Tuesday, October 11, 2016

மேகமே மேகமே பால்நிலா தேயுதே!!!

"காஷ்மீர் பிரச்சினை தீவிரமாக போயிகிட்டு இருக்கும் நேரத்தில் எதையோ காஷ்மீர் என்று யூ - டியூபில் தேடப் போன எனக்கு அல்வா மாதிரி ஒரு மேட்டர் கிடைத்தது.."

"கேஷ்மீர் பியூடிபுள் கேஷ்மீர்"... மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இந்த பாட்டுக்கு இசை அமைத்தது யாரு? (என்ன எம்.எஸ்.வி யா இருக்கும்... இல்லனா கே.வி.மகாதேவனா இருக்கும்)...

"மாசி மாசந்தான் கெட்டி மேளதாளம் தான்"... (அடுத்து இதுக்கு இசை யாருன்னு கேக்க போற... எங்களுக்கே தெரியும் இளையராஜான்னு)

சினிமா இசையைப் பொருத்த வரை நமக்கு ஒரு பொதுப்புத்தி உண்டு... 75 க்கு முன்பு வந்த பாடலா?? அது மெல்லிசை மன்னர்கள் பாட்டாகத்தான் இருக்கும்.. 75 - 90 மத்தியில் வந்த பாடலா?? அது நிச்சயம் இளையராஜாவின் பாட்டாகத்தான் இருக்கும் என்று... இந்த பொதுப்புத்தியின் விளைவால் அநேக இசைக்கலைஞர்களை நாம் சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டோம் என்பது நிதர்சனம்... ஒரே ஒரு உதாரணம்... யூ டியூபில் ஒரு பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன்... பாடலின் தொடக்கமே ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்வது போல இருக்கும்... பாடலை இசை அமைத்த இசையமைப்பாளர் தெளிவாக காட்சியில் தெரிகிறார்.. என்றாலும் கமெண்ட்ஸ் முழுக்க "ராஜா ராஜா தான்..." "ராஜா கடவுளின் இசை" என்று நீளுகிறது... நான் மேற்சொன்ன பொதுப்புத்தியின் விளைவு இது..

அந்த இசை அமைப்பாளர்கள்........ "இளையராஜாவுக்கு முன்பே ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த சங்கர் - கணேஷ் இரட்டையர்கள்".


சமீபத்தில் தான் இந்த 1000 பட விபரத்தை நான் அறிந்தேன்... என் பால்ய வயது நண்பர் ராஜசேகர் சொல்லிக்கொண்டே இருப்பார்... "நம்ம ஊர்ல கல்யாண மண்டபம் கட்டுறோம்.. சங்கர் கணேஷ் கச்சேரி வைக்கிறோம்யா" என்று... அப்போது சங்கர் கணேஷ் என்ன படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள் என்று கூடாது தெரியாது எனக்கு...

தனது குருவான சி.ஆர்.சுப்பாராமன் மறைவுக்கு பிறகு ஏழே வயதான அவரது தம்பி சங்கர்ராமனை தன்னுடனே வைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி... சென்னையில் பிறந்து இசையின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பலரிடம் இசை பயின்று (தன்ராஜ் மாஸ்டர் உள்பட) ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் எம்.எஸ்.வியிடம் பாங்கோஸ், டாம்போரின் போன்ற தாள வாத்தியங்களை வாசிக்க சேர்ந்தவர் கணேஷ்... பாசமலர், பாலும் பழமும், ஆலயமணி போன்ற படங்களில் வரும் பாடல்களில் பிரதானமாக ஒலிக்கும் பாங்கோஸ் கணேஷின் கைவண்ணம்...

"அவளுக்கென்ன அழகிய முகம்" பாடல் பார்த்திருக்கிறீர்களா?? எம்.எஸ்.வி கண்டெக்ட் செய்யும் போது முன்வரிசையில் கோட் சூட் அணிந்து ஒல்லியான ஒரு இளைஞர் பாங்கோஸ் வாசிப்பார்.. கவனித்து பாருங்கள் அவர் தான் கணேஷ்... இவருக்கும் சங்கருக்கும் அலைவரிசை ஒத்துப் போக இருவரும் சேர்ந்து இசையமைக்க ஆரம்பித்தனர்... கவிஞர் கண்ணதாசன் தயாரித்த "நகரத்தில் திருடர்கள்" தான் இவர்கள் முதன்முதலாக இசையமைத்தது... படம் வெளிவராமல் போகவே கண்ணதாசனே அடுத்த வாய்ப்பையும் வாங்கி கொடுத்தார்... அது தான்  1967ல் வெளிவந்த"தேவர் பிலிம்சின்"  "மகராசி" படம்... இந்த நன்றியறிதலுக்காக எப்போதும் டைட்டிலில் "கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் - கணேஷ்" என்றே போட்டுக் கொள்ளுவார்கள்...

மகராசி பாடல்கள் வெற்றிபெற தொடர்ந்து பல வெற்றிகரமான பாடல்களை இந்த இணை வழங்கியது... அவர்களது முதல் 5 ஆண்டுகளில் வந்த பாடல்களை பார்த்தால் அப்படியே மெல்லிசை மன்னரின் பாடல் போலவே தோன்றும்... உதாரணத்துக்கு சில :


  • உனது விழியில் எனது பாடல் (டி.எம்.எஸ், பி.சுசீலா - நான் ஏன் பிறந்தேன்)
  • நான் ஏன் பிறந்தேன்  (டி.எம்.எஸ் - நான் ஏன் பிறந்தேன்)
  • நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் (டி.எம்.எஸ் - நான் ஏன் பிறந்தேன்)
  • தேன்கிண்ணம் தேன்கிண்ணம் (பி.சுசீலா - தேன்கிண்ணம்)
  • செந்தாமரையே செந்தேன் இதழே (ஏ.எம்.ராஜா  - ஜிக்கி  - புகுந்த வீடு )
  • ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி (பி.சுசீலா - ராதா )
  • அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் (ராதா, ஜெயலட்சுமி - அம்மன் அருள் )
  • கேஷ்மீர் பியூட்டிபுள் கேஷ்மீர் (டி.எம்.எஸ் - இதய வீணை )
  • திருநிறைச்செல்வி மங்கையற்கரசி (டி.எம்.எஸ் - இதய வீணை )
  • பொன் அந்தி மாலைப்பொழுது (டி.எம்.எஸ், பி.சுசீலா - இதய வீணை)


முதல் 5 ஆண்டுகளுக்குள்ளேயே எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்ட இந்த ஜோடியின் நிஜமான வசந்த காலம் என்பது அடுத்து வந்த 10 ஆண்டுகள் தான் (அதாவது 70கள்)... 60 களில் எம்.எஸ்.வியின் பாணியில் பாடல்களை அமைத்த ஜோடி அதிலிருந்து மாறி புதிய இசை வடிவத்தை கையாளத் தொடங்கிய காலம் இது ...

தனது எல்லாப் படங்களையும் பாடல்பதிவுடன் தொடங்கும் வழக்கமுடைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆட்டுக்கிடாவை வைத்து "ஆட்டுக்கார அலமேலு" என்ற படம் எடுத்தார்... இசை சங்கர் கணேஷ்.. கம்போஸிங்கில் "பருத்தி எடுக்கையிலே என்ன பல நாளா பாத்த மச்சான்" என்று நாட்டுப்புற பாணியில் இரட்டையர்கள் போட்ட டியூனில் தேவர் எழுந்து ஆடி இருக்கிறார்...  அதுமட்டுமல்ல கண்ணதாசன் வராததால் இந்த பாடலை எழுதியவர் சாட்சாத் சாண்டோ சின்னப்ப தேவர் அவர்களே தான்... படம் வெள்ளி விழா கொண்டாட சங்கர் - கணேஷுக்கு மார்க்கெட் எகிரத் தொடங்கியது...



இந்தியில் வெளிவந்த "நாகின்" படத்தை ஸ்ரீப்ரியா தமிழில் "நீயா?" என்று எடுத்தார்.. இசை சங்கர் கணேஷ்... "தேரே சங் பியார் மே" தமிழில் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று கல்யாண்ஜி - ஆனந்தஜி போட்ட மூல மெட்டிலேயே ஒலித்தது என்றாலும் பாலு - வாணி குரல்களில் உள்ள நெளிவுகளில் பாடல் நெத்தியடி ஹிட்.. அதுமட்டுமல்ல சங்கர் - கணேஷ் போட்ட "நான் கட்டில் மேலே கண்டேன்", "உனை எத்தனைமுறை பார்த்தாலும்" பாடல்களும் செம ஹிட் அடித்தன... இந்த  காலத்தில் இவர்கள் இசை அமைத்த சில பாடல்களை சற்று பார்ப்போம் : (நாட்டுப்புற பாணி, மெல்லிசை, மற்றும் மேற்கத்திய இசை இந்த மூன்றிலுமே தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் இந்த இரட்டையர்கள் இசை அமைத்த பாடல்கள் இந்த தசாப்தம் முழுதும் விரவிக் கிடக்கின்றன)


  • ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் - (அடுக்குமல்லி )
  • ஆல...மரத்துக்கிளி  (பாலாபிஷேகம்)
  • காலைப்பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைபோலே (ராஜராஜேஸ்வரி )
  • பருத்தி எடுக்கையிலே (ஆட்டுக்கார அலமேலு )
  • ஆத்துலே மீன்புடிச்சு ஆண்டவனே உன்ன நம்பி (ஆட்டுக்கார அலமேலு)
  • இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் (உயர்ந்தவர்கள்)
  • உன்னை நான் பார்த்தது வெண்ணிலா  (பட்டிக்காட்டு ராஜா)
  • நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு (தாய் மீது சத்தியம்)
  • நடிகனின் காதலி நாடகம் ஏனடி (தாயில்லாமல் நானில்லை)
  • பட்டுவண்ண ரோசாவாம்  (கன்னிப் பருவத்திலே) 
  • அடி அம்மாடி சின்னப்பொண்ணு (கன்னிப் பருவத்திலே) 
  • நடைய மாத்து (கன்னிப் பருவத்திலே) 
  • ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை (என்னடி மீனாட்சி)
  • செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா (ஒத்தையடிப் பாதையிலே) மற்றும் நீயாவின் பாடல்கள் (ஏற்கனவே சொன்னவை)...


1980ல் வெளிவந்த கண்ணில் தெரியும் கதைகள் படத்திற்கு இசை அமைத்த 5 பேர்களில் இவர்களும் உண்டு "நான் ஒன்ன நெனச்சேன்.. நீ என்ன நெனச்ச" என்று மென்மையாக இவர்கள் இசைஅமைத்த பாடல் இன்றும் கேட்கும்போது மனதை வருடும் பாடல்...

இந்த பத்தாண்டுகளில் இறுதியில் இருந்து (1980ல் இருந்து ) இவர்களது இசை அமைப்பில் அப்போதைய வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த இளையராஜாவின் சாயல் தெரிய ஆரம்பித்தது...

1981ல் ராபர்ட் - ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் "பாலைவனச்சோலை".. முதன் முறையாக வைரமுத்து ஒரு படத்தில் அத்தனை பாடல்களும் எழுதிய படம்... சங்கர் - கணேஷ் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல் இந்த படத்தில் இடம் பெற்ற "மேகமே மேகமே பால்நிலா தேயுதே"... ஹிந்தி கஸல் பாடலின் அப்பட்டமான ரீமேக் ஆக இருந்தாலும் வாணி ஜெயராமின் ஆலாபனையுடன் தொடங்கும் பாடல் 35 வருடங்களாக இன்னும் வானொலியில் நேயர் விருப்பமாக இருக்கிறது.. அதிலும் இரண்டாவது இன்டெர்லூடில் வரும் சந்தூர் (வாசித்தவர் பின்னாளில் இசையமைப்பாளரான வித்யாசாகர்) மூலப் பாடலில் இருந்து பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும் அற்புதம்...

இந்த தசாப்தத்தின் முதல் 5 ஆண்டுகளை முதலில் பார்ப்போம்
  • தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி (விதி)
  • ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் (சிவப்பு மல்லி)
  • எரிமலை எப்படிப் பொறுக்கும் (சிவப்பு மல்லி)
  •  யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது (நெஞ்சமெல்லாம் நீயே)
  • தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் (சட்டம் ஒரு இருட்டறை)
  • வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை (வண்டிச்சக்கரம்)
  • அழகிய விழிகளில் அறுபது கலைகளும் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  • ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  • தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண் தான் (மூன்று முகம்)
  • என்னடி முனியம்மா உன் கண்ணுல மை (வாங்க மாப்பிள்ளை வாங்க)
  • பட்டுக்கோட்ட அம்மாளு (ரங்கா)
  • டூத் பேஸ்ட் இருக்குது பிரஷ் இருக்குது (ரங்கா)
  • எனைத்தேடும் மேகம் சபைவந்து சேரும் (கண்ணோடு கண்)
  • மழையே மழையே இளமை முழுதும் (அம்மா)
  • பனியும் நீயே மலரும் நானே (பனிமலர்)

இளையராஜா ஊடுகட்டி அடித்த 80களின் பிற்பாதியில் சங்கர் - கணேஷும் தன் பங்குக்கு வெளுத்துக் கட்டி இருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு சில :

  • மாசி மாசம் தான் கெட்டி மேளதாளம் தான் (ஊர்க்காவலன்)
  • மல்லிகைப் பூவுக்கு கல்யாணம் (ஊர்க்காவலன்)
  • கொண்டைச்சேவல் கூவும் நேரம் (எங்க சின்ன ராசா)
  • மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் (எங்க சின்ன ராசா)
  • மரகதவல்லிக்கு மணக்கோலம் (அன்புள்ள அப்பா)
  • சிட்டுக்குருவி தொட்டுத்தழுவி (வீரபாண்டியன்)
  • வெண்ணிலா முகம் பாடுது (ஜோதி மலர்)
  • ஜானகி தேவி ராமனை தேடி (சம்சாரம் அது மின்சாரம்)
  • கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்)
  • பனிவிழும் பருவ நிலா பரதமும் ஆடுதோ (பன்னீர் நதிகள்)
  • வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் (திருமதி ஒரு வெகுமதி)
  • மூங்கிலிலைக் காடுகளே முத்துமழை மேகங்களே (பெண்மணி அவள் கண்மணி)


மெல்லிசை மன்னர்களுக்கு பி.சுசீலா, இளையராஜாவுக்கு எஸ்.ஜானகி போல சங்கர் - கணேஷ் ஜோடிக்கு "வாணி ஜெயராம்".. ஆனால் மற்ற இருவருக்கும் இல்லாத சிறப்பாக வாணியை தமிழில் அறிமுகப் படுத்தியவர்கள் சங்கர் கணேஷ் தான்... (ஏற்கனவே எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் 1970ல் பாடி இருந்தாலும் படம் வெளிவரவில்ல்லை... 1973ல்  வெளிவந்த "வீட்டுக்கு வந்த மருமகள்" படத்தில் "ஓரிடம் உன்னிடம்" என்று டி.எம்.எஸ்ஸுடன் வாணி பாடிய பாடல் தான் முதலில் வெளிவந்தது) சங்கர் கணேஷின் வெற்றி பாடல்களை எடுத்துப் பார்த்தால் அதில் முக்கால்வாசிப் பாடல்களைப் பாடியவர் வாணி ஜெயராம் தான்.. (மேகமே மேகமே, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, அழகிய விழிகளில், கட்டிக்கரும்பே கண்ணா, மூங்கிலிலை காடுகளே, ஆலமரத்துக்கிளி, வெண்ணிலா முகம் பாடுது)..

70 - 80 களில் ரஜனி, கமல், விஜயகாந்த் படங்களுக்கு இசையமைத்த இந்த ஜோடி 90களில் ராம நாராயணனின் படங்களில் "ராமு, ராஜா, வெள்ளிக்கிழமை ராமசாமி, நாகராஜா" ஆகியோருக்கு இசை அமைக்கும் கட்டத்துக்கு போனார்கள் "தைப்பூசம், ஆடிவெள்ளி, ஈஸ்வரி, துர்கா, செந்தூரதேவி" என்று ஒரு வண்டிப் படங்கள்.. 93க்கு பிறகு இளையராஜாவே கிட்டத்தட்ட பீல்டு அவுட் நிலைமைக்கு போய்க்கொண்டிருந்த நிலையில் சங்கர் கணேஷின் படங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.. இந்த காலகட்டத்தில் இவர் கொடுத்த சில பாடல்கள்...


  • ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் (இதய தாமரை)
  • ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு (சந்தனக்காற்று)
  • பாப்பா பாடும் பாட்டு (துர்கா)
  • யக்கா யக்கா ஏலக்கா (செந்தூர தேவி)


1959ல் களத்தூர் கண்ணம்மாவின் குழந்தை கமலுக்கு "அம்மாவும் நீயே" என்று பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி 35 ஆண்டுகளுக்கு பிறகும் அதே மழலைக் குரலில் பேபி ஷாமிலிக்கு "யக்கா யக்க்கா" பாடல் பாடி இருப்பார்.. இவரைப்போல நிறைய பழைய பாடகர்களை மீண்டும் பயன்படுத்தியவர்கள் சங்கர் கணேஷ்... எம்.ஆர்.ராதாவின் கடைசி காலத்தில் " தர்மங்கள் சிரிக்கின்றன" படத்தில் இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமனை "போடா உலகத்தை தெரிஞ்சுக்க" என்ற பாடலையும், "வேலும் மயிலும் துணை" படத்தில் "மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்" என்று பெங்களூர் ரமணி அம்மாளையும், சஷ்டி விரதம் படத்தில் "துணைவன் வழித்துணைவன்" என்று மதுரை சோமுவையும் பாடவைத்திருப்பார்கள்....

சங்கர் கணேஷ் இசையின் மீது பெரும்பாலானவர்கள் சொல்லும் குறை என்ன என்றால் இவர்கள் பிறமொழிப் பாடல்களை நகலெடுப்பவர்கள் அல்லது அப்படியே பயன்படுத்திக் கொள்பவர்கள் என்பது... இதை முழுமையாக ஒதுக்கவும் முடியாது அப்படியே ஏற்கவும் முடியாது...  இவர்கள் பிறமொழிப் பாடல் சாயலில் அல்லது மெட்டில் இசையமைத்த சில பாடல்கள் உதாரணத்துக்கு :


  • தேவி கூந்தலோ பிருந்தாவனம் (என் ஆசை உன்னோடு தான்) - Turtles Happy Together என்ற பாடலின் சாயல்
  • மேகமே மேகமே (பாலைவனச்சோலை ) - "தும் நஹி ஹம் நஹி" என்னும் ஜக்ஜித் சிங்கின் கஸல் பாடலின் அட்டைக்காப்பி.
  • யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது (நெஞ்சமெல்லாம் நீயே) - "மே ஹவா ஹூன் கஹான்" என்னும் "அஹ்மது & மொஹம்மது ஹுசைன்" சகோதரர்களின் கஸல் பாடலின் சாயலில் அமைந்தது.
  • அவள் ஒரு மேனகை (நட்சத்திரம்) - தெலுங்கில் ரமேஷ் நாயுடு மூலப்படமான சிவரஞ்சனி படத்துக்காக போட்ட "அபிநவ தாரவோ" என்னும் பாடல்.. இயக்குனரின் விருப்பப்படி அப்படியே வைக்கப்பட்டது.
  • ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் (நீயா) - "நாகின்" ஹிந்தி படத்திற்காக கல்யாண்ஜி - ஆனந்தஜி போட்ட "தேரே சங் பியர் மே" பாடலின் மெட்டு, தமிழில் இயக்குனர் விரும்பியபடி அப்படியே இடம் பெற்றது.
  • சங்கத்தில் பாடாத கவிதையை (ஆட்டோ ராஜா) - "ஓலங்கள்" படத்துக்காக இளையராஜா இசையமைத்த "தும்பீ வா" பாடலின் மெட்டு.. இந்த பாடலின் மீது உள்ள அபிமானத்தில் இளையராஜாவிடம் கேட்டு பெற்று இடம்பெறச்செய்தார்கள் என்று கேள்வி.
  • சொர்க்கத்தின் வாசல் இங்கே (மங்கம்மா சபதம்) - மைக்கேல் ஜாக்சனின் "Billie Jean" பாடலின் சாயலில் அமைந்தது 


இப்படி நிறைய இருக்கிறது... இவை இவர்களது வளர்ச்சியின் மீது ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது... என்றாலும் இந்தப் பதிவு முழுக்க நாம் கண்ட ஏராளமான நல்லிசைப் பாடல்கள் சங்கர் கணேஷின் இசைச் சான்றுகளாகவே நமக்கு கிடைக்கின்றன...

சங்கர் கணேஷிடம் இருந்து மற்றவர்கள் சுவீகரித்த பாடல்களும் உண்டு.. அவற்றை நான் இங்கு சொல்லாவிட்டால் அது ஒருதலைப்பட்சமான செயலாகும்..


  • மாணவன் படத்தில் "விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா" என்று கமலுக்கு இவர்கள் போட்ட பாடலின் பல்லவி "வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்" என்று பின்னாளில் பயன்பட்டது.
  • எங்க சின்ன ராசா படத்தில் இவர்கள் இசைத்த "கொண்ட சேவல் கூவும் நேரம்" பாடலின் மெட்டு, படத்தை இந்தியில் "பேட்டா" என்று அனில்கபூர் எடுத்த போது "கோயல் சி தேறி போலி " என்று அப்படியே இடம்பெற்றது..
  • என்னடி முனியம்மா உன் கண்ணுல மய்யி பாடலை கேட்கும் போது "ஒத்த ரூவா தாரேன்" பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா??
  • "மாமா கையப்புடி" என்று வேங்கையின் மைந்தன் படத்தில் இவர்கள் போட்ட பாடலின் பல்லவியின் சாயல் "மாமா உன் பொண்ண குடு" என்று ராஜாதி ராஜா படத்தில் ராஜா இசையில் தெரிகிறது... 
இப்படி இந்தப் பக்கமும் நிறைய இருக்கிறது..

80களில் இளையராஜா புயல் வீசிய போதும் விடாமல் ஆண்டுக்கு 40 படங்கள் இசையமைத்த இந்த ஜோடி 93ல் பிரிந்தது.. அடுத்த சில ஆண்டுகளில் சங்கர் காலமானார்.. இந்தப் பிரிவு இவர்களது சரிவுக்கு ஒரு மிகமுக்கிய காரணம்.. அதுமட்டுமன்றி  92ல் ரகுமானின் வருகையும் அதன் மூலம் ஏற்பட்ட ரசனை மாற்றமும் மற்றொரு காரணம்.. ஒரு பார்சல் வெடிகுண்டில் தனது கைவிரல்களையும் கண்பார்வையையும் கணேஷ் இழந்தார்...


அதேபோல 90களில் இவரது இடத்தை தேவா சகோதரர்கள் பிடித்துக் கொண்டதும் மிகமுக்கிய காரணம்... இடையில் கணேஷ் 8 படங்களில் ஹீரோவாக நடித்தார்.. "பூக்களைத்தான் பறிக்காதீங்க" உட்பட பல பாடல்களிலும் தோன்றினார்... ஜகதலப்ரதாபன் என்ற படம் தயாரித்தனர் இவைகள் எவையுமே பெரிய அளவில் இந்த ஜோடிக்கு வெற்றி தரவில்லை... இப்போதும் "கருவேலன், பப்பு கொப்பம்மா, இயக்குனர்" என்று படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் கணேஷ்... தனது பெயரை தனியாக போடாமல் மறைந்த தனது நண்பர் பெயருடன் சேர்த்து "சங்கர்கணேஷ்" என்றே இன்றும் அடையாள படுத்திக்கொள்கிறார்...

நம்பர் 1 என்கிற இடத்தை தொட முடியாவிட்டாலும் 50 ஆண்டுகளில் நாம் இன்றும் நினைவில் இருத்தும் ஏராளமான நல்ல பாடல்களை வழங்கி தமிழ் திரை இசையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்கிறது  இந்த இணை!!

4 comments:

  1. Thala..

    Superb post about Shankar Ganesh. This duo is one of my favourite composer duo till date and they have managed to stand tall even after all these years.

    I really wonder how you manage to get all this information. Vidyasagar playing santoor is news to me. Of all the composers other than MSV, IR and ARR, Chandrabose and Shankar Ganesh fascinated me a lot. Chandrabose for his quirky selection of voices and brilliant uncanny fusion of rhythm patterns. Shankar Ganesh for their diversity in music. They started like an alternative to MSV and then slowly created their own style and even composed and arranged like Ilayaraja.

    The one thing I like about Shankar Ganesh is that they are not egoistic and I always feel that Ganesh with his humorous mood was the reason that the pair existed till Shankar's death.

    The one main complaint with Shankar Ganesh is their long standing list of inspirations and lifts. They had a template and you can easily find their reference songs. For eg.pattuvanna rosavaa ..." from kanni paruvaththile has its template from "uchchi vagundeduthu..." from rosappu ravikaikari.

    The list is endless. They looked down to "The Turtles" and the MJs for their inspirations. "Vennila enodu vanthu aadavaa from Nyaya Tharasu is a classic example for this. Hear the original from Michael Jackson..you will be shocked...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மார்க்ஸ்!!! பின்னூட்டத்தில் ஒரு பதிவே போட்டுட்டீங்க... வித்யாசாகர் மட்டுமல்ல ஹாரிஸ் ஜெயராஜ் கூட சங்கர் கணேஷ் குழுவின் இசைக்கலைஞர் தான்.. அவரது தந்தை மோசஸ் ஜெயக்குமார் 25 ஆண்டுகள் சங்கர் கணேஷிடம் கிடார் வாசித்தவர்.. பின்னாட்களில் ஹாரிஸ் எலெக்ட்ரிக் கிடார் மற்றும் fx ஆகியவற்றில் பங்களித்திருக்கிறார்...

      /The Turtles" and the MJs for their inspirations. "Vennila enodu vanthu aadavaa from Nyaya Tharasu is a classic example for this. Hear the original from Michael Jackson..you will be shocked.../

      இது ஒரு பெரிய பட்டியல் இருக்கு.. நீளம் கருதி நான் விட்டுட்டேன்..

      Delete
    2. நன்றி மார்க்ஸ்!!! பின்னூட்டத்தில் ஒரு பதிவே போட்டுட்டீங்க... வித்யாசாகர் மட்டுமல்ல ஹாரிஸ் ஜெயராஜ் கூட சங்கர் கணேஷ் குழுவின் இசைக்கலைஞர் தான்.. அவரது தந்தை மோசஸ் ஜெயக்குமார் 25 ஆண்டுகள் சங்கர் கணேஷிடம் கிடார் வாசித்தவர்.. பின்னாட்களில் ஹாரிஸ் எலெக்ட்ரிக் கிடார் மற்றும் fx ஆகியவற்றில் பங்களித்திருக்கிறார்...

      /The Turtles" and the MJs for their inspirations. "Vennila enodu vanthu aadavaa from Nyaya Tharasu is a classic example for this. Hear the original from Michael Jackson..you will be shocked.../

      இது ஒரு பெரிய பட்டியல் இருக்கு.. நீளம் கருதி நான் விட்டுட்டேன்..

      Delete
  2. Before reading this... i also thought some of the songs were composed by isaignani only...

    Shankar ganesh pathi oru periya library kku information u delivered������

    ReplyDelete