள் ஆகி இருக்கும் ஆறு பேர் சேர்ந்து உருவாக்கிய "டான்ஸ் பார்ட்டி" என்கிற பாப் ஆல்பம்.. 15 நிமிடத்துக்கு ஒரு முறை ராஜ் டிவியில் விளம்பரம் வரும்.. யுகேந்திரன் பாடிய "சொல்லித்தரவா.. கற்றுக்கொள்ளவா", அனுராதா ஸ்ரீராம் பாடிய "உயிரின் உயிரே", தேவிஸ்ரீ பிரசாத் பாடிய "ஜிங்கி சிக்கிச்சாரோ", எஸ்.பி.பி.சரண் - தேவன் ஏகாம்பரம் குரல்களில் "மல்லிகைப் பூவில் நடனமாடிடும்", ஏற்கனவே "ஷாலினி" பாப் ஆல்பத்தில் அவர் பாடி வெளிவந்த "மாமா உன் புள்ளை இல்லையா", மற்றும் பிரவீண் என்பவர் பாடிய "காரைக்குடி கறம்பக்குடி கல்லக்குடி" என்று ஆறு பாட்டு.. இதில் பிரவீன் என்பவர் மட்டும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.. மற்றவர்கள் ஆளுக்கு 15 பாட்டாவது சினிமாவில் பாடிவிட்டார்கள்..

நான்காவது.. தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவையே.. ஏன் உலக அளவில் பிரசித்தி பெற்ற "வந்தே மாதரம்".. "பரத் - பாலா - கனிகா" தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "அங்கும் இங்கும்" ஒன்று மட்டும் தான் தமிழ்ப் பாட்டு என்றாலும் இந்திய சுதந்திர பொன்விழாவை ஒட்டி வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய தனிப்பாடல் தொகுப்பு என்று ஆணித்தரமாக சொல்லலாம்... நஸ்ரத் பதே அலிகான் பாடிய "சந்தா சூரஜ்" (போறாளே பொன்னுத்தாயி மெட்டில்) சூபி மற்றும் மேற்கத்திய கலப்பிசை வடிவத்தை தமிழக கிராமங்களிலும் அறிமுகப் படுத்தியது...

"பாய்ஸ்" படத்தில் "ஆல்பம் போடறதுன்றது என்ன ஆப்பம் போடுற மாதிரி அவ்வளவு ஈஸின்னு நெனச்சியாடா"னு விவேக் கேட்பாரே... உண்மையில்  இந்த நான்கு முக்கிய ஆல்பங்களும் ஏற்படுத்திய அதிர்வில் ஆளாளுக்கு ஆப்பம் போடுற மாதிரி வரிசை கட்டி வெளியிட்டார்கள்..

டான்ஸ் பார்ட்டி ஹிட் அடிக்க அதில் பாடிய "எஸ்.பி.பி.சரண் - தேவன்" ஜோடி தனியாக "கம்பன் ஒரு கண்ணிலே" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார்கள்.. "கம்பன் ஒரு கண்ணிலே.. காளிதாசன் நெஞ்சிலே" என்று ஒன்று மட்டும் நினைவிருக்கிறது.. மற்றதெல்லாம் கொட்டாவி விடும் ரகம் தான்..

"எதிரும் புதிரும்" படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" என்று டான்ஸ் பாடல் பாடிய புஷ்பவனம் குப்புசாமி அதில் பயங்கர இம்ப்ரெஸ் ஆகி "அடியாத்தி டான்ஸ் டான்ஸ்" என்று ஒரு பாப் ஆல்பம் வெளிட்டார்.. தூக்கு தூக்கி படத்தில் ஜி.இராமநாதன் இசையமைத்த "ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு" பாடலை தாளத்தை மட்டும் மாத்தி

"காக்கா இல்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கயிலே
கண்ணுறங்கும் வேளையிலே கண்டேன் கண்டேன் கனவு ஒண்ணு"

என்று பாடுவார்.. என்ன பாடினாலும் இவரது குரல் அப்பட்டமாக கிராமிய மணத்துடனே ஒலிக்கும்.. அடுத்த வரிகளில்

"மந்திரியா இருக்கச் சொல்லி.. என்ன மத்தியிலே அழைச்சாங்க
வெள்ள வேட்டி இல்லையின்னு வேணாமுன்னு சொல்லிப்புட்டேன்"

என்று போகும்..

இன்று சட்டசபையில் "நீங்க நல்ல இருக்கோணும்" என்று பாடி சங்கீத சபையாக ஆக்கிக் கொண்டிருக்கும் திருவாடானை சமஉ "கருணாஸ்" 90களின் மத்தியில் "ஷாக்" என்றொரு பாப் ஆல்பம் வெளியிட்டார்.. ஆனால் "தெம்மாங்கு", "கானா", என்று பலபட்டறையாக இருந்ததால் தொடர்ந்து இவர் பாப் இசையில் நிறைய பாடவில்லை..

"சன் டிவியின் தமிழ் மாலை"க்கு பின்னணி இசை அமைத்த "ஆகோஷ்" (ஆனந்த் - கோபால் ராவ் - ஷலீன் ஷர்மா) 1997ல் "Come on India" என்று சங்கர் மகாதேவனை வைத்து ஒரு ஆல்பம் இந்தியில் வெளியிட்டார்கள்.. அப்போதைய உலக கோப்பைக்கு அதை புரோமோ பாடலாக மாற்றி காச்சிகுடா ரயில்வே ஸ்டேஷனில் "கமான் இந்தியா" என்று அவர் பாடுவதை விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருந்தனர்.. இந்திப் பாடலாக இருந்தாலும் கிரிக்கெட் ஜுரத்தில் தமிழ் நாட்டிலும் நன்கு ரீச் ஆகியது... ( ஓயாமல் கமான்.. கமான் என்று அழைத்ததாலோ என்னவோ "வங்கதேசம், இலங்கை இருவரிடமும் மரண உதை வாங்கி முதல் சுற்றிலேயே இந்திய ஊர் திரும்பியது...)

"மின்னல்" வெற்றிக்கு பிறகு சுரேஷ் பீட்டர்ஸ் பாடி வெளிவந்த மற்றொரு ஆல்பம் "காத்திருப்பேன்"... "எந்நாளும் அன்பே உன்னை எண்ணி காத்திருப்பேன்" என்றொரு பாடல் இப்போதும் நினைவிருக்கிறது..

ராஜீவ் மேனன் தயாரித்து வெளிட்ட "உஸ்ஸெலே உஸ்ஸெலே" மற்றொரு வெற்றிகரமான ஆல்பம்.. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், டிம்மி குரல்களில் டைட்டில் பாடல் இப்போதும் யூ டியூபில் கிடைக்கிறது.. உன்னிகிருஷ்ணன் பாடிய "எப்போ வருவாரோ", சுஜாதா பாடிய "மழையே" என்று ஆல்பம் முழுக்க நிறைய ஜிலீர் பாடல்கள்...

மில்லீனியத்தை ஒட்டி இசையமைப்பாளர் ஆதித்யன், அப்போது அவரது அப்பரசண்டியாக இருந்த டி.இமான் மற்றும் பாடகர் சோலார் சாய் இவர்கள் மூவர் குரல்களில் "அக்சர் அதிரடி" என்று ஒரு ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிட்டனர் "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்று கைகளில் கிதாரோடு கண்ணனை துரத்திக் கொண்டு ஓடுவது மாதிரி ஒரு விஷுவல் ராஜ் டிவியில் வரும்.. பாகவதர் பாடிய இந்தப் பாடல் உட்பட 14 பாடல்களை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள்...

இதன் தொடர்ச்சியாக 2005ல் "யோகி. பி" மற்றும் "நட்சத்திரா" இணைந்து "வல்லவன்" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டனர்.. "மடை திறந்து தாவும் நதியலை நான்" பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள்... இதற்கு பிறகு சினிமாவிலேயே போதும் போதும் என்று கதறும் அளவுக்கு அடுத்த மூன்று நான்கு வருஷங்களுக்கு ஒரு பாட்டு விடாமல் ரீமிக்ஸ் செய்து தான் ஓய்ந்தார்கள்...

திடீரென ஆரம்பித்த இந்த பாப் அலை திடீரென காணாமல் போய் ரீமிக்ஸ் என்கிற வேறு அலை வந்தது...

இப்போதும் தமிழ் பாப் ஆல்பங்கள் புற்றீசல் போல வந்துகொண்டே இருக்கின்றன.. ஆனால் 90களின் மத்தியில் இருந்த ஈர்ப்பு இல்லை..
இன்டர்நெட் யுகத்தில் சின்ன மொபைலை வைத்து ஒரு சினிமாவே எடுக்கும் காலத்தில் இப்போது பாப் ஆல்பம் என்பது ஒரு பெரிய விஷமேயில்லை...

கடைசியாக ஒரு "Disclaimer" இதில் நித்தி கனகரத்தினம், இ.ஏ.மனோகர் இவர்களின் பாடல்களைத் தேட வேண்டாம்.. சிலோன் பைலா என்பது தனி இசை வடிவமாதலால் அதை இந்த ஆங்கில தமிழ் கலப்பில் வெளிவந்த தமிழ் பாப் பாடல்களில் சேர்க்கவில்லை... அதே போல நான் ஏற்கனவே சொன்னது போல 90களின் மத்தியில் தொடங்கி ஓங்கி வீசிப் பின் ஓய்ந்து போன ஒரு அலையைப் பற்றிய பருந்துப் பார்வை இது... அவ்வளவே!!!!

No comments:

Post a Comment