Saturday, October 15, 2016

ஒரு சாதனை இயக்குனரின் நினைவலைகள்!!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்.... இந்த நான்கு பேரும் தமிழ் சினிமாவின் நான்கு சகாப்தங்கள்... இந்த நான்கு சகாப்தங்களையும் தமிழ் சினிமாவில் இயக்குகிற பெருமையை பெற்றவர்கள் தமிழ் சினிமா வரலாற்றில் யார் யார் ??... தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதிய பாலச்சந்தர் இறுதிவரை எம்.ஜி.ஆரை இயக்கவில்லை... மூத்த இயக்குனர்களான ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா இவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்த வாய்ப்பினை பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் 3 பேர் மட்டுமே..

ஒருவர் புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.. சிவாஜியை வைத்து "நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண்", எம்.ஜி.ஆரை வைத்து "உரிமைக்குரல், மீனவ நண்பன், அண்ணா நீ என் தெய்வம்", ரஜினி - கமலை வைத்து "இளமை ஊஞ்சலாடுகிறது" என்று ஹிட் படங்களை கொடுத்தவர்... இரண்டாமவர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் உடன்பிறந்த சகோதரர் எம்.ஏ.திருமுகம்... "எத்தனை எம்.ஜி.ஆர் படங்கள் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்...".. தேவர் மறைவுக்கு பிறகு சிவாஜியை வைத்து "தர்மராஜா" என்று ஒரு படம் எடுத்தார்.. அதே போல ரஜினியை வைத்து "எல்லாம் உன் கைராசி" என்று ஒரு படம்.. நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை.. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடிக்க மாணவன் என்று ஒரு படம் இயக்கினார்.. அதில் தான் 14 வயது கமல் முதன்முதலாக ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடினார்... இந்த இருவரைத் தவிர மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார்... ஆனால் 4 நட்சத்திரங்களுக்கும் தெறிக்கவிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர்... .

எம்.ஜி.ஆருக்கு 'இதயக்கனி", சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "வெள்ளை ரோஜா", இன்றளவும் ரஜினியின் "அலெக்ஸ் பாண்டியன்" போலீஸ்  ஆபிசர் கெட்டப் தூக்கி வைத்து பேசப்படும் "மூன்று முகம்" , கமலின் போட்டி நடனங்களோடு கூடிய கமர்ஷியல் ஹிட் "காதல் பரிசு" என்று  அவரவர்  பாணியிலேயே ஹிட் கொடுத்தவர்..  இது தவிர ரஜினி, கமல், சிவாஜி இந்த மூவருக்கும் வேறு படங்களும் இயக்கி உள்ளார்.. என் நண்பர்களிடம் இவரைப் பற்றிக் கேட்டபோது பலருக்கும் இவரது பெயரை சொன்னதும் தெரிந்திருக்கவில்லை... அதற்காகவே இந்த பதிவை எழுதத் தீர்மானித்தேன்...20 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 50 படங்களை இயக்க்கிய முக்கியமான இயக்குனர் அவர்...

ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர் இந்த இருவரைத் தவிர அந்த காலத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், பாலாஜி மற்றும் ஸ்ரீகாந்த்.. இவர்கள் அனைவரையும் வைத்து படங்கள் இயக்கிவர்.. அதே போல அதற்கு அடுத்த தலைமுறையில் "சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் , சுதாகர்" இவர்களையும் அதற்கு அடுத்த சூப்பர் சிக்ஸில் கார்த்திக் தவிர மற்ற 5 பேர் ( "ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்") படங்களையும் இயக்கிவர்... தியாகராஜன், பாண்டியராஜன், சுருளிராஜன், ராமராஜன், அர்ஜுன், ரகுமான், சரத்குமார்  என்று இவரது இயக்கத்தில் நடித்த இரண்டாம் வரிசை நாயகர்கள் பட்டியலும் பெருசு....சரி யார் அந்த இயக்குநர்??


தினத்தந்தியில் உதவி ஆசிரியராக இருந்தவர் அவர்.... பின்னர் இயக்குனர்கள் டி.பிரகாஷ் ராவிடமும், 17 எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய ப.நீலகண்டனிடமும் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்' என்று ப.நீலகண்டன் எடுத்த படங்களில் எல்லாம் இவர் உதவி இயக்குனர்.. டி.பிரகாஷ் ராவ் எடுத்த படகோட்டியில் இணை இயக்குனர்..  இந்த வகையில் எம்.ஜி.ஆரின் வலது கரமான ஆர்.எம்.வீரப்பனின் தொடர்பு அவருக்கு கிடைத்தது...

அதன் மூலம் 1973ல் ஆர்.எம்.வீ தயாரித்த "மணிப்பயல்" படத்தை முதன் முதலாக இயக்கும் வாய்ப்பை பெற்றார்.. "அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா" பாட்டு திராவிட இயக்கத்தினர் இன்றும் கொண்டாடும் பாட்டு.. முதல் காட்சியை சென்னை மிட்லண்ட் தியேட்டரில் துவக்கி வைத்து இவரை பாராட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்..

அப்போதே அடுத்த எம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது.. அது தான் நான் மேலே சொன்ன இதயக்கனி படம்...

அந்த இயக்குனர் திரு.ஏ.ஜெகந்நாதன்.



ஜெகந்நாதன் படங்களை பார்த்தால் இவர் அந்தக்கால கே.எஸ்.ரவிகுமாராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது... "சினிமாத்தனமான" என்று நாம் எதை சொல்லுகிறோமோ அது அத்தனையும் இவர் படங்களில் இடம்பெற்றிருக்கிறது.... கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் டிஷ்யூம் டிஷ்யூம் (சிவாஜியே சண்டை போட்டிருக்காருப்பா இவர் படத்துல), கொஞ்சம் ஹியூமர், டான்ஸ், பன்ச் வசனங்கள், ஜெயமாலினியோ சிலுக்கோ அந்த அந்த காலத்துல பிரபலமான ஐட்டம் டான்சர்ஸ் என்று கலந்துகட்டி அடிக்கிற படங்களாகவே இருந்திருக்கின்றன... நடிக்கின்ற ஹீரோவை பொறுத்து அவரது தனிப்பட்ட மசாலாவும் இதில் சேரும்.. அவர் முதன்முதலாக இயக்கிய ஏ.வி.எம்.ராஜன் படத்திலிருந்து (மணிப்பயல்) கடைசியாக இயக்கிய ராமராஜன் படம் வரை (மில் தொழிலாளி) இதே பார்முலா தான்... உதவி இயக்குனராக கிட்டத்தட்ட 15 படங்கள் எம்.ஜி.ஆருடன் பணிசெய்ததால் இந்த கமர்ஷியல் வேல்யூ பார்முலா அவருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும்...

எம்.ஜி.ஆரைப் போலவே இவரும் இசைஅமைப்பாளரிடம் ( எம்.எஸ்.வி முதல் தேவா வரை யாராக இருந்தாலும் ) பாடல்கள் வாங்குவதில் படுகில்லாடி.. இவரது படங்களில் வந்த பாடல்களை பார்த்தாலே தெரிகிறது.. உதாரணத்திற்கு கொஞ்சூண்டு...


  • அண்ணா அண்ணா அண்ணா - (மணிப்பயல் / எம்.எஸ்.வி)
  • இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - (இதயக்கனி / எம்.எஸ்.வி)
  • நீங்க நல்லா இருக்கோணும் - (இதயக்கனி / எம்.எஸ்.வி) 
  • யானையின் பலம் எதிலே  - (இதயம் பார்க்கிறது - டி.ஆர்.பாப்பா)
  • கன்னிராசி என் ராசி..  - (குமார விஜயம் / தேவராஜன் மாஸ்டர்)
  • இனங்களில் என்ன இனம் பெண்ணினம் - (நல்ல பெண்மணி / வி.குமார்)
  • நந்தா நீ என் நிலா - (நந்தா என் நிலா / வி. தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்)
  • தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் - (மூன்று முகம் / சங்கர்- கணேஷ் )
  • மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - (முதல் இரவு / இளையராஜா)
  • ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் - (தங்கமகன் / இளையராஜா)
  • பூமாலை ஒரு பாவை ஆனது - (தங்கமகன் / இளையராஜா)
  • ஓ மானே மானே மானே - (வெள்ளை ரோஜா / இளையராஜா )
  • சோலைப்பூவில் மாலைத் தென்றல் (வெள்ளை ரோஜா / இளையராஜா)
  • ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் (கொம்பேறி மூக்கன் / இளையராஜா )
  • வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது (நாளை உனது நாள் / இளையராஜா )
  • கூகூ என்று குயில் கூவதோ (காதல் பரிசு / இளையராஜா)
  • காதல் மகராணி கவிதை (காதல் பரிசு / இளையராஜா )
  • காலகாலமாய் பெண் தானே கற்பூரதீபம் (கற்பூரதீபம் /கங்கை அமரன் )
  • கன்னத்தில் கன்னம் வைத்து (வாட்ச்மேன் வடிவேலு / தேவா)


இவரிடம் அதிகப் படங்கள் நடித்த கதாநாயகர்கள் என்றால் விஜயகுமாரும் சிவகுமாரும் தான்... தலா 6 - 7 படங்கள்... ஹீரோயின்களில் முதல் 10 ஆண்டுகளில் சுமித்ராவும் இரண்டாவது 10 ஆண்டுகளை அம்பிகாவும் பங்குபிரித்து கொள்ளுகிறார்கள்.. கே.எஸ்.ரவிக்குமாருக்கு மீனா மாதிரி இவருக்கு அம்பிகா.. 10 வருடங்களுக்குள் இவரது ஒரு டஜன் படங்கள் நடித்திருக்கிறார்.. தேங்காய் சீனிவாசன் இவரது படங்களில் நிறைய நடித்திருக்கிறார்.. ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது..

காதல் பரிசுக்கு பிறகு இவருக்கு பெரிய ஹிட் படங்கள் என்று ஏதும் அமையவில்லை ... ஜீதேந்திராவை வைத்து வெள்ளை ரோஜாவை ஹிந்தியிலும் டைகர் பிரபாகரை வைத்து கன்னடத்திலும் எடுத்தார்... அர்ஜுனை வைத்து என் தங்கை, ராமராஜனை வைத்து மில் தொழிலாளி, ஆனந்த் பாபுவை வைத்து வாட்ச்மேன் வடிவேலு , "ஈரமான ரோஜாவே" சிவாவை வைத்து அர்ச்சனா ஐ.ஏ.எஸ் என்று எதுவும் இவருக்கு கைகொடுக்காமல் போக சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்... தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் மீது தீவிர பற்று உடையவர் ஜெகந்நாதன்.. கமலை வைத்து உ.வே.சா பற்றி ஒரு படம் எடுக்க வேண்டுமென்பது அவரது கனவாக இருந்திருக்கிறது... அது சில காரணங்களால் கைகூடாமல் போகவே 13 வாரத் தொடராக ஏ.வி.ரமணனை வைத்து தூர்தர்ஷனில் இயக்கி இருக்கிறார்..

ஏ.ஜெகந்நாதன் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் :


  • கவிஞர் வாலி கதை, திரைக்கதை,வசனம் எழுதி தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி நடிப்பில் "அதிர்ஷ்டம் அழைக்கிறது என்று ஒரு படம் இயக்கினார் இவர்.. அதில் இவரிடம் சின்னச்சாமி என்ற இளைஞர் உதவி இயக்குனராக இருந்தார்.. அந்த சின்னச்சாமி அடுத்த வருடம் இயக்குநராகி எடுத்த படம் தேசிய விருதை அள்ளியது... அந்த சின்னச்சாமி தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா..
  • ஒரே நாளில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியானதுண்டு.. ஆனால் ஒரே நாளில் (1983 தீபாவளி) ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெள்ளி விழா கொண்டாடியது முதன்முதலாக இவர் படங்கள் தான் (சிவாஜி பிலிம்ஸின் "வெள்ளை ரோஜா", சத்யா மூவிஸ் "தங்கமகன்")
  • நடிகர் திலகம் சிவாஜி நடித்த படத்துக்கு "இந்தப் புலி" புகழ் டி.ஆர் இசையமைத்திருக்கிறார் தெரியுமா உங்களுக்கு???? ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன்,அம்பிகா நடித்த "முத்துக்கள் மூன்று" படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் டி.ராஜேந்தர்.
  • ஜெகந்நாதன் இயக்கிய இரண்டாவது படம் "இதயம் பார்க்கிறது".. இது தான் நடிகர் ஜெய்சங்கரின் 100வது படம்
  • மலேசிய நடிகர் "பிரேம்" இவர் இயக்கத்தில் தான் "குரோதம்" படத்தில் அறிமுகம் ஆனார்.. 100 நாள் கொண்டாடிய இந்த படத்தில் சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் 5 இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் இது... படத்திற்கு கதை எழுதியது "பிரேம்", திரைக்கதை எழுதியவர்கள் "இயக்குனர்கள் மணிவண்ணனும், ஆர்.சுந்தர்ராஜனும், வசனம் எழுதியவர் உதயகீதம், கீதாஞ்சலி படங்களை இயக்கிய கே.ரங்கராஜ்... இயக்கம் ஏ.ஜெகந்நாதன்
  • ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய மூன்று முகம் தான் இன்றுவரை ரஜினி நடித்த ஒரே மூன்று வேடப் படம்.. 
  • மூன்று முகம் படத்தில் ஹீரோ ஒரே தவ்வில் மேலே பறந்து சென்று மூன்று நான்கு ரவுடிகளை உதைத்துவிட்டு கீழே வரும் ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.. பின்னாளில் "சீறிவரும் காளை" படத்தில் ராமராஜன் போட்ட மேட்ரிக்ஸ் பைட்டை நினைத்துக் கொள்ளுங்கள்...
  • எம்.ஜி.ஆரை வைத்து இதயக்கனி இயக்கிய ஒன்றரை ஆண்டில் அவர் முதல்வர் ஆகிவிட்டதால் அவரை வைத்து மேலும் படங்கள் இயக்க முடியவில்லை.. அதன்பின் 1981ல் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி.சுகுமாரை வைத்து நடிகன் குரல் என்ற படத்தை இயக்கினார் ஏ.ஜெகந்நாதன்.. ஆனால் சில காரணங்களுக்காக அந்தப் படமும் வெளிவரவில்லை


2012 அக்டோபரில் தனது 78வது வயதில் ஜெகந்நாதன் அவர்கள் மறைந்து விட்டார்.. இருபதாண்டு காலம் 4 சகாப்த நடிகர்கள் உட்பட ஏராளமான நடிகர்களை இயக்கி வெற்றி படங்களை தந்த இயக்குனரை நம்மில் பலருக்கு தெரியாதது ஆச்சர்யமே..

No comments:

Post a Comment