Saturday, September 17, 2016

கல்யாணத் தேன் நிலா!!

அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர்.. அடுத்த ஆண்டு தனது சினிமாத் துறையின் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறவர்.... எம்.ஜி.ஆர் பாடல்கள் மூலம்  பிரபலமாகி பின்னர் இளையராஜா சங்கர் - கணேஷுடன் கால் நூற்றாண்டு ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கியவர்... எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் காலம் தொட்டு ஜி.வி.பிரகாஷ் காலம் வரையில் சற்றேறக்குறைய 1000 பாடல்கள் எழுதிய ஒரு உன்னதமான சினிமா கவிஞர்... யார் அவர் ????

மக்கள் திலகத்தின் "குடியிருந்த கோயில்" படத்திற்கு பாடல் எழுத அந்தக் கவிஞருக்கு அழைப்பு வருகிறது... யார் யாரோ வந்து எழுதிப்பார்த்து சரிவராத பாடல்... எழுதத் தொடங்கினார்... "நான் யார்?.. நான் யார்?.. நீ யார்?" ... கேள்வியுடன் தொடங்குகிற பல்லவி... பாடல் முழுவதும் கேள்விகள் தான்...

"உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?" 

என்று பாடலில் மொத்தம் 73 வார்த்தைகள் "ஆர்" விகுதியில் முடியும்.. சின்னவருக்கு பாடல் பிடித்துப் போக அன்றே பாடல் பதிவு... அதிலிருந்து வரிசை கட்டி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதினார்... உதாரணத்திற்கு சில சூப்பர் ஹிட் பாடல்கள் :



  • ஆயிரம் நிலவே வா  - அடிமைப்பெண் 
  • எங்கே அவள் எங்கே மனம் - குமரிக்கோட்டம் 
  • பூமழை தூவி வசந்தங்கள்  - நினைத்ததை முடிப்பவன் 
  • பாடும் போது நான் தென்றல் காற்று  - நேற்று இன்று நாளை 
  • நீங்க நல்லா இருக்கோணும்  - இதயக்கனி 
  • சிரித்து வாழ வேண்டும்  - உலகம் சுற்றும்  வாலிபன்
  • ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க
  • இந்த பச்சை கிளிக்கொரு  - நீதிக்கு தலைவணங்கு 
  • நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை 
  • நாளை உலகை ஆளவேண்டும் - உழைக்கும் கரங்கள்
  • ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்
  • உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன் 


எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த இறுதிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (தென்றலில் ஆடும் கூந்தலில்) பாடல்கள் எழுதி இருக்கிறார்.. எம்.ஜி.ஆர் நடிச்சு கடைசியா வெளிவந்தது பாக்யராஜோட "அவசர போலீஸ்" ஆச்சேன்னு யாராவது கெளம்புனீங்கன்னா.. அதுலயும் "நீ நெனச்சதும் மழையடிக்கணும்" பாட்டு இவர் எழுதினது தான்..

எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு, 80 களில்  இளையராஜா  இவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்... குறிப்பாக  எண்பதுகளின் மத்தியில் மனிதர் படு பிசியாக  இருந்திருக்கிறார்... உதாரணத்துக்கு அந்த கால கட்டத்தில் இவர் எழுதிய பாடல்களில் கொஞ்சூண்டு...



  • கூ கூ என்று குயில் - காதல் பரிசு
  • கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு - காக்கி சட்டை
  • நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் ("நெலா அது" பாட்டைத் தவிர மற்ற அனைத்து பாடல்களும் இவர் எழுதியது )
  • ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
  • அமுதே தமிழே அழகிய மொழியே - கோயில் புறா 
  • காற்றோடு குழலின் நாதமே - கோடை மழை 
  • புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
  • மாலைக் கறுக்கலில் சோலைகருங்குயில் - நீதியின் மறுபக்கம்
  • தாழம்பூவே  வாசம் வீசு - கை கொடுக்கும் கை
  • செவ்வந்தி  பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள் (பானுப்ரியாவின் முதல் தமிழ் படம்)
  • உச்சி  வகுந்தெடுத்து பிச்சிப்பூ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
  • விழியிலே மணிவிழியில் மௌனமொழி - நூறாவது நாள் 
  • நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் - முந்தானை முடிச்சு
  • ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை - தங்கமகன்
  • வெண்மேகம் மண்ணில் வந்து - நான் சிகப்பு மனிதன்...


1980ல் வெளிவந்த "கண்ணில் தெரியும் கதைகள்" படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள்.. அதில் ராஜாவின் இசையில் "நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்" எழுதியவர் இவர் தான்

இளையராஜாவுடன் மட்டுமல்ல சங்கர் - கணேஷோடு பொன் அந்தி மாலைப்பொழுது (இதயவீணை), பட்டுவண்ண ரோசாவாம் (கன்னிப் பருவத்திலே), அழகிய விழிகளில் (டார்லிங் டார்லிங் டார்லிங்), சங்கத்தில் பாடாத  கவிதையை (ஆட்டோ ராஜா), பனிவிழும் பருவ நிலா (பன்னீர் நதிகள்), மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) (ஏறத்தாழ 200 படங்கள் ஷங்கர் கணேஷுடன் பணி செய்திருக்கிறார்)...

சந்திரபோஸுடன்  "என்ன கத சொல்லச் சொன்னா (அண்ணா நகர் முதல் தெரு)" .. பாக்யராஜுடன் "பச்சமல சாமி ஒண்ணு (இது நம்ம ஆளு)"... ரவீந்திரன் மாஸ்டருடன் "பாடி அழைத்தேன் (ரசிகன் ஒரு ரசிகை) என்று மற்ற இசை அமைப்பாளர்களுடன் நீளுகிறது பட்டியல்

90களில் மாறிய இசைவடிவத்துடன் இவரது வெற்றிப் பாடல்கள் தொடர்கின்றன :


  • அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
  • கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம் (மொத்தம் 38 "லா"க்கள் கொண்டு முடியும் பாடல் வரிகள்)
  • மழை வருது மழை வருது - ராஜா கைய வச்சா
  • விழியின் வழியே நீயா வந்து போனது - சிவா 
  • மணமாலையும் மஞ்சளும் சூடி  - வாத்தியார் வீட்டு பிள்ளை
  • வாசக் கறிவேப்பிலையே - சிறையில் பூத்த சின்னமலர்
  • உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி  - பணக்காரன்
  • சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா - அழகன்
  • தத்தித்தோம் - அழகன்
  • மெதுவா தந்தி அடிச்சானே - தாலாட்டு
  • எதிலும் இங்கு இருப்பான் - பாரதி
  • ஆத்தோரத்திலே ஆலமரம் - காசி


இந்நேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்... இவர் கண்ணதாசனல்ல... வைரமுத்துவல்ல... தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்... ஆனால் இவர் கவிஞர் முத்துலிங்கமும் இல்லை..  இவர் ஒரு "Octogenarian" ஆனால் இவர் பஞ்சு அருணாசலமும் அல்ல.. இரண்டு முதல்வர்களோடு நெருங்கிய அரசியல் தொடர்புடையவர்...  எம்.ஜி.ஆர்- சிவாஜி முதல் விக்ரம் - சூர்யா வரை நான்கு தலைமுறை கண்ட கவிஞர்... தொடர்ந்து படியுங்கள்...

90 களுக்கு பிறகு மாறிய புதிய இசை அலைகளில் இவர் பங்களிப்பு முந்தைய காலகட்டங்களை போல இல்லை என்றாலும் யுவன் இசையில் "எங்கெங்கோ கால்கள் போகும் பாதையில் - நந்தா", ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "அழகு நிலவே - பவித்ரா தேவா இசையில் "ஒரு கடிதம் எழுதினேன் - தேவா" என்று கிடைத்த வாய்ப்பிலெல்லாம் நிறைவான பாடல்கள் தந்திருக்கிறார்... எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் என்று தொடர்ந்து சமீபத்திய "தெறி" படத்தில் "தாய்மை வாழ்க" பாடல் வரை நீள்கிறது இவரது இசைப்பயணம்...

எழுதிய பாடல்களில் 90 % மெல்லிசைப்பாடல்கள் தான்... அதிலும் இவரது சிறப்பு இலக்கிய நயத்துடன் பாடல்கள் எழுதுவது ... அவற்றையும் கொஞ்சம் அலசுவோம்....

மரகதமணியின் இசையில் அழகன் படத்தில் அனைத்துப் பாடல்களும் இவர் தான்.. அதில்
தனது மானசீக குருவான பாவேந்தரின் "குடும்ப விளக்கு" சாயலில் "சாதிமல்லிப் பூச்சரமே" பாடல் எழுதி இருப்பார்...

எனது வீடு எனது வாழ்வு 
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே 
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல 
ஒன்றுதான் 
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் 
ஒன்றுதான் 
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது

என்னும் வரிகள்... பாவேந்தரின்

"தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் தானுண்டு இவையுண்டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்" 

என்பதன் லைட் வடிவம்...

"தத்தித்தோம்... வித்தைகள் கற்றிட தத்தைகள் சொன்னது தத்தித்தோம்...
தித்தித்தோம்... தத்தைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்... "

காளமேகப் புலவரின் சித்திரக் கவியான

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி" யின் Inspiration.

"வாசக் கறிவேப்பிலையே" பாடலில்

"உடம்போ தங்கத்துல வார்த்தது போல
உதடோ முள்முருங்க பூத்தது போல" 

என்று எழுதி இருப்பார்.. இது குற்றாலக் குறவஞ்சியில்

"திருந்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும். இதழினாள் 
வரிச்சிலையைப் போல்வளைந்து 
பிறையைப் போல் இலங்கு நுதலினாள்" 

என்று வசந்தவல்லியை வர்ணித்து திரிகூடராசப்பர் எழுதியதன் சினிமாட்டிக் வடிவம்... (பூமுருக்கு - பூ முருங்கை / முள் முருங்கை )

"குழலைப் பார்த்து முகிலென மயில்கள் நாணும்"... 

"அதோ மேக ஊர்வலம்" பாடலின் சரணத்தில் வரும் இந்த வரிகளின் மூலம் "சிறுபாணாற்றுப்படையில் இருக்கிறது...

"நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,             
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன்           
மயில், மயிற் குளிக்கும் சாயல்" 
(விறலியரின் கூந்தலை மயில்கள் மழைமேகம் என்று கருதியதாக வரும் பாடல்)

நீ ஒரு காதல் சங்கீதம்... நாயகன் படத்தில் வரும் இந்தப் பாடலின் சரணத்தில்

"பூவைச் சூட்டும் கூந்தலில் - எந்தன் 
ஆவியை ஏன் நீ  சூட்டுகிறாய் " 

என்று கவிதை மழை பொழிந்திருப்பார்... 

"முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்" 

என்று கலிங்கத்துப்பரணி கடைதிறப்பு பகுதியில் வரும் பாடலின் சாரம் தான் இது....

தன் மனைவியின் பெண்மை மீது விழுந்த களங்கத்தை மனதில் சுமந்து கொண்டு "வட்டக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க..." என்று செம்பட்டை கதாபாத்திரம் பாடுவதாய் அமைந்தவை... சொல்லவந்ததை சொல்லாமல் வேறு ஒன்றை சொல்லும் "பிறிதுமொழிதல் அணி" என்னும் இலக்கிய இலக்கணம்...

"பூமழை தூவி வசந்தங்கள்" பாடலின் சரணத்தில்

"வெண்சங்கு கழுத்தோடு பொன்மலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா? 
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது
என்றாடும் விதமல்லவா..." என்னும் வரிகள் 

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனின் கொடி அசைந்தது கோவலனை வராதே என்னும் விதமாக அசைந்தது போல் இருந்ததாக இளங்கோவடிகள் "தற்குறிப்பேற்ற அணியாக"

"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 
வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட"

என்று எழுதிக் காட்டியதைப் போல தங்கையின் கழுத்தில் ஆடும் மணிகள் "அண்ணனை மறவேன்" என்று தலையசைப்பதாக தனக்கு தோன்றியதாக எழுதி இருப்பார்..

அதுவே "தங்கை தன் அண்ணனை மறவேன்" என்று நாம் எடுத்துக் கொள்ளும் விதமாகவும் "எம்.ஜி.ஆர்... அண்ணாவை நான் மறவேன்" என்று பாடுவதாய் நாம் எடுத்துக் கொள்ளுமாறும் "இரட்டுற மொழிதலாய்" எழுதி இருப்பார்....

சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை இலக்கிய திறன் இவர்  பாடல்களில்.... இவர் வரிகளிலேயே சொல்வதென்றால் இவரது  புலமையைக் கண்டு

"உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்.. இன்னும் என்ன சொல்ல? "

சரி 80 வயது.. எம்.ஜி.ஆர். இளையராஜா என்றெல்லாம் சொன்னதை வைத்து இவர் கவிஞர் வாலி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. இவர் வாலியும் அல்ல (பரம நாத்திகர்).... 4 முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருது, அரசவைக் கவிஞர் பட்டம் பெற்றவர்.. அதுமட்டுமல்ல தமிழக சட்டப்பேரவையின் (மேலவை) முன்னாள் துணை சபாநாயகர்.... அண்ணா திமுக உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர்... அந்தக் கட்சியின் அவைத்தலைவராக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தவர்...

அவர் வேறு யாருமல்லர்... பேரூர் தமிழ்க்கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, சென்னை சாந்தோம் பள்ளியில் எம்.எஸ்.வியின் பிள்ளைகளுக்கு தமிழ் வாத்தியாராக இருந்து பின் நான் முதல் பத்தியில் சொன்ன "குடியிருந்த கோயில்" திரைப்படம் மூலம் பாடலாசிரியர் ஆன..... தலை, மீசை, உடை, சிரிப்பு என்று எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும்

"புலவர் புலமைப்பித்தன்"...... 


நான் மீண்டும் மீண்டும் வியந்து போகும் ஒரு விஷயம் "இலக்கியத்திறன், அரசியல் தொடர்பு, படவாய்ப்புகள், வெற்றிகரமான பாடல்கள்" இவை அனைத்தும் இருந்தும் இவரது சமகாலத்தவர்களான வாலி - வைரமுத்துவை போல இவர் பெயர் அந்த அளவுக்கு பிரபலம் அடையாதது ஏன் ? என்பது தான்... காலம் எப்போதுமே புரிபடாதது....

2 comments: