Friday, July 11, 2014

DD யோட வயசு அம்பதா????


தலைப்பை மட்டும் படிச்சிட்டு, "யோவ்... போன வாரம் தானய்யா அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ஏன் உனக்கு இந்த வேண்டாத வேல"ன்னு எஞ்சோட்டு வாலிபர்கள் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்... நான் சொன்னது "காப்பி வித்த டிடி" இல்ல... டிடி சேனல தான்....

தூர்தர்ஷன்- அதாவது "தொலைக்காட்சி"னு இந்தில அர்த்தம்...

ஒரு டி.வி சேனலுக்கு பேர் வைக்கும்போது ஜாதி பேரு, பொஞ்சாதி பேருன்னு கண்ட கருமத்தையும் வெக்காம.. தூர்தர்ஷன்னு (தொலைக்காட்சினு) பேரு வச்சதுக்கே நம்மாளுங்களுக்கு மொதல்ல ஒரு பெரிய சல்யூட் அடிக்கணும்...

தூர்தர்ஷன் தொலைக்காட்சி தன்னுடைய தினசரி ஒளிபரப்பை (1965) ஆரம்பிச்சு 50 வது வருஷத்துல இருக்கு அப்டின்னு கேள்விப்பட்ட உடனே அதுல வர்ர சிம்பல் மாதிரி சுத்தி சுத்தி அப்டியே Flash Back ல ஒரு 20 வருஷம் பின்னாடி போயிட்டேன்... அதோட விளைவ என்னோட சேந்து இப்போ நீங்களும் அனுபவிக்க போறீங்க...

                                     

25 வருஷத்துக்கு முந்தி, ஊருக்குள்ள யார் வீட்டுக்காச்சும் டி.வி வருது அப்டின்னாலே அது ஒரு திருவிழா மாதிரி தான்... ஒரு 50 பேர் திரண்டு வந்து மாலை,  ஊதுபத்தி, சந்தனப் பொட்டுக்கு நடுவுல காணிக்கை வாங்காத சாமியார் மாதிரி உக்காந்து இருக்கிற சாலிடரயோ, டயனோராவையோ தர்மதரிசனம் பண்ணி...போகும்போது... "ம்ம்ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கு.. வெல ரொம்ப ஜாஸ்தியோ"னு கண்ணுவச்சுட்டு தான் ஓய்வானுங்க..

குறிப்பா புதன்கிழமை 07:30 மணிக்கு வந்து உக்காந்துகிட்டு, "சித்ரகார்"ல "து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்..", "சோலி கே பீச்சே கியா ஹை" மாதிரி கருத்தாழமிக்க பாடல்கள பாத்து சூப்பர் பாட்டுல்லன்னு அகமகிழ்ந்து போவாங்ய... இந்தில‌ ஆனா ஆவ‌ன்னா கூட‌ தெரியாட்டாலும் ஹேம‌மாலினிய‌ பாக்குற‌துக்காக‌வே "நூபுர்" பாத்த‌ ஆளுங்க‌ எல்லாம் எங்க‌ ஊர்ல‌ உண்டு..

புரியாத இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே வந்திட்டு இருந்த ஆரம்ப காலத்துலயே இப்படின்னா தமிழ்ல நிகழ்ச்சி வர ஆரம்பிச்ச பிறகு கேக்கவே வேணாம்...

அதுலயும் வெள்ளிக்கிழமை ஓலியும் ஒளியும், ஞாயிறு சாயங்காலம் தமிழ் சினிமா இந்த ரெண்டுக்கும் கூட்டம் செந்தூள் கெளப்பும்...

டிடியோட பெரிய பலமே, அது தான் மொதல்ல வந்த சேனல் அப்டிங்கிறது மட்டுமல்ல... இன்னைக்கு News, Sports, Cartoon, Cinema, Agriculture, Variety Entertainment,  Education ன்னு ஒரு பத்து பதினைஞ்சு சேனல் பாத்த வேலைய அது ஒண்ணே பாத்திச்சு...

சுருக்கமா சொல்லணும்னா நம்மாளுக்கு பொது அறிவுக்கு அருமருந்தாவும், பொழுதுபோக்குக்கு பெரு விருந்தாவும் அன்னைக்கு இருந்த ஒரே விஷயம் தூர்தர்ஷன் மட்டும் தான்...

பொழுதுபோக்குன்னு சொன்ன உடனே, காலைலேந்து நைட்டு வரைக்கும், மாமியார கழுவி ஊத்துற மருமக... மருமகள கழுவி ஊத்துற மாமியான்னு அழுவாச்சி மெகா சீரியலோ.. "சென்னைக்கு மிக அருகாமைல "களியக்காவிளை"ல "னு ரியல் எஸ்டேட் டார்ச்சரோ, "அந்த தம்பி கருத்தா பேசுறாப்ல.. மைக்க அவருகிட்ட குடுங்க.. நீங்க சொல்லுங்க தம்பி, உங்க வாத்தியார என்ன கெட்ட வார்த்த சொல்லி திட்டுவீங்க"னு ரொம்ப அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியோ, "எனக்கு  சத்தியமா நடிக்கத் தெரியாதுங்க.."னு (அதான் ஊருக்கே தெரியுமே தம்பி...) டி.ஆர்.பி ஏத்துற ரியாலிட்டி ஷோவோ, துண்டால அடிக்கிற சாமி, துப்பட்டியால போத்திக்கிற சாமின்னு பக்தி நிகழ்ச்சியோ இல்ல.....

இதெல்லாம் இல்லாமலேயே, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி நிகழ்ச்சியா "காண்போம் கற்போம், மனை மாட்சி, எதிரொலி, உலா வரும் ஒளிக்கதிர், வயலும் வாழ்வும், ஒலியும் ஒளியும்னு செம வெரைட்டி காட்டிருப்பாங்ய..

டிடியோட நிகழ்ச்சிகள்ள 3 ரொம்ப முக்கியாமான நிகழ்ச்சிகள் உண்டு...

1) நிகழ்ச்சி என்னவோ 'ஊடுபயிர்ல உளுந்து போடுங்க... நீலப்பச்சை பாசி உரம் போடுங்கன்னு தான் இருக்கும்.. ஆனா "வயலும் வாழ்வும்" ஹைலைட்டே எம்.எஸ்.வியோட டைட்டில் சாங் தான்.

2)டி.ஆர்.பி ரேட்டிங்கெல்லாம் கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாடியே பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கெளப்புன ஒலியும் ஒளியும்.. எந்த அளவு பாப்புலர்னா, வெள்ளிக்கிழமை சாயங்காலம் 7:30 - 08:30 ல மட்டும் கரண்ட் போச்சு... Electricity Department ல இருக்குறவங்க பரம்பரைல மூணு தலைமொறைக்கு முன்னாடி செத்த கெழவி வரைக்கும் அத்தன பேரையும் தோண்டி எடுத்து  'நல்ல நல்ல வார்த்தைல" கிழிச்சு எடுத்துறுவாங்ய...

3) "போன மாசம் சுட்ட இட்லி நல்லாவே இல்லையேன்னு" கேள்வி கேட்டாலும் "அது போன மாசம்.. நான் சொல்றது இந்த மாசம்"னு அசராம பதில் சொல்ற எதிரொலி.. அதுலயும் சம்பத்குமார், நல்லதம்பின்னு ரெண்டு பேரு வருவாங்ய பாரு.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்லவங்ய...

டி.வி சேனல்னா சீரியல் இல்லாமலா.. டிடிலயும் உண்டு.... ஆனா ஒரு வாரத்துக்கு ரெண்டே நாள் தான் வரும்.. அதுவும் அரை அரை மணி நேரம் தான் வரும்.. அதுலயும் செம சூப்பர் சீரியல் எல்லாம் உண்டு..


                                    

"கே. பாலச்சந்தரோட ரயில் சிநேகம், அமரர் அகிலனோட சித்திரப்பாவை, "சோ" வோட ஜனதா நகர் காலனி, எஸ்.வி.சேகரோட வண்ணக் கோலங்கள்"னு ஒரு பெரிய லிஸ்டே உண்டு... மொதல்மொதல்ல ஒரு டி.வி நாடகத்தோட பாட்டு பெரிய ஹிட் அடிச்சது ரயில் சிநேகத்துல தான்... "இந்த வீணைக்கு தெரியாது அதை செய்தவன் யாரென்று.." இந்த பாட்டோட ஹிட்ட நெருங்குறதுக்கு "சித்தி" வர்ர வரைக்கும் வேற எந்த பாட்டாலயும் முடியல..

இன்னொரு பக்கம் இந்தில‌ இருந்த‌ சீரிய‌ல‌ எல்லாம் தமிழ்ல வரிசைகட்டி டப்பிங் பண்ண ஆரம்பிச்சாங்க... மொதல்ல வந்தது ராமாயணமும் மகாபாரதமும் தான்... இந்தி துரியோதனன் புனித் இஸ்ஸாருக்கு "எனதருமை மாமா அவர்களே.. வணங்குகிறேன்"ன்னு நம்ம "கரகாட்டக்காரன் புகழ்" சண்முகசுந்தரம் குரல் குடுத்துருப்பாரு.. அவரோட வாய்சும், ஹெரான் ராமசாமியோட வாய்சும் டிடில அப்போ ரொம்ப பாப்புலர்...

அதுக்கப்புறம் மெட்ரோ சேனல் வந்த பிறகு,வரிசையா "ஜுனூன் (பிடிவாத‌ம்), கானூன் (ச‌ட்ட‌ம்), ந‌யா நுக்க‌த் (புதிய‌ தெருமுனை)ன்னு ஒரு டஜன் சீரியல தமிழ்ல தட்டி எறிஞ்சிருப்பாங்க..

நாட்டாமைக்கு சொம்பு மாதிரி,  தூர்தர்ஷனுக்கு ஆன்டெனா.. லேசா அங்கிட்டு இங்கிட்டு அசைஞ்சா அத்தோட‌ அன்னைக்கு சோலி முடிஞ்சு போகும்.. மொதல்ல சாம் ஆண்டர்சன் மாதிரி மூவ்மெண்ட்ல ஆரம்பிச்சு போகப் போக சன்னி லியோன் மாதிரி தாறுமாறா ஆடி கடைசில கண்ணுல ஈசல் பறக்குற மாதிரி சுத்தமா ஒண்ணுமே தெரியாம போயிடும்...

கிரிக்கெட் மேட்ச் எல்லாம் பாக்கும் போது மழை வரக்கூடாதுன்னு வருண பகவான வேண்டிக்கிற மாதிரி, காத்து அடிச்சு ஆன்டெனா திரும்பிடக் கூடாதுன்னு வாயு பகவான வேர சேத்து வேண்டிக்கணும்... இல்லன்னா "பாற்க‌டல‌ தேவ‌ர்க‌ளும் அசுர‌ர்க‌ளும் கடைஞ்ச மாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் க‌ட்டி இழுத்தாலும்... ப‌ந்து போடுறானா இல்லையான்னே தெரியாம‌ ஒரு குத்தும‌திப்பா தான் பாக்க‌வேண்டி இருக்கும்...


இதை எழுதும்போது நினைவுக்கு வ‌ருது 1992 வேர்ல்டு கப், இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச்.. வழக்கம் போல ஆன்டெனா வேலைய காட்ட, சாஸ்திரி இந்தா அடிச்சிட்டாரு அந்தா அடிச்சிட்டாருன்னு வ‌ந்த‌ சிக்ன‌ல‌ வ‌ச்சு நாங்க‌ளே வ‌ர்ண‌னை எல்லாம் ப‌ண்ணித் தள்ளுனோம்.. க‌டைசில‌ ம‌றுநாள் பேப்ப‌ர‌ பாக்கும்போது தான் தெரிஞ்சுது சாஸ்திரி த‌னியா 11 ஓவ‌ர‌ ஃபுல் மீல்ஸ் சாப்புட்டு 25 ர‌ன் எடுத்தாரு, இந்தியா 1 ர‌ன் வித்தியாச‌த்துல‌ அவுட்டுனு...

"இந்திய‌ தொலைக்காட்சிக‌ளில் முத‌ன் முறையாக"ன்னு எல்லாம் போடாம‌, டிடியோட‌ சிற‌ப்பு நிக‌ழ்ச்சிக‌ள் வேற‌ மாதிரி இருக்கும்.. "இருட்டில் வெளிச்ச‌ம்"னு க‌ம‌ல், மாத‌விய‌ வ‌ச்சு ஒரு புரோகிராம் வ‌ந்திச்சு.. ஒரு ரூம்ல‌ திடீர்னு க‌ர‌ண்ட் போயிட்டா என்னாகும்னு.. Kind of pseudo darkness... கமல் பத்தி சொல்லவே தேவையில்ல.. பின்னி எடுத்துருப்பாரு... அதே மாதிரி, டிடியோட கொடைக்கானல் அலைவரிசை ஓப்பனிங்குக்கு இசையமைப்பாளர் சந்திரபோஸோட இசை நிகழ்ச்சி ஒண்ணு பண்ணிருந்தாங்க.. செமையா இருக்கும்..

"பூஞ்சிட்டு குருவிகளா...","மனிதன் மனிதன்.. எவன் தான் மனிதன்..", "டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல‌ த‌ட்டாதே...", "ஏதேதோ க‌ற்ப‌னை வ‌ந்து.."னு ஒரு அஞ்சாறு பாட்டு.. ம‌லேசியா வாசுதேவ‌ன், ம‌னோர‌மா, ச‌ந்திர‌போஸ்,ல‌லிதா சாக‌ரின்னு ஒரு ட்ரூப் பாடிருப்பாங்க‌.. இந்த‌ புரோகிராம‌ ம‌ட்டும் ஒரு ஐந்நூரு வாட்டியாச்சும் ரிப்பீட் அடிச்சிருபாங்க‌...

ரிப்பீட்னதும் நினைவுக்கு வர்ர இன்னொரு பாட்டு, நடிகர் ராஜீவ் கைவண்டி இழுத்துட்டு "ஓடி ஆடுற பெண்குழந்தை"னு பாடுற ஒரு பாட்டு... இன்னைக்கு 9XM ல‌ "Jumme Ki Raat" வர்ரத விட அன்னைக்கு டிடில கதறக்கதற ரிப்பீட் ஆன பாட்டு இது தான்...

கார்ட்டூன்ல‌யும் டிடி தான் Pioneer..Walt Disney, Mickey & Donald, Tom & Jerry, He Man, Spider Man, Jungle Book னு செம‌ ஹிட் அடிச்ச‌ எல்லா கார்டூனும் மொத‌ல்ல வ‌ந்த‌து டிடில‌ தான்.. "He Man" பாத்துட்டு,  வீட்டுக்கு வ‌ந்த‌ விருந்தாளிங்க‌ கிட்ட‌ அதுல‌ வ‌ர்ர‌ மாதிரி கையில‌ க‌த்திய‌ தூக்கி சுத்தி அதுக்கு செமையா ஒத‌ வாங்குன‌ ஆளெல்லாம் எங்க‌ ஊர்ல‌ உண்டு...



டிடிய‌ நெனைக்கும் போது ச‌ட்டுனு நினைவுக்கு வ‌ர்ர‌ இன்னொரு விஷ‌ய‌ம் அதுல‌ வ‌ர்ர‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள்..

"ஹமாரா பஜாஜ்","வாஷிங் பவுடர் நிர்மா",

மைக் மோகன் வர்ர "என்னடா இவன் ரோட்டுக்கும் போகாம வீட்டுக்கும் போகாம நிக்குறானேன்னு பாக்குறீங்களா??? இதயம் நல்லெண்ணை"

தேங்காய் சீனிவாசன் வர்ர "நரசுஸ் காஃபி.. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு..","ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைபாய்...",

திலீப் வெங்சார்கர் வர்ர "மயூர் சூட்டிங்ஸ்....",

கபில் தேவ் வர்ர பூஸ்ட்... (மொதல்ல Boost is the Secret of my energy!! வரைக்கும் தான்.. 1991-92க்கு பிறகு Our Energy!!னு டெண்டுல்கர் ஒட்டிகிட்டாரு)..  இப்படி சொல்லிகிட்டே போகலாம்...

டிடியோட சொந்த விளம்பரங்கள் தனி... National Integrationக்காக, கையில தீப்பந்தத்த எடுத்துகிட்டு கடற்கரைல ஓடுற ஸ்ரீகாந்த், பி.டி.உஷா, மழைல ஓடுற கவாஸ்கர்.... இந்த விளம்பரம் அப்போ ரொம்ப பிரபலம்...


எல்லாத்தையும் விட‌ முக்கிய‌மா ம‌சாலா இல்லாத‌ (உப்பு ச‌ப்பில்லாத) உள்ள‌து உள்ள‌ப‌டி சொல்ற‌ நியூஸும் அதை வாசிக்கிற "ஷோபனா ரவி, வரதராஜன், ஈரோடு தமிழன்பன், செந்தமிழரசு,சந்தியா ராஜகோபால்" மாதிரி செய்தி வாசிப்பாளர்களும் டிடியோட பெரிய சொத்து...

நேத்து கூட பட்ஜெட்டுல புதிய விவசாய சேனல் ஒண்ணு ஆரம்பிக்கப்படும்னு நிதியமைச்சர் சொல்லிருக்காரு... எத்தனை சேனல் வேணாலும் வரலாம்... நாமளும் கையில ரிமோட்ட வச்சுகிட்டு ரேகை தேய தேய அழுத்தி பாக்கலாம்... ஆனாலும் அம்மாவையும் அப்பாவையும் சுத்திட்டு இன்டெலிஜென்ட் ஃபுரூட்ட அபேஸ் பண்ணுன புள்ளையார் மாதிரி ஒரே சேனல வச்சுகிட்டே தமிழன் சினிமா, விவசாயம், விளையாட்டு, அரசியல், கல்வி, பக்தினு அத்தனையும் கவர் பண்ணுன காலம் மெய்யாலுமே பொற்காலம் தான்...

பொன்விழா காணும் தூர்தர்ஷனுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!!!!!!!!!!

                                

"தாய் நிலம் தந்த வரம் தாவரம்..
அது தழைக்க தழைக்க மகிழ்வார்கள் யாவரும்..
தன்னா நானே.. தானே நன்னே தானனே..
தன நனன நனன நே நே நே நேய்ய்ய்ய்!!!!!!!!!!!"

3 comments:

  1. very nice write up. enjoyed with a hearty laugh. BTW I'm working in Doordarshan.


    ReplyDelete
    Replies
    1. Wow.. Super Sir!! Thanks for your comments!!

      Delete
    2. Wow.. Super Sir!! Thanks for your comments!!

      Delete