Saturday, October 22, 2016

அமுதைப் பொழியும் நிலவு!!!

பொன்னிநதி பாயும் சோழவளநாட்டுக்கு இன்றைய பெயர் டெல்டா மாவட்டம்... வயலெல்லாம் நெல்லாக 'நெல்'டா மாவட்டமாக விளங்கும் அதன் இடுப்பில் இருக்கிற சிறுநகரம் மன்னார்குடி..

ஆயிரம் ஆண்டு பழமையான ராஜகோபாலஸ்வாமி திருக்கோயிலும் 22.5 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ரா நதி'யையும் தன்னகத்தே கொண்ட "மதிலழகு" மன்னார்குடி, உணவோடு சேர்த்து உணவு அமைச்சர்களையும் ( மன்னை நாராயணசாமி, ஆர். காமராஜ் ) தமிழகத்துக்கு சப்ளை செய்யும் ஊர்..

அரசியல் மட்டுமன்றி கலைவளர்த்த பெருமையிலும் கணிசமான பங்கு மன்னையம்பதிக்கு உண்டு..ஒரு பெரிய்ய்ய லிஸ்ட் ... குறிப்பாக  மோகமுள், அம்மா வந்தாள், சக்தி வைத்தியம் போன்ற நூல்களை எழுதிய சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் "தி.ஜா", ஆயிரம் திரை கண்டு கின்னஸ் சாதனை செய்த "ஆச்சி மனோரமா" இவர்கள் எல்லாம் மன்னார்குடி "Products" தான்...



மன்னார்குடி நகரில் இருந்து 10 கல் தூரத்தில் இருக்கிற சிற்றூர் வேளுக்குடி... அங்கு 1920ல் பிறந்து கலை, அரசியல் இரண்டிலும் முத்திரை பதித்த ஒருவர் தான் இந்தப் பதிவின் நாயகர்.

சிலம்புச் செல்வர்  ம.பொ.சி அவர்களது தலைமையில் 'தமிழரசுக் கழகம்' என்ற அரசியல் கட்சி அற்றை நாளில் தமிழக எல்லை மீட்பு போராட்டம், தலைநகர் பெயர்மாற்றப் போராட்டம் போன்றவற்றை முன்னெடுத்தது... இயக்குனர் ஏ.பி.நாகராஜன், கவிஞர்கள் கா.மு.ஷெரிப், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாசிரியர் சின்ன அண்ணாமலை உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து எல்லைமீட்பு போராட்டத்தில் சிறைசென்ற மொழிப்போர் தியாகி அவர்.. பின்னாளில் தி.மு.க வோடு கூட்டணி ஏற்பட 1974 - 1980 வரை தமிழக சட்டமன்ற (மேலவை) உறுப்பினராக இருந்தவர்.

ஏ.வி.எம் மில் வசனகர்த்தவாக இருந்து, பேரறிஞர் அண்ணா கதை வசனத்தில் உருவான 'ஓர் இரவு' படத்தில் புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே' என்கிற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.. அதன் பிறகு எழுதிய பாடல்கள் சில நூறை எட்டும்... எடுத்து வாசித்தால் எழுத்துக்கு எழுத்து இனிமை கொட்டும்... அவர் தான் கு.மா.பா என்று அழைக்கப்படுகிற கலைமாமணி கு.மா.பாலசுப்ரமணியம்... குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம்.. (இவர்களது மூதாதையர்கள் குறிச்சியில் இருந்து வேளுக்குடிக்கு குடி பெயர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது )



 "Aesthetic Sense" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் (அழகுணர்ச்சி).. அதற்கு சிறந்த உதாரணங்கள்  இவரது பாடல்கள்.. உதாரணத்திற்கு சில...

  • உன்னை கண்  தேடுதே - கணவனே கண்கண்ட தெய்வம் 
  • அமுதை பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் 
  • இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்
  • சித்திரம் பேசுதடி.. எந்தன் சிந்தை மயங்குதடி - சபாஷ் மீனா
  • காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா
  • ஏமாறச் சொன்னது நானோ.. என்மீது கோபம் தானோ - நானும் ஒரு பெண் 
  • கனவின் மாயா லோகத்திலே.. நாம் கலந்தே உல்லாசம்  காண்போமே - அன்னையின் ஆணை
  • மாசிலா நிலவே நம் காதலை - அம்பிகாபதி 
  • மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் - மகாகவி காளிதாஸ்
  • மதனா எழில் ராஜா நீ வாராயோ - செல்லப்பிள்ளை 


"நிலவுக் கவிஞர்" என்றே சொல்லலாம் இவரை... அத்தனை பாடல்கள் வெண்மதி மீது இயற்றி இருக்கிறார்.

மெல்லிசைப் பாடல்கள் மட்டுமின்றி துள்ளலான நடையை உடைய பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தவர்  கு.மா.பா.... உதாரணத்திற்கு
  • யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
  • குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே - மரகதம் (ஜெ.பி.சந்திரபாபுவின் ஹிட் பாடல்)
  • ஆடவாங்க அண்ணாத்தே - சக்கரவர்த்தி திருமகள்
  • அஞ்சாத சிங்கம் என் காளை - வீரபாண்டிய கட்டபொம்மன் 

அரசிளங்குமரி, திருடாதே, தெய்வத்தின் தெய்வம், யானை வளர்த்த வானம்பாடி, குழந்தைகள் கண்ட குடியரசு  கோமதியின் காதலன்,  மரகதம், சித்தூர் ராணி பத்மினி, ஸ்கூல் மாஸ்டர்,  இன்ஸ்பெக்டர், நல்ல தீர்ப்பு உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதியவர்...

ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஏ.ராமராவ், கே.வி.மஹாதேவன், எஸ்.எஸ்.வேதா என்று ஏராளமான இசையமைப்பாளர்களிடம் எழுதி இருந்தாலும் ஒரு  கட்டத்தில் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்...

வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா ஆகிய படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவர்தான்... அதே போல மஹாகவி காளிதாஸ், கொஞ்சும் சலங்கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை - வசனமும் எழுதி இருக்கிறார்...

"சாந்தா.. ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்... உன் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடிவந்த என்னை ஏமாற்றாதே... பாடு சாந்தா..பாடு.." புகழ்பெற்ற இந்த வசனம் கு.மா.பாவின் வரிகள்.. அதை தொடர்ந்து காருகுறிச்சியாரோடு சேர்ந்து எஸ்.ஜானகி இசைத்த "சிங்காரவேலனே தேவா" பாடலை எழுதியதும் இவர் தான்...


'மந்திரமாவது நீரு' என்கிற ஞானசம்பந்தர் தேவாரப் பாடலுக்காக போட்ட மெட்டு... பின்னர் சிங்கார வேலனே தேவா என்று கு.மா.பா  எழுதிக் கொடுத்திருக்கிறார்...

சினிமாவில் இலக்கிய லட்சணங்களோடு பாடல்களை எழுதியவர் கு.மா.பா...
ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர், யாப்பு பிழறாது  கவிதைகளை எழுதக்கூடியவர்... மகாகவி காளிதாஸ் படத்தில் நோயுற்ற தாயை குணமாக்க காளிதாசன் பாடுவதாக

சின்னையா என்றழைத்த செங்கனிவாய் மூடியதோ
உண்ணைய்யா என்றெடுத்து ஊட்டியகை வாடியதோ
அன்னையாள் கொண்ட அவலமிதை காண்பதற்கோ
கண்ணையான் பெற்றுள்ளேன் காளி

என்கிற இன்னிசை வெண்பாவும்

பூவில் இடம்கொள்ளப் போதாமல் என்னுடைய 
நாவில் இடம்கொண்ட நாயகியே - நோவில்
முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்து
நடக்கத் தருவாய் நலம்

என்கிற நேரிசை வெண்பாவும் எழுதி இருப்பார்...

அதே போல போஜராஜன் அவையில் காளிதாசன் பாடுவதாக 'கட்டளைக் கலித்துறையில்'   விளையாடி இருப்பார்.. ஒவ்வொரு அடியிலும் 16 எழுத்துக்கள் (ஒற்றெழுத்துக்களை கணக்கில் கொள்ளக் கூடாது) .. கடைசி வரியின் இறுதிச் சீர் "ஏ"காரத்தில் முடிய வேண்டும்... (எழுத்துக் கூட்டவே  மூச்சு வாங்குது.. இந்த மனுஷர் சர்வ சாதாரணமா பாடிப்புட்டாரு )

தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே...

பாரதியார் எழுதிய 'ராதைக் கண்ணியை' அடியொற்றி "காதலென்னும் சோலையிலே ராதே ராதே' என்று சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எழுதியிருப்பார்... (பின்னாட்களில் "வாது சூது தெரியாத மாது கண்ணா" என்று எதிர்நீச்சல் படத்தில் வி.குமார் இதை உல்டா அடித்திருப்பார்).

பாவேந்தர் பாரதிதாசன் மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்திருக்கிறார்.. ஒருமுறை பாவேந்தர் சினிமாவுக்கு எழுதிய பாடலை  திருத்துமாறு இவரைக் கேட்டவர்களிடம் "அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" என்று மறுத்திருக்கிறார்

60 களின் பிற்பகுதியிலும் 70 களிலும் இவரது பங்களிப்பு குறைவாக இருந்திருக்கிறது கண்ணதாசன், வாலி, மருதகாசி மூன்று பேருமே அப்போதைய பாடல்களின் பெரும்பகுதியை எழுதி இருக்கிறார்கள்.... இவரது அரசியல் பங்களிப்பும், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு வாலியும், கண்ணதாசனும் ஆஸ்தான கவிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்...

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  80 களின் தொடக்கத்தில் "தூரத்து இடிமுழக்கம்" என்ற படத்தில் சலீல் சௌதுரி இசையில் அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார்.... "உள்ளமெல்லாம் தள்ளாடுதே" என்ற பாடல் இனிமையான ஒன்று... இவர் இறுதியாக பாடல் எழுதியது கங்கை அமரனின் இசையில் "கனவுகள் கற்பனைகள்" என்ற படத்துக்காக.....

1994ம் ஆண்டு கு.மா.பா மறைந்த போது அவருக்கு வயது 74.காலத்தால் அழியாத பாடல்களை எழுதி தமிழ் சினிமாவின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக திகழ்கிறார் கு.மா.பா என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை... இதில் ஆச்சர்யமான விஷயம் இந்தப் பாட்டையெல்லாம் எழுதியது நம்ம ஊர்க்காரரா?? என்பது மன்னார்குடிக்காரர்களே  பலர் அறியாத விஷயம்!!!

1 comment: