Saturday, November 12, 2016

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு!!!

ஒரே சாயலில் அமைந்த பாடல்கள் வேறு இசையமைப்பாளர் இசை அமைத்ததாக கருதப் படுவதை நாம் அநேகம் முறை பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்.. ஒரே சாயலில் அமைந்த வரிகள் அதே காலகட்டத்தில் இருந்த பிறிதொரு கவிஞரால் எழுதப் பட்டதாக கற்பிதங்கள் உண்டு... இந்த வரிசையில் ஒரே சாயலில் அமைந்த குரல்களில் வந்த பாடல்கள் மற்றொருவர் பாடியதாக கருதப் பட்ட வரலாறும் நிறைய உண்டு... மனோ பாடிய பல பாடல்கள் எஸ்.பி.பி என்று நினைத்ததுண்டு.

அதே போல இவர் பாடிய பல பாடல்கள் ஏசுதாஸ் என்றும் அவர் பாடியவற்றை இவருடையது என்றும் நினைத்ததுண்டு....  "அவர்" கடவுளின் தேசம் கேரளம் தமிழுக்கு தந்த மிகச் சிறந்த குரல்களில் ஒன்றான 'பாவகாயகன்' 'கலைமாமணி'  "பி.ஜெயச்சந்திரன்" (மலையாளிகளிடம் பேசும் போது இந்த இனிஷியல் ரொம்ப முக்கியம் வெறுமனே ஜெயச்சந்திரன் பாட்டு என்றால் பி.ஜெயச்சந்திரனா?? எம்.ஜெயச்சந்திரனா?? என்று கேட்பார்கள்)....



மலையாளத்தில் "பாவகாயகன்" என்பது எந்த பாவத்திற்கும் உணர்ந்து பாடக்கூடியவர் என்று பொருள்படும்... இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் உட்பட 15,000 பாடல்களுக்கு மேல் பாடிய எவர்கிரீன் பாடகர்.... அதில் முக்காலே மூணு வீசம் மெல்லிசைப் பாடல்கள் தாம்... லேசான பேஸ் வாய்ஸுடன் கூடிய உறுத்தாத மிக மெல்லிய சாரீரம் ஜெயச்சந்திரனுடையது....

 என்னதான் யேசுதாஸின் சாயல் இருந்தாலும் ஜெயச்சந்திரனை பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும் ஒரு விஷயம் அவரது தமிழ் உச்சரிப்பு.. பிள்ளையை 'பில்லை' என்றும் செந்தூர பந்தம் என்பதை செந்தூர 'பெந்தம்' என்றும் யேசுதாஸ் பாடுவது போல இருக்காது இவர் உச்சரிப்பு....

"மாஞ்சோலை கிளிதானோ" பாடலின் இரண்டாவது சரணம் ஒன்று போதும் இதற்கு உதாரணம்

"மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் 
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இசை தேன் தான்
அள்ளும் கரம் நான் தான்
மஞ்சம்தனில் வஞ்சிக்கொடி 
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண்காவியம் பண்பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையோ"

"ழ / ல / ள" மற்றும் "ன / ண" உச்சரிப்ப்பில் என்ன தெளிவு பாருங்கள்...
தத்தகாரத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி மாறாமல் தமிழ் எழுதும் கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை சிதைக்காமலும், கரகரப்ரியாவின் துரித கதியில் அமைந்த மெட்டை இனிமை குறையாமலும் அருமையாகப் பாடி இருப்பார்...

எல்லாரையும் போல எனக்கும் ஜெயச்சந்திரன் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு" தான்.. இதனாலே இவர் இளையராஜாவின் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறுவயதில் உண்டு.. ஆனால் இவர் எம்.ஜி.ஆர், முத்துராமன் காலத்து பாடகர் என்பது 90 களில் நான் கேசட்டுகளை பதிவு செய்ய அடிக்கடி செல்லும் "எலக்ட்ரோ மியூஸிக்கல்ஸ்" வாயிலாக அறிந்தது...

சின்ன வயதில் மிருதங்கம் கற்று அப்போதைய காலகட்டத்தில் நிறைய போட்டிகளில் வாசித்திருக்கிறார்.. யேசுதாஸ் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியில் இவரை சிறந்த மிருதங்க கலைஞராக தேர்வு செய்த்திருக்கிறார்கள்... அவ்வப்போது சின்னச் சின்ன லைட் மியூசிக் குழுக்களிலும் பாடிக்கொண்டு இருந்திருக்கிறார்...1965ல் பாகிஸ்தான் போர் நிதிக்காக இவர் ஏதோ ஒரு இசைநிகழ்ச்சியில் பாடியதை கேட்ட தயாரிப்பாளர் "ஆர்.எஸ்.பிரபு" இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.. ஆனால் அதற்கு முன்பாகவே தேவராஜன் மாஸ்டர் இசையில் "களித்தோழனில்" இவர் பாடிய "மஞ்சலையில் முங்கி தோர்த்தி" வெளிவந்து ஹிட் அடிக்க இவரது பாட்டுப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது... ஆரம்பகாலங்களில் அதாவது 70களின் முற்பாதியில் தேவராஜன், எம்.கே.அர்ஜுனன், தெட்சிணாமூர்த்தி சுவாமிகள், எம்.எஸ்.வி ஆகியோர் இவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இவர் பாடிய சில அற்புதமான பாடல்கள் :


  • நின் மணியறையிலே - சி.ஐ.டி.நசீர்
  • சுவர்ண கோபுர நர்த்தகி - திவ்யதர்ஷனம்
  • சந்தனத்தில் கடைஞ்செடுத்தொரு - சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோத்து
  • சந்தியக்கு எந்தினு சிந்தூரம் - மாயா
  • நீலகிரியுடே சகிகளே - பனிதீராத்தவீடு


இதில் கடைசிப் பாடல் 1972ல் இவருக்கு கேரளா அரசின் சிறந்த பாடகர் விருதை பெற்று தந்த பாட்டு... இசை மெல்லிசை மன்னர்.... பிறகென்ன ஜெயச்சந்திரனை அப்படியே லபக்கென்று தமிழுக்கு தூக்கிட்டு வந்துட்டார்  எம்.எஸ்.வி...

அதே ஆண்டு இயக்குனர் ஏ.ஜெகந்நாதனின் முதல் படமான "மணிப்பயல்" படத்தில் "தங்கச்சிமிழ் போல் இதழோ" தான் இவர் முதன்முதலாக பாடிய தமிழ் பாட்டு (பி.பி.எஸ் பேஸ் வாய்ஸில் பாடியதோ என்று தோன்றுகிறது)...

அதோடு நில்லாமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி... 76ல் இளையராஜா வரும் வரையில் இவர் பாடிய சில ஹிட் பாடல்கள் :


  • மந்தார மலரே மந்தார மலரே - நான் அவன் இல்லை
  • பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள்
  • வசந்த கால நதிகளிலே - மூன்று முடிச்சு
  • ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த - மூன்று முடிச்சு
  • திருமுருகன் அருகினிலே - மேயர் மீனாட்சி
  • அமுத தமிழில் எழுதும் கவிதை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


தமிழிலும் மலையாளத்திலும்  தனக்கு முதல் வாய்ப்பு அளித்தஎம்.எஸ்.வி மற்றும் தேவராஜன் மாஸ்டர் மீது அதீத பற்றுதலும் மரியாதையும் உடையவர் ஜெயச்சந்திரன்...



70களின் இரண்டாவது பாதியில் ஒரு பக்கம் எம்.எஸ்.வி என்றால் இன்னொரு பக்கம் இளையராஜா என்று கலக்கி இருக்கிறார்... இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களில் இவரது சில ஹிட் பாடல்கள் :


  • பூந்தென்றலே நல்ல நேரம் - புவனா ஒரு கேள்விக்குறி
  • ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்
  • சித்திரை செவ்வானம் - காற்றினிலே வரும் கீதம்
  • மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்
  • செவ்வானமே பொன்மேகமே - நல்லதொரு குடும்பம் 
  • மஞ்சள் நிலாவுக்கு இன்று - முதல் இரவு


70களில் ரஜினி மற்றும் கமலுக்கு சில பாடல்கள் பாடி இருக்கிறார் பிறகு நிரந்தரமாக அந்த இடம் எஸ்.பி.பாலுவுக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு இவர்கள் இருவருக்கும் இவர் பாடவில்லை... நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு பாபா படத்தில் பாடி இருப்பார்...

1980 கள் தான் இவர் தமிழில் அதிகமாக பாடிய காலம்...  இதை நாம் விரிவாக பார்க்க வேண்டும்... 80களின் முற்பாதியில் இவரை எம்.எஸ்.வி, இளையராஜா மட்டுமன்றி சங்கர் கணேஷ், கங்கை அமரன், சலீல் சௌதுரி, ஜி.கே. வெங்கடேஷ், டி.ராஜேந்தர் என்று அன்றைய நாளின் அநேக இசையமைப்பாளர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்... இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இவரது பாடல்களில் சில :


  • கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள் (எம்.எஸ்.வி)
  • தென்றலது உன்னிடத்தில் - அந்த 7 நாட்கள் (எம்.எஸ்.வி)
  • வசந்த காலங்கள் - ரயில் பயணங்களில் (டி.ராஜேந்தர்)
  • கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம் (டி.ராஜேந்தர் )
  • காதல் ஒருவழிப் பாதை - கிளிஞ்சல்கள் (டி.ராஜேந்தர் )
  • பூவண்ணம் போல மின்னும் - அழியாத கோலங்கள் (சலீல் சௌதுரி)
  • இசைக்கவோ நம் கல்யாண ராகம் - மலர்களே மலருங்கள் (கங்கை அமரன் )
  • பாடு தென்றலே - நெல்லிக்கனி (சங்கர் கணேஷ்)
  • மலரோ நிலவோ மலைமகளோ - ராக பந்தங்கள் (குன்னக்குடி வைத்தியநாதன்)
  • பாடிவா தென்றலே - முடிவல்ல ஆரம்பம் (இளையராஜா)
  • தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் (இளையராஜா)
  • பூவிலே மேடை நான் போடவா - பூவிலங்கு (இளையராஜா)
  • காதல் மயக்கம் அழகிய கண்கள் - புதுமைப்பெண் (இளையராஜா)
  • தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள் (இளையராஜா)
  • காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி (இளையராஜா)



1984ல் வெளிவந்த சுந்தர்ராஜனின் "வைதேகி காத்திருந்தாள்" ஜெயச்சந்திரனின் தமிழ் சினிமா அத்தியாயத்தில் ஒரு புதிய ஏட்டை புரட்டிப் போட்ட படம்... "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"ன்னு ஜெயச்சந்திரன் உருகுவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் காற்றலைகளில் மிதந்து கொண்டிருக்கிறது... இந்த ஒரே பாட்டின் மூலம் கிட்டத்தட்ட விஜயகாந்தின் பாட்டுக் குரலாகவே மாறிப்போனார் ஜெயச்சந்திரன்... 20 வருடங்களுக்கு மேலாக 2005ல் "எங்கள் அண்ணா" வரை நீள்கிறது இந்த இணை... எத்தனை சூப்பர் ஹிட் பாடல்கள் :


  • இன்றைக்கு ஏனிந்த - வைதேகி காத்திருந்தாள்
  • காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள்
  • மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
  • தேகம் சிறகடிக்கும் - நானே ராஜா நானே மந்திரி
  • பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோயில் கிழக்காலே
  • பூமுடித்து பொட்டுவைத்த வட்டநிலா - எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
  • புல்லைக்கூட பாடவைத்த - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
  • கஸ்தூரி மான்குட்டியாம் - ராஜ நடை 
  • விழியே விளக்கொன்று ஏற்று - தழுவாத கைகள்
  • சோதனை தீரவில்ல - செந்தூர பூவே
  • ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல - ஏழை ஜாதி
  • காதல் வெண்ணிலா - வானத்தை போல
  • வெள்ளையாய் மனம் பிள்ளையாய் - சொக்கத்தங்கம்
  • கொஞ்சி கொஞ்சி பேசும் மைனாவே - எங்கள் அண்ணா


80களின் பிற்பகுதி தான் ஜெயச்சந்திரன் தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலம்... இதில் விஜயகாந்த் தவிர மற்ற நடிகர்களுக்கும் இவர் பாடிய சில ஹிட் பாடல்கள் :


  • கொடியிலே மல்லிகைப்பூ - கடலோரக் கவிதைகள்
  • அழகாக சிரித்தது அந்த நிலவு - டிசம்பர் பூக்கள்
  • அதிகாலை நிலவே - உறுதிமொழி
  • உன்னைக் காணும் நேரம் நெஞ்சில் - உன்னை நான் சந்தித்தேன்
  • எனது விழி வழிமேலே - சொல்ல துடிக்குது மனசு
  • அடி மாடிவீடு மானே - நட்பு
  • ராஜா மகள் ரோஜா மகள் - பிள்ளை நிலா
  • அழகிய அண்ணி - சம்சாரம் அது மின்சாரம்
  • கவிதை கேளுங்கள் - புன்னகை மன்னன் (ஆலாபனை மற்றும் ஜதி மட்டும்)


ஒருபக்கம் தமிழில் வெற்றி பாடல்களை தந்து கொண்டே மறுபக்கம் தனது தாய்மொழியில் 1988ல் 'ஸ்ரீ நாராயண குரு' படத்திற்காக "சிவசங்கர சர்வ" என்கிற பாடலுக்காக தேசிய விருதினை பெற்றார்...

1987ல் சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் ஆரம்பித்த தொடர்பில் அடுத்து இவரை எஸ்.ஏ.ராஜ்குமார் தனது படைப்புகளில் தொடர்ந்து நிறைய பாட வைத்திருக்கிறார் உதாரணத்துக்கு :


  • சின்னப்பூவே மெல்லப்பேசு - சின்னப்பூவே மெல்லப்பேசு
  • பூந்தென்றலே நீ பாடிவா - மனசுக்குள் மத்தாப்பூ
  • சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக
  • இது காதலின் சங்கீதம் - அவள் வருவாளா
  • ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ - சூர்யவம்சம்
  • காதல் வெண்ணிலா - வானத்தை போல


90களில் இளையராஜாவின் ஆஸ்தான பாடகராக மனோ இருந்ததால் ஜெயச்சந்திரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைத்திருக்கவில்லை... "ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப் பஞ்சாயத்து), "வள்ளி வள்ளி என (தெய்வ வாக்கு), "ஊரெல்லாம் சாமியாக (தெய்வ வாக்கு)" என கிடைத்த வாய்ப்பையெல்லாம் தவற விடாது ஹிட் அடித்திருக்கிறார்...

90களில் மீண்டும் மலையாளத்தில் பிசி ஆகி 'பிராயம் நம்மில்'(நிறம்) பாடலுக்காக மூன்றாவது கேரளா அரசு விருதை தட்டினார்..

1975ல்  9 வயது சிறுவன் திலீப் தன் தந்தை இசையமைப்பில்  "பெண்படா" என்கிற படத்தில் "வெள்ளிக்கிண்ணம்" என்ற பாடலுக்கு  இசை அமைத்தான்... பாடியவர் ஜெயச்சந்திரன்.. பின்னர் 17 ஆண்டுகள் கழித்து  திலீப் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய பின்னர் தனது இசையில் முதன் முதலில் பாடிய ஜெயச்சந்திரனுக்கு நிறைய வாய்ப்புக்கள் கொடுத்திருப்பார்... உதாரணத்துக்கு சில :


  • சித்திரை நிலவு - வண்டிச்சோலை சின்ராசு
  • கொல்லையில தென்னை வச்சு - காதலன்
  • என் மேல் விழுந்த - மே மாதம்
  • கத்தாழக் காட்டுவழி - கிழக்கு சீமையிலே
  • ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்
  • ராஜ்யமா இல்லை இமயமா - பாபா


2000க்கு பிறகு ஜெயச்சந்திரனுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை பரணி இசையில் (சுந்தரா டிராவல்ஸ்), வித்யாசாகர் இசையில் (தம்பி), ஜி.வி.பிரகாஷ் இசையில் (கிரீடம்) இப்படி அத்திப் பூத்தாற்போல பாடல்கள் அமைந்திருக்கின்றன... ஆனால் இந்த காலகட்டத்தில் மனிதர் மலையாளத்தில் படுபிஸியாக இருந்திருக்கிறார்.. கிட்டத்தட்ட எல்லார் இசை அமைப்பிலும்.... சும்மா ஒரு சாம்பிளுக்கு :


  • நீ மணிமுகிலாடல்கள் - வெள்ளித்திர (அல்போன்ஸ் ஜோசப்)
  • கல்லாயி கடவாதே - பெருமழக்காலம் (எம்.ஜெயச்சந்திரன்)
  • ஆலிலைத்தளியுமாய் - மிழி ரண்டிலும் (ரவீந்திரன் மாஸ்டர்)
  • பொண்ணுஷசின்னும் - மேக மல்ஹார் (ரமேஷ் நாராயண்)
  • ஸ்வயம்வர சந்திரிக்கே - கிரானிக் பேச்சிலர் (தீபக் தேவ்)
  • வட்டையில பந்தலிட்டு - யாத்ரகாருடே சிரத்தைக்கு (ஜான்சன் மாஸ்டர்)
  • தேரிறங்கும் முகிலே - மழைத்துளிகிளுக்கம் (சுரேஷ் பீட்டர்ஸ்)
  • இதலூர்ன்னு வீணா - தன்மத்ரம் (மோகன் சித்தாரா)




அவர் கடைசியாக பாடிய பாடல் நானறிந்த வரை பிஜிபால் இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த "சு சு சுதி வாட்மீகம்" என்ற படத்தில் 'என்டே ஜன்னலருகில்'  என்ற பாடல்...

இந்தப் பாட்டை பாடும் போது அவருக்கு வயது 71.. ஆனால் இளைஞரான ஜெயசூர்யாவுக்கு இவரது குரல் அத்தனை இனிமையாக பொருந்துகிறது..... அது தான் நான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன "எவர்கிரீன் வாய்ஸ்" என்பது!!!

Saturday, October 22, 2016

அமுதைப் பொழியும் நிலவு!!!

பொன்னிநதி பாயும் சோழவளநாட்டுக்கு இன்றைய பெயர் டெல்டா மாவட்டம்... வயலெல்லாம் நெல்லாக 'நெல்'டா மாவட்டமாக விளங்கும் அதன் இடுப்பில் இருக்கிற சிறுநகரம் மன்னார்குடி..

ஆயிரம் ஆண்டு பழமையான ராஜகோபாலஸ்வாமி திருக்கோயிலும் 22.5 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ரா நதி'யையும் தன்னகத்தே கொண்ட "மதிலழகு" மன்னார்குடி, உணவோடு சேர்த்து உணவு அமைச்சர்களையும் ( மன்னை நாராயணசாமி, ஆர். காமராஜ் ) தமிழகத்துக்கு சப்ளை செய்யும் ஊர்..

அரசியல் மட்டுமன்றி கலைவளர்த்த பெருமையிலும் கணிசமான பங்கு மன்னையம்பதிக்கு உண்டு..ஒரு பெரிய்ய்ய லிஸ்ட் ... குறிப்பாக  மோகமுள், அம்மா வந்தாள், சக்தி வைத்தியம் போன்ற நூல்களை எழுதிய சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் "தி.ஜா", ஆயிரம் திரை கண்டு கின்னஸ் சாதனை செய்த "ஆச்சி மனோரமா" இவர்கள் எல்லாம் மன்னார்குடி "Products" தான்...



மன்னார்குடி நகரில் இருந்து 10 கல் தூரத்தில் இருக்கிற சிற்றூர் வேளுக்குடி... அங்கு 1920ல் பிறந்து கலை, அரசியல் இரண்டிலும் முத்திரை பதித்த ஒருவர் தான் இந்தப் பதிவின் நாயகர்.

சிலம்புச் செல்வர்  ம.பொ.சி அவர்களது தலைமையில் 'தமிழரசுக் கழகம்' என்ற அரசியல் கட்சி அற்றை நாளில் தமிழக எல்லை மீட்பு போராட்டம், தலைநகர் பெயர்மாற்றப் போராட்டம் போன்றவற்றை முன்னெடுத்தது... இயக்குனர் ஏ.பி.நாகராஜன், கவிஞர்கள் கா.மு.ஷெரிப், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாசிரியர் சின்ன அண்ணாமலை உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து எல்லைமீட்பு போராட்டத்தில் சிறைசென்ற மொழிப்போர் தியாகி அவர்.. பின்னாளில் தி.மு.க வோடு கூட்டணி ஏற்பட 1974 - 1980 வரை தமிழக சட்டமன்ற (மேலவை) உறுப்பினராக இருந்தவர்.

ஏ.வி.எம் மில் வசனகர்த்தவாக இருந்து, பேரறிஞர் அண்ணா கதை வசனத்தில் உருவான 'ஓர் இரவு' படத்தில் புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே' என்கிற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.. அதன் பிறகு எழுதிய பாடல்கள் சில நூறை எட்டும்... எடுத்து வாசித்தால் எழுத்துக்கு எழுத்து இனிமை கொட்டும்... அவர் தான் கு.மா.பா என்று அழைக்கப்படுகிற கலைமாமணி கு.மா.பாலசுப்ரமணியம்... குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம்.. (இவர்களது மூதாதையர்கள் குறிச்சியில் இருந்து வேளுக்குடிக்கு குடி பெயர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது )



 "Aesthetic Sense" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் (அழகுணர்ச்சி).. அதற்கு சிறந்த உதாரணங்கள்  இவரது பாடல்கள்.. உதாரணத்திற்கு சில...

  • உன்னை கண்  தேடுதே - கணவனே கண்கண்ட தெய்வம் 
  • அமுதை பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் 
  • இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்
  • சித்திரம் பேசுதடி.. எந்தன் சிந்தை மயங்குதடி - சபாஷ் மீனா
  • காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா
  • ஏமாறச் சொன்னது நானோ.. என்மீது கோபம் தானோ - நானும் ஒரு பெண் 
  • கனவின் மாயா லோகத்திலே.. நாம் கலந்தே உல்லாசம்  காண்போமே - அன்னையின் ஆணை
  • மாசிலா நிலவே நம் காதலை - அம்பிகாபதி 
  • மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் - மகாகவி காளிதாஸ்
  • மதனா எழில் ராஜா நீ வாராயோ - செல்லப்பிள்ளை 


"நிலவுக் கவிஞர்" என்றே சொல்லலாம் இவரை... அத்தனை பாடல்கள் வெண்மதி மீது இயற்றி இருக்கிறார்.

மெல்லிசைப் பாடல்கள் மட்டுமின்றி துள்ளலான நடையை உடைய பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தவர்  கு.மா.பா.... உதாரணத்திற்கு
  • யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
  • குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே - மரகதம் (ஜெ.பி.சந்திரபாபுவின் ஹிட் பாடல்)
  • ஆடவாங்க அண்ணாத்தே - சக்கரவர்த்தி திருமகள்
  • அஞ்சாத சிங்கம் என் காளை - வீரபாண்டிய கட்டபொம்மன் 

அரசிளங்குமரி, திருடாதே, தெய்வத்தின் தெய்வம், யானை வளர்த்த வானம்பாடி, குழந்தைகள் கண்ட குடியரசு  கோமதியின் காதலன்,  மரகதம், சித்தூர் ராணி பத்மினி, ஸ்கூல் மாஸ்டர்,  இன்ஸ்பெக்டர், நல்ல தீர்ப்பு உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதியவர்...

ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஏ.ராமராவ், கே.வி.மஹாதேவன், எஸ்.எஸ்.வேதா என்று ஏராளமான இசையமைப்பாளர்களிடம் எழுதி இருந்தாலும் ஒரு  கட்டத்தில் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்...

வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா ஆகிய படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவர்தான்... அதே போல மஹாகவி காளிதாஸ், கொஞ்சும் சலங்கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை - வசனமும் எழுதி இருக்கிறார்...

"சாந்தா.. ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்... உன் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடிவந்த என்னை ஏமாற்றாதே... பாடு சாந்தா..பாடு.." புகழ்பெற்ற இந்த வசனம் கு.மா.பாவின் வரிகள்.. அதை தொடர்ந்து காருகுறிச்சியாரோடு சேர்ந்து எஸ்.ஜானகி இசைத்த "சிங்காரவேலனே தேவா" பாடலை எழுதியதும் இவர் தான்...


'மந்திரமாவது நீரு' என்கிற ஞானசம்பந்தர் தேவாரப் பாடலுக்காக போட்ட மெட்டு... பின்னர் சிங்கார வேலனே தேவா என்று கு.மா.பா  எழுதிக் கொடுத்திருக்கிறார்...

சினிமாவில் இலக்கிய லட்சணங்களோடு பாடல்களை எழுதியவர் கு.மா.பா...
ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர், யாப்பு பிழறாது  கவிதைகளை எழுதக்கூடியவர்... மகாகவி காளிதாஸ் படத்தில் நோயுற்ற தாயை குணமாக்க காளிதாசன் பாடுவதாக

சின்னையா என்றழைத்த செங்கனிவாய் மூடியதோ
உண்ணைய்யா என்றெடுத்து ஊட்டியகை வாடியதோ
அன்னையாள் கொண்ட அவலமிதை காண்பதற்கோ
கண்ணையான் பெற்றுள்ளேன் காளி

என்கிற இன்னிசை வெண்பாவும்

பூவில் இடம்கொள்ளப் போதாமல் என்னுடைய 
நாவில் இடம்கொண்ட நாயகியே - நோவில்
முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்து
நடக்கத் தருவாய் நலம்

என்கிற நேரிசை வெண்பாவும் எழுதி இருப்பார்...

அதே போல போஜராஜன் அவையில் காளிதாசன் பாடுவதாக 'கட்டளைக் கலித்துறையில்'   விளையாடி இருப்பார்.. ஒவ்வொரு அடியிலும் 16 எழுத்துக்கள் (ஒற்றெழுத்துக்களை கணக்கில் கொள்ளக் கூடாது) .. கடைசி வரியின் இறுதிச் சீர் "ஏ"காரத்தில் முடிய வேண்டும்... (எழுத்துக் கூட்டவே  மூச்சு வாங்குது.. இந்த மனுஷர் சர்வ சாதாரணமா பாடிப்புட்டாரு )

தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே...

பாரதியார் எழுதிய 'ராதைக் கண்ணியை' அடியொற்றி "காதலென்னும் சோலையிலே ராதே ராதே' என்று சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எழுதியிருப்பார்... (பின்னாட்களில் "வாது சூது தெரியாத மாது கண்ணா" என்று எதிர்நீச்சல் படத்தில் வி.குமார் இதை உல்டா அடித்திருப்பார்).

பாவேந்தர் பாரதிதாசன் மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்திருக்கிறார்.. ஒருமுறை பாவேந்தர் சினிமாவுக்கு எழுதிய பாடலை  திருத்துமாறு இவரைக் கேட்டவர்களிடம் "அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" என்று மறுத்திருக்கிறார்

60 களின் பிற்பகுதியிலும் 70 களிலும் இவரது பங்களிப்பு குறைவாக இருந்திருக்கிறது கண்ணதாசன், வாலி, மருதகாசி மூன்று பேருமே அப்போதைய பாடல்களின் பெரும்பகுதியை எழுதி இருக்கிறார்கள்.... இவரது அரசியல் பங்களிப்பும், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு வாலியும், கண்ணதாசனும் ஆஸ்தான கவிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்...

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  80 களின் தொடக்கத்தில் "தூரத்து இடிமுழக்கம்" என்ற படத்தில் சலீல் சௌதுரி இசையில் அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார்.... "உள்ளமெல்லாம் தள்ளாடுதே" என்ற பாடல் இனிமையான ஒன்று... இவர் இறுதியாக பாடல் எழுதியது கங்கை அமரனின் இசையில் "கனவுகள் கற்பனைகள்" என்ற படத்துக்காக.....

1994ம் ஆண்டு கு.மா.பா மறைந்த போது அவருக்கு வயது 74.காலத்தால் அழியாத பாடல்களை எழுதி தமிழ் சினிமாவின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக திகழ்கிறார் கு.மா.பா என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை... இதில் ஆச்சர்யமான விஷயம் இந்தப் பாட்டையெல்லாம் எழுதியது நம்ம ஊர்க்காரரா?? என்பது மன்னார்குடிக்காரர்களே  பலர் அறியாத விஷயம்!!!

Saturday, October 15, 2016

ஒரு சாதனை இயக்குனரின் நினைவலைகள்!!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்.... இந்த நான்கு பேரும் தமிழ் சினிமாவின் நான்கு சகாப்தங்கள்... இந்த நான்கு சகாப்தங்களையும் தமிழ் சினிமாவில் இயக்குகிற பெருமையை பெற்றவர்கள் தமிழ் சினிமா வரலாற்றில் யார் யார் ??... தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதிய பாலச்சந்தர் இறுதிவரை எம்.ஜி.ஆரை இயக்கவில்லை... மூத்த இயக்குனர்களான ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா இவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்த வாய்ப்பினை பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் 3 பேர் மட்டுமே..

ஒருவர் புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.. சிவாஜியை வைத்து "நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண்", எம்.ஜி.ஆரை வைத்து "உரிமைக்குரல், மீனவ நண்பன், அண்ணா நீ என் தெய்வம்", ரஜினி - கமலை வைத்து "இளமை ஊஞ்சலாடுகிறது" என்று ஹிட் படங்களை கொடுத்தவர்... இரண்டாமவர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் உடன்பிறந்த சகோதரர் எம்.ஏ.திருமுகம்... "எத்தனை எம்.ஜி.ஆர் படங்கள் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்...".. தேவர் மறைவுக்கு பிறகு சிவாஜியை வைத்து "தர்மராஜா" என்று ஒரு படம் எடுத்தார்.. அதே போல ரஜினியை வைத்து "எல்லாம் உன் கைராசி" என்று ஒரு படம்.. நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை.. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடிக்க மாணவன் என்று ஒரு படம் இயக்கினார்.. அதில் தான் 14 வயது கமல் முதன்முதலாக ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடினார்... இந்த இருவரைத் தவிர மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார்... ஆனால் 4 நட்சத்திரங்களுக்கும் தெறிக்கவிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர்... .

எம்.ஜி.ஆருக்கு 'இதயக்கனி", சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "வெள்ளை ரோஜா", இன்றளவும் ரஜினியின் "அலெக்ஸ் பாண்டியன்" போலீஸ்  ஆபிசர் கெட்டப் தூக்கி வைத்து பேசப்படும் "மூன்று முகம்" , கமலின் போட்டி நடனங்களோடு கூடிய கமர்ஷியல் ஹிட் "காதல் பரிசு" என்று  அவரவர்  பாணியிலேயே ஹிட் கொடுத்தவர்..  இது தவிர ரஜினி, கமல், சிவாஜி இந்த மூவருக்கும் வேறு படங்களும் இயக்கி உள்ளார்.. என் நண்பர்களிடம் இவரைப் பற்றிக் கேட்டபோது பலருக்கும் இவரது பெயரை சொன்னதும் தெரிந்திருக்கவில்லை... அதற்காகவே இந்த பதிவை எழுதத் தீர்மானித்தேன்...20 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 50 படங்களை இயக்க்கிய முக்கியமான இயக்குனர் அவர்...

ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர் இந்த இருவரைத் தவிர அந்த காலத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், பாலாஜி மற்றும் ஸ்ரீகாந்த்.. இவர்கள் அனைவரையும் வைத்து படங்கள் இயக்கிவர்.. அதே போல அதற்கு அடுத்த தலைமுறையில் "சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் , சுதாகர்" இவர்களையும் அதற்கு அடுத்த சூப்பர் சிக்ஸில் கார்த்திக் தவிர மற்ற 5 பேர் ( "ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்") படங்களையும் இயக்கிவர்... தியாகராஜன், பாண்டியராஜன், சுருளிராஜன், ராமராஜன், அர்ஜுன், ரகுமான், சரத்குமார்  என்று இவரது இயக்கத்தில் நடித்த இரண்டாம் வரிசை நாயகர்கள் பட்டியலும் பெருசு....சரி யார் அந்த இயக்குநர்??


தினத்தந்தியில் உதவி ஆசிரியராக இருந்தவர் அவர்.... பின்னர் இயக்குனர்கள் டி.பிரகாஷ் ராவிடமும், 17 எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய ப.நீலகண்டனிடமும் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்' என்று ப.நீலகண்டன் எடுத்த படங்களில் எல்லாம் இவர் உதவி இயக்குனர்.. டி.பிரகாஷ் ராவ் எடுத்த படகோட்டியில் இணை இயக்குனர்..  இந்த வகையில் எம்.ஜி.ஆரின் வலது கரமான ஆர்.எம்.வீரப்பனின் தொடர்பு அவருக்கு கிடைத்தது...

அதன் மூலம் 1973ல் ஆர்.எம்.வீ தயாரித்த "மணிப்பயல்" படத்தை முதன் முதலாக இயக்கும் வாய்ப்பை பெற்றார்.. "அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா" பாட்டு திராவிட இயக்கத்தினர் இன்றும் கொண்டாடும் பாட்டு.. முதல் காட்சியை சென்னை மிட்லண்ட் தியேட்டரில் துவக்கி வைத்து இவரை பாராட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்..

அப்போதே அடுத்த எம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது.. அது தான் நான் மேலே சொன்ன இதயக்கனி படம்...

அந்த இயக்குனர் திரு.ஏ.ஜெகந்நாதன்.



ஜெகந்நாதன் படங்களை பார்த்தால் இவர் அந்தக்கால கே.எஸ்.ரவிகுமாராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது... "சினிமாத்தனமான" என்று நாம் எதை சொல்லுகிறோமோ அது அத்தனையும் இவர் படங்களில் இடம்பெற்றிருக்கிறது.... கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் டிஷ்யூம் டிஷ்யூம் (சிவாஜியே சண்டை போட்டிருக்காருப்பா இவர் படத்துல), கொஞ்சம் ஹியூமர், டான்ஸ், பன்ச் வசனங்கள், ஜெயமாலினியோ சிலுக்கோ அந்த அந்த காலத்துல பிரபலமான ஐட்டம் டான்சர்ஸ் என்று கலந்துகட்டி அடிக்கிற படங்களாகவே இருந்திருக்கின்றன... நடிக்கின்ற ஹீரோவை பொறுத்து அவரது தனிப்பட்ட மசாலாவும் இதில் சேரும்.. அவர் முதன்முதலாக இயக்கிய ஏ.வி.எம்.ராஜன் படத்திலிருந்து (மணிப்பயல்) கடைசியாக இயக்கிய ராமராஜன் படம் வரை (மில் தொழிலாளி) இதே பார்முலா தான்... உதவி இயக்குனராக கிட்டத்தட்ட 15 படங்கள் எம்.ஜி.ஆருடன் பணிசெய்ததால் இந்த கமர்ஷியல் வேல்யூ பார்முலா அவருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும்...

எம்.ஜி.ஆரைப் போலவே இவரும் இசைஅமைப்பாளரிடம் ( எம்.எஸ்.வி முதல் தேவா வரை யாராக இருந்தாலும் ) பாடல்கள் வாங்குவதில் படுகில்லாடி.. இவரது படங்களில் வந்த பாடல்களை பார்த்தாலே தெரிகிறது.. உதாரணத்திற்கு கொஞ்சூண்டு...


  • அண்ணா அண்ணா அண்ணா - (மணிப்பயல் / எம்.எஸ்.வி)
  • இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - (இதயக்கனி / எம்.எஸ்.வி)
  • நீங்க நல்லா இருக்கோணும் - (இதயக்கனி / எம்.எஸ்.வி) 
  • யானையின் பலம் எதிலே  - (இதயம் பார்க்கிறது - டி.ஆர்.பாப்பா)
  • கன்னிராசி என் ராசி..  - (குமார விஜயம் / தேவராஜன் மாஸ்டர்)
  • இனங்களில் என்ன இனம் பெண்ணினம் - (நல்ல பெண்மணி / வி.குமார்)
  • நந்தா நீ என் நிலா - (நந்தா என் நிலா / வி. தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்)
  • தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் - (மூன்று முகம் / சங்கர்- கணேஷ் )
  • மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - (முதல் இரவு / இளையராஜா)
  • ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் - (தங்கமகன் / இளையராஜா)
  • பூமாலை ஒரு பாவை ஆனது - (தங்கமகன் / இளையராஜா)
  • ஓ மானே மானே மானே - (வெள்ளை ரோஜா / இளையராஜா )
  • சோலைப்பூவில் மாலைத் தென்றல் (வெள்ளை ரோஜா / இளையராஜா)
  • ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் (கொம்பேறி மூக்கன் / இளையராஜா )
  • வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது (நாளை உனது நாள் / இளையராஜா )
  • கூகூ என்று குயில் கூவதோ (காதல் பரிசு / இளையராஜா)
  • காதல் மகராணி கவிதை (காதல் பரிசு / இளையராஜா )
  • காலகாலமாய் பெண் தானே கற்பூரதீபம் (கற்பூரதீபம் /கங்கை அமரன் )
  • கன்னத்தில் கன்னம் வைத்து (வாட்ச்மேன் வடிவேலு / தேவா)


இவரிடம் அதிகப் படங்கள் நடித்த கதாநாயகர்கள் என்றால் விஜயகுமாரும் சிவகுமாரும் தான்... தலா 6 - 7 படங்கள்... ஹீரோயின்களில் முதல் 10 ஆண்டுகளில் சுமித்ராவும் இரண்டாவது 10 ஆண்டுகளை அம்பிகாவும் பங்குபிரித்து கொள்ளுகிறார்கள்.. கே.எஸ்.ரவிக்குமாருக்கு மீனா மாதிரி இவருக்கு அம்பிகா.. 10 வருடங்களுக்குள் இவரது ஒரு டஜன் படங்கள் நடித்திருக்கிறார்.. தேங்காய் சீனிவாசன் இவரது படங்களில் நிறைய நடித்திருக்கிறார்.. ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது..

காதல் பரிசுக்கு பிறகு இவருக்கு பெரிய ஹிட் படங்கள் என்று ஏதும் அமையவில்லை ... ஜீதேந்திராவை வைத்து வெள்ளை ரோஜாவை ஹிந்தியிலும் டைகர் பிரபாகரை வைத்து கன்னடத்திலும் எடுத்தார்... அர்ஜுனை வைத்து என் தங்கை, ராமராஜனை வைத்து மில் தொழிலாளி, ஆனந்த் பாபுவை வைத்து வாட்ச்மேன் வடிவேலு , "ஈரமான ரோஜாவே" சிவாவை வைத்து அர்ச்சனா ஐ.ஏ.எஸ் என்று எதுவும் இவருக்கு கைகொடுக்காமல் போக சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்... தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் மீது தீவிர பற்று உடையவர் ஜெகந்நாதன்.. கமலை வைத்து உ.வே.சா பற்றி ஒரு படம் எடுக்க வேண்டுமென்பது அவரது கனவாக இருந்திருக்கிறது... அது சில காரணங்களால் கைகூடாமல் போகவே 13 வாரத் தொடராக ஏ.வி.ரமணனை வைத்து தூர்தர்ஷனில் இயக்கி இருக்கிறார்..

ஏ.ஜெகந்நாதன் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் :


  • கவிஞர் வாலி கதை, திரைக்கதை,வசனம் எழுதி தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி நடிப்பில் "அதிர்ஷ்டம் அழைக்கிறது என்று ஒரு படம் இயக்கினார் இவர்.. அதில் இவரிடம் சின்னச்சாமி என்ற இளைஞர் உதவி இயக்குனராக இருந்தார்.. அந்த சின்னச்சாமி அடுத்த வருடம் இயக்குநராகி எடுத்த படம் தேசிய விருதை அள்ளியது... அந்த சின்னச்சாமி தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா..
  • ஒரே நாளில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியானதுண்டு.. ஆனால் ஒரே நாளில் (1983 தீபாவளி) ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெள்ளி விழா கொண்டாடியது முதன்முதலாக இவர் படங்கள் தான் (சிவாஜி பிலிம்ஸின் "வெள்ளை ரோஜா", சத்யா மூவிஸ் "தங்கமகன்")
  • நடிகர் திலகம் சிவாஜி நடித்த படத்துக்கு "இந்தப் புலி" புகழ் டி.ஆர் இசையமைத்திருக்கிறார் தெரியுமா உங்களுக்கு???? ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன்,அம்பிகா நடித்த "முத்துக்கள் மூன்று" படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் டி.ராஜேந்தர்.
  • ஜெகந்நாதன் இயக்கிய இரண்டாவது படம் "இதயம் பார்க்கிறது".. இது தான் நடிகர் ஜெய்சங்கரின் 100வது படம்
  • மலேசிய நடிகர் "பிரேம்" இவர் இயக்கத்தில் தான் "குரோதம்" படத்தில் அறிமுகம் ஆனார்.. 100 நாள் கொண்டாடிய இந்த படத்தில் சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் 5 இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் இது... படத்திற்கு கதை எழுதியது "பிரேம்", திரைக்கதை எழுதியவர்கள் "இயக்குனர்கள் மணிவண்ணனும், ஆர்.சுந்தர்ராஜனும், வசனம் எழுதியவர் உதயகீதம், கீதாஞ்சலி படங்களை இயக்கிய கே.ரங்கராஜ்... இயக்கம் ஏ.ஜெகந்நாதன்
  • ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய மூன்று முகம் தான் இன்றுவரை ரஜினி நடித்த ஒரே மூன்று வேடப் படம்.. 
  • மூன்று முகம் படத்தில் ஹீரோ ஒரே தவ்வில் மேலே பறந்து சென்று மூன்று நான்கு ரவுடிகளை உதைத்துவிட்டு கீழே வரும் ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.. பின்னாளில் "சீறிவரும் காளை" படத்தில் ராமராஜன் போட்ட மேட்ரிக்ஸ் பைட்டை நினைத்துக் கொள்ளுங்கள்...
  • எம்.ஜி.ஆரை வைத்து இதயக்கனி இயக்கிய ஒன்றரை ஆண்டில் அவர் முதல்வர் ஆகிவிட்டதால் அவரை வைத்து மேலும் படங்கள் இயக்க முடியவில்லை.. அதன்பின் 1981ல் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி.சுகுமாரை வைத்து நடிகன் குரல் என்ற படத்தை இயக்கினார் ஏ.ஜெகந்நாதன்.. ஆனால் சில காரணங்களுக்காக அந்தப் படமும் வெளிவரவில்லை


2012 அக்டோபரில் தனது 78வது வயதில் ஜெகந்நாதன் அவர்கள் மறைந்து விட்டார்.. இருபதாண்டு காலம் 4 சகாப்த நடிகர்கள் உட்பட ஏராளமான நடிகர்களை இயக்கி வெற்றி படங்களை தந்த இயக்குனரை நம்மில் பலருக்கு தெரியாதது ஆச்சர்யமே..

Tuesday, October 11, 2016

மேகமே மேகமே பால்நிலா தேயுதே!!!

"காஷ்மீர் பிரச்சினை தீவிரமாக போயிகிட்டு இருக்கும் நேரத்தில் எதையோ காஷ்மீர் என்று யூ - டியூபில் தேடப் போன எனக்கு அல்வா மாதிரி ஒரு மேட்டர் கிடைத்தது.."

"கேஷ்மீர் பியூடிபுள் கேஷ்மீர்"... மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இந்த பாட்டுக்கு இசை அமைத்தது யாரு? (என்ன எம்.எஸ்.வி யா இருக்கும்... இல்லனா கே.வி.மகாதேவனா இருக்கும்)...

"மாசி மாசந்தான் கெட்டி மேளதாளம் தான்"... (அடுத்து இதுக்கு இசை யாருன்னு கேக்க போற... எங்களுக்கே தெரியும் இளையராஜான்னு)

சினிமா இசையைப் பொருத்த வரை நமக்கு ஒரு பொதுப்புத்தி உண்டு... 75 க்கு முன்பு வந்த பாடலா?? அது மெல்லிசை மன்னர்கள் பாட்டாகத்தான் இருக்கும்.. 75 - 90 மத்தியில் வந்த பாடலா?? அது நிச்சயம் இளையராஜாவின் பாட்டாகத்தான் இருக்கும் என்று... இந்த பொதுப்புத்தியின் விளைவால் அநேக இசைக்கலைஞர்களை நாம் சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டோம் என்பது நிதர்சனம்... ஒரே ஒரு உதாரணம்... யூ டியூபில் ஒரு பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன்... பாடலின் தொடக்கமே ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்வது போல இருக்கும்... பாடலை இசை அமைத்த இசையமைப்பாளர் தெளிவாக காட்சியில் தெரிகிறார்.. என்றாலும் கமெண்ட்ஸ் முழுக்க "ராஜா ராஜா தான்..." "ராஜா கடவுளின் இசை" என்று நீளுகிறது... நான் மேற்சொன்ன பொதுப்புத்தியின் விளைவு இது..

அந்த இசை அமைப்பாளர்கள்........ "இளையராஜாவுக்கு முன்பே ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த சங்கர் - கணேஷ் இரட்டையர்கள்".


சமீபத்தில் தான் இந்த 1000 பட விபரத்தை நான் அறிந்தேன்... என் பால்ய வயது நண்பர் ராஜசேகர் சொல்லிக்கொண்டே இருப்பார்... "நம்ம ஊர்ல கல்யாண மண்டபம் கட்டுறோம்.. சங்கர் கணேஷ் கச்சேரி வைக்கிறோம்யா" என்று... அப்போது சங்கர் கணேஷ் என்ன படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள் என்று கூடாது தெரியாது எனக்கு...

தனது குருவான சி.ஆர்.சுப்பாராமன் மறைவுக்கு பிறகு ஏழே வயதான அவரது தம்பி சங்கர்ராமனை தன்னுடனே வைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி... சென்னையில் பிறந்து இசையின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பலரிடம் இசை பயின்று (தன்ராஜ் மாஸ்டர் உள்பட) ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் எம்.எஸ்.வியிடம் பாங்கோஸ், டாம்போரின் போன்ற தாள வாத்தியங்களை வாசிக்க சேர்ந்தவர் கணேஷ்... பாசமலர், பாலும் பழமும், ஆலயமணி போன்ற படங்களில் வரும் பாடல்களில் பிரதானமாக ஒலிக்கும் பாங்கோஸ் கணேஷின் கைவண்ணம்...

"அவளுக்கென்ன அழகிய முகம்" பாடல் பார்த்திருக்கிறீர்களா?? எம்.எஸ்.வி கண்டெக்ட் செய்யும் போது முன்வரிசையில் கோட் சூட் அணிந்து ஒல்லியான ஒரு இளைஞர் பாங்கோஸ் வாசிப்பார்.. கவனித்து பாருங்கள் அவர் தான் கணேஷ்... இவருக்கும் சங்கருக்கும் அலைவரிசை ஒத்துப் போக இருவரும் சேர்ந்து இசையமைக்க ஆரம்பித்தனர்... கவிஞர் கண்ணதாசன் தயாரித்த "நகரத்தில் திருடர்கள்" தான் இவர்கள் முதன்முதலாக இசையமைத்தது... படம் வெளிவராமல் போகவே கண்ணதாசனே அடுத்த வாய்ப்பையும் வாங்கி கொடுத்தார்... அது தான்  1967ல் வெளிவந்த"தேவர் பிலிம்சின்"  "மகராசி" படம்... இந்த நன்றியறிதலுக்காக எப்போதும் டைட்டிலில் "கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் - கணேஷ்" என்றே போட்டுக் கொள்ளுவார்கள்...

மகராசி பாடல்கள் வெற்றிபெற தொடர்ந்து பல வெற்றிகரமான பாடல்களை இந்த இணை வழங்கியது... அவர்களது முதல் 5 ஆண்டுகளில் வந்த பாடல்களை பார்த்தால் அப்படியே மெல்லிசை மன்னரின் பாடல் போலவே தோன்றும்... உதாரணத்துக்கு சில :


  • உனது விழியில் எனது பாடல் (டி.எம்.எஸ், பி.சுசீலா - நான் ஏன் பிறந்தேன்)
  • நான் ஏன் பிறந்தேன்  (டி.எம்.எஸ் - நான் ஏன் பிறந்தேன்)
  • நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் (டி.எம்.எஸ் - நான் ஏன் பிறந்தேன்)
  • தேன்கிண்ணம் தேன்கிண்ணம் (பி.சுசீலா - தேன்கிண்ணம்)
  • செந்தாமரையே செந்தேன் இதழே (ஏ.எம்.ராஜா  - ஜிக்கி  - புகுந்த வீடு )
  • ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி (பி.சுசீலா - ராதா )
  • அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் (ராதா, ஜெயலட்சுமி - அம்மன் அருள் )
  • கேஷ்மீர் பியூட்டிபுள் கேஷ்மீர் (டி.எம்.எஸ் - இதய வீணை )
  • திருநிறைச்செல்வி மங்கையற்கரசி (டி.எம்.எஸ் - இதய வீணை )
  • பொன் அந்தி மாலைப்பொழுது (டி.எம்.எஸ், பி.சுசீலா - இதய வீணை)


முதல் 5 ஆண்டுகளுக்குள்ளேயே எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்ட இந்த ஜோடியின் நிஜமான வசந்த காலம் என்பது அடுத்து வந்த 10 ஆண்டுகள் தான் (அதாவது 70கள்)... 60 களில் எம்.எஸ்.வியின் பாணியில் பாடல்களை அமைத்த ஜோடி அதிலிருந்து மாறி புதிய இசை வடிவத்தை கையாளத் தொடங்கிய காலம் இது ...

தனது எல்லாப் படங்களையும் பாடல்பதிவுடன் தொடங்கும் வழக்கமுடைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆட்டுக்கிடாவை வைத்து "ஆட்டுக்கார அலமேலு" என்ற படம் எடுத்தார்... இசை சங்கர் கணேஷ்.. கம்போஸிங்கில் "பருத்தி எடுக்கையிலே என்ன பல நாளா பாத்த மச்சான்" என்று நாட்டுப்புற பாணியில் இரட்டையர்கள் போட்ட டியூனில் தேவர் எழுந்து ஆடி இருக்கிறார்...  அதுமட்டுமல்ல கண்ணதாசன் வராததால் இந்த பாடலை எழுதியவர் சாட்சாத் சாண்டோ சின்னப்ப தேவர் அவர்களே தான்... படம் வெள்ளி விழா கொண்டாட சங்கர் - கணேஷுக்கு மார்க்கெட் எகிரத் தொடங்கியது...



இந்தியில் வெளிவந்த "நாகின்" படத்தை ஸ்ரீப்ரியா தமிழில் "நீயா?" என்று எடுத்தார்.. இசை சங்கர் கணேஷ்... "தேரே சங் பியார் மே" தமிழில் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று கல்யாண்ஜி - ஆனந்தஜி போட்ட மூல மெட்டிலேயே ஒலித்தது என்றாலும் பாலு - வாணி குரல்களில் உள்ள நெளிவுகளில் பாடல் நெத்தியடி ஹிட்.. அதுமட்டுமல்ல சங்கர் - கணேஷ் போட்ட "நான் கட்டில் மேலே கண்டேன்", "உனை எத்தனைமுறை பார்த்தாலும்" பாடல்களும் செம ஹிட் அடித்தன... இந்த  காலத்தில் இவர்கள் இசை அமைத்த சில பாடல்களை சற்று பார்ப்போம் : (நாட்டுப்புற பாணி, மெல்லிசை, மற்றும் மேற்கத்திய இசை இந்த மூன்றிலுமே தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் இந்த இரட்டையர்கள் இசை அமைத்த பாடல்கள் இந்த தசாப்தம் முழுதும் விரவிக் கிடக்கின்றன)


  • ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் - (அடுக்குமல்லி )
  • ஆல...மரத்துக்கிளி  (பாலாபிஷேகம்)
  • காலைப்பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைபோலே (ராஜராஜேஸ்வரி )
  • பருத்தி எடுக்கையிலே (ஆட்டுக்கார அலமேலு )
  • ஆத்துலே மீன்புடிச்சு ஆண்டவனே உன்ன நம்பி (ஆட்டுக்கார அலமேலு)
  • இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் (உயர்ந்தவர்கள்)
  • உன்னை நான் பார்த்தது வெண்ணிலா  (பட்டிக்காட்டு ராஜா)
  • நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு (தாய் மீது சத்தியம்)
  • நடிகனின் காதலி நாடகம் ஏனடி (தாயில்லாமல் நானில்லை)
  • பட்டுவண்ண ரோசாவாம்  (கன்னிப் பருவத்திலே) 
  • அடி அம்மாடி சின்னப்பொண்ணு (கன்னிப் பருவத்திலே) 
  • நடைய மாத்து (கன்னிப் பருவத்திலே) 
  • ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை (என்னடி மீனாட்சி)
  • செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா (ஒத்தையடிப் பாதையிலே) மற்றும் நீயாவின் பாடல்கள் (ஏற்கனவே சொன்னவை)...


1980ல் வெளிவந்த கண்ணில் தெரியும் கதைகள் படத்திற்கு இசை அமைத்த 5 பேர்களில் இவர்களும் உண்டு "நான் ஒன்ன நெனச்சேன்.. நீ என்ன நெனச்ச" என்று மென்மையாக இவர்கள் இசைஅமைத்த பாடல் இன்றும் கேட்கும்போது மனதை வருடும் பாடல்...

இந்த பத்தாண்டுகளில் இறுதியில் இருந்து (1980ல் இருந்து ) இவர்களது இசை அமைப்பில் அப்போதைய வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த இளையராஜாவின் சாயல் தெரிய ஆரம்பித்தது...

1981ல் ராபர்ட் - ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் "பாலைவனச்சோலை".. முதன் முறையாக வைரமுத்து ஒரு படத்தில் அத்தனை பாடல்களும் எழுதிய படம்... சங்கர் - கணேஷ் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல் இந்த படத்தில் இடம் பெற்ற "மேகமே மேகமே பால்நிலா தேயுதே"... ஹிந்தி கஸல் பாடலின் அப்பட்டமான ரீமேக் ஆக இருந்தாலும் வாணி ஜெயராமின் ஆலாபனையுடன் தொடங்கும் பாடல் 35 வருடங்களாக இன்னும் வானொலியில் நேயர் விருப்பமாக இருக்கிறது.. அதிலும் இரண்டாவது இன்டெர்லூடில் வரும் சந்தூர் (வாசித்தவர் பின்னாளில் இசையமைப்பாளரான வித்யாசாகர்) மூலப் பாடலில் இருந்து பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும் அற்புதம்...

இந்த தசாப்தத்தின் முதல் 5 ஆண்டுகளை முதலில் பார்ப்போம்
  • தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி (விதி)
  • ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் (சிவப்பு மல்லி)
  • எரிமலை எப்படிப் பொறுக்கும் (சிவப்பு மல்லி)
  •  யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது (நெஞ்சமெல்லாம் நீயே)
  • தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் (சட்டம் ஒரு இருட்டறை)
  • வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை (வண்டிச்சக்கரம்)
  • அழகிய விழிகளில் அறுபது கலைகளும் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  • ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  • தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண் தான் (மூன்று முகம்)
  • என்னடி முனியம்மா உன் கண்ணுல மை (வாங்க மாப்பிள்ளை வாங்க)
  • பட்டுக்கோட்ட அம்மாளு (ரங்கா)
  • டூத் பேஸ்ட் இருக்குது பிரஷ் இருக்குது (ரங்கா)
  • எனைத்தேடும் மேகம் சபைவந்து சேரும் (கண்ணோடு கண்)
  • மழையே மழையே இளமை முழுதும் (அம்மா)
  • பனியும் நீயே மலரும் நானே (பனிமலர்)

இளையராஜா ஊடுகட்டி அடித்த 80களின் பிற்பாதியில் சங்கர் - கணேஷும் தன் பங்குக்கு வெளுத்துக் கட்டி இருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு சில :

  • மாசி மாசம் தான் கெட்டி மேளதாளம் தான் (ஊர்க்காவலன்)
  • மல்லிகைப் பூவுக்கு கல்யாணம் (ஊர்க்காவலன்)
  • கொண்டைச்சேவல் கூவும் நேரம் (எங்க சின்ன ராசா)
  • மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் (எங்க சின்ன ராசா)
  • மரகதவல்லிக்கு மணக்கோலம் (அன்புள்ள அப்பா)
  • சிட்டுக்குருவி தொட்டுத்தழுவி (வீரபாண்டியன்)
  • வெண்ணிலா முகம் பாடுது (ஜோதி மலர்)
  • ஜானகி தேவி ராமனை தேடி (சம்சாரம் அது மின்சாரம்)
  • கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்)
  • பனிவிழும் பருவ நிலா பரதமும் ஆடுதோ (பன்னீர் நதிகள்)
  • வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் (திருமதி ஒரு வெகுமதி)
  • மூங்கிலிலைக் காடுகளே முத்துமழை மேகங்களே (பெண்மணி அவள் கண்மணி)


மெல்லிசை மன்னர்களுக்கு பி.சுசீலா, இளையராஜாவுக்கு எஸ்.ஜானகி போல சங்கர் - கணேஷ் ஜோடிக்கு "வாணி ஜெயராம்".. ஆனால் மற்ற இருவருக்கும் இல்லாத சிறப்பாக வாணியை தமிழில் அறிமுகப் படுத்தியவர்கள் சங்கர் கணேஷ் தான்... (ஏற்கனவே எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் 1970ல் பாடி இருந்தாலும் படம் வெளிவரவில்ல்லை... 1973ல்  வெளிவந்த "வீட்டுக்கு வந்த மருமகள்" படத்தில் "ஓரிடம் உன்னிடம்" என்று டி.எம்.எஸ்ஸுடன் வாணி பாடிய பாடல் தான் முதலில் வெளிவந்தது) சங்கர் கணேஷின் வெற்றி பாடல்களை எடுத்துப் பார்த்தால் அதில் முக்கால்வாசிப் பாடல்களைப் பாடியவர் வாணி ஜெயராம் தான்.. (மேகமே மேகமே, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, அழகிய விழிகளில், கட்டிக்கரும்பே கண்ணா, மூங்கிலிலை காடுகளே, ஆலமரத்துக்கிளி, வெண்ணிலா முகம் பாடுது)..

70 - 80 களில் ரஜனி, கமல், விஜயகாந்த் படங்களுக்கு இசையமைத்த இந்த ஜோடி 90களில் ராம நாராயணனின் படங்களில் "ராமு, ராஜா, வெள்ளிக்கிழமை ராமசாமி, நாகராஜா" ஆகியோருக்கு இசை அமைக்கும் கட்டத்துக்கு போனார்கள் "தைப்பூசம், ஆடிவெள்ளி, ஈஸ்வரி, துர்கா, செந்தூரதேவி" என்று ஒரு வண்டிப் படங்கள்.. 93க்கு பிறகு இளையராஜாவே கிட்டத்தட்ட பீல்டு அவுட் நிலைமைக்கு போய்க்கொண்டிருந்த நிலையில் சங்கர் கணேஷின் படங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.. இந்த காலகட்டத்தில் இவர் கொடுத்த சில பாடல்கள்...


  • ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் (இதய தாமரை)
  • ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு (சந்தனக்காற்று)
  • பாப்பா பாடும் பாட்டு (துர்கா)
  • யக்கா யக்கா ஏலக்கா (செந்தூர தேவி)


1959ல் களத்தூர் கண்ணம்மாவின் குழந்தை கமலுக்கு "அம்மாவும் நீயே" என்று பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி 35 ஆண்டுகளுக்கு பிறகும் அதே மழலைக் குரலில் பேபி ஷாமிலிக்கு "யக்கா யக்க்கா" பாடல் பாடி இருப்பார்.. இவரைப்போல நிறைய பழைய பாடகர்களை மீண்டும் பயன்படுத்தியவர்கள் சங்கர் கணேஷ்... எம்.ஆர்.ராதாவின் கடைசி காலத்தில் " தர்மங்கள் சிரிக்கின்றன" படத்தில் இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமனை "போடா உலகத்தை தெரிஞ்சுக்க" என்ற பாடலையும், "வேலும் மயிலும் துணை" படத்தில் "மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்" என்று பெங்களூர் ரமணி அம்மாளையும், சஷ்டி விரதம் படத்தில் "துணைவன் வழித்துணைவன்" என்று மதுரை சோமுவையும் பாடவைத்திருப்பார்கள்....

சங்கர் கணேஷ் இசையின் மீது பெரும்பாலானவர்கள் சொல்லும் குறை என்ன என்றால் இவர்கள் பிறமொழிப் பாடல்களை நகலெடுப்பவர்கள் அல்லது அப்படியே பயன்படுத்திக் கொள்பவர்கள் என்பது... இதை முழுமையாக ஒதுக்கவும் முடியாது அப்படியே ஏற்கவும் முடியாது...  இவர்கள் பிறமொழிப் பாடல் சாயலில் அல்லது மெட்டில் இசையமைத்த சில பாடல்கள் உதாரணத்துக்கு :


  • தேவி கூந்தலோ பிருந்தாவனம் (என் ஆசை உன்னோடு தான்) - Turtles Happy Together என்ற பாடலின் சாயல்
  • மேகமே மேகமே (பாலைவனச்சோலை ) - "தும் நஹி ஹம் நஹி" என்னும் ஜக்ஜித் சிங்கின் கஸல் பாடலின் அட்டைக்காப்பி.
  • யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது (நெஞ்சமெல்லாம் நீயே) - "மே ஹவா ஹூன் கஹான்" என்னும் "அஹ்மது & மொஹம்மது ஹுசைன்" சகோதரர்களின் கஸல் பாடலின் சாயலில் அமைந்தது.
  • அவள் ஒரு மேனகை (நட்சத்திரம்) - தெலுங்கில் ரமேஷ் நாயுடு மூலப்படமான சிவரஞ்சனி படத்துக்காக போட்ட "அபிநவ தாரவோ" என்னும் பாடல்.. இயக்குனரின் விருப்பப்படி அப்படியே வைக்கப்பட்டது.
  • ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் (நீயா) - "நாகின்" ஹிந்தி படத்திற்காக கல்யாண்ஜி - ஆனந்தஜி போட்ட "தேரே சங் பியர் மே" பாடலின் மெட்டு, தமிழில் இயக்குனர் விரும்பியபடி அப்படியே இடம் பெற்றது.
  • சங்கத்தில் பாடாத கவிதையை (ஆட்டோ ராஜா) - "ஓலங்கள்" படத்துக்காக இளையராஜா இசையமைத்த "தும்பீ வா" பாடலின் மெட்டு.. இந்த பாடலின் மீது உள்ள அபிமானத்தில் இளையராஜாவிடம் கேட்டு பெற்று இடம்பெறச்செய்தார்கள் என்று கேள்வி.
  • சொர்க்கத்தின் வாசல் இங்கே (மங்கம்மா சபதம்) - மைக்கேல் ஜாக்சனின் "Billie Jean" பாடலின் சாயலில் அமைந்தது 


இப்படி நிறைய இருக்கிறது... இவை இவர்களது வளர்ச்சியின் மீது ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது... என்றாலும் இந்தப் பதிவு முழுக்க நாம் கண்ட ஏராளமான நல்லிசைப் பாடல்கள் சங்கர் கணேஷின் இசைச் சான்றுகளாகவே நமக்கு கிடைக்கின்றன...

சங்கர் கணேஷிடம் இருந்து மற்றவர்கள் சுவீகரித்த பாடல்களும் உண்டு.. அவற்றை நான் இங்கு சொல்லாவிட்டால் அது ஒருதலைப்பட்சமான செயலாகும்..


  • மாணவன் படத்தில் "விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா" என்று கமலுக்கு இவர்கள் போட்ட பாடலின் பல்லவி "வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்" என்று பின்னாளில் பயன்பட்டது.
  • எங்க சின்ன ராசா படத்தில் இவர்கள் இசைத்த "கொண்ட சேவல் கூவும் நேரம்" பாடலின் மெட்டு, படத்தை இந்தியில் "பேட்டா" என்று அனில்கபூர் எடுத்த போது "கோயல் சி தேறி போலி " என்று அப்படியே இடம்பெற்றது..
  • என்னடி முனியம்மா உன் கண்ணுல மய்யி பாடலை கேட்கும் போது "ஒத்த ரூவா தாரேன்" பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா??
  • "மாமா கையப்புடி" என்று வேங்கையின் மைந்தன் படத்தில் இவர்கள் போட்ட பாடலின் பல்லவியின் சாயல் "மாமா உன் பொண்ண குடு" என்று ராஜாதி ராஜா படத்தில் ராஜா இசையில் தெரிகிறது... 
இப்படி இந்தப் பக்கமும் நிறைய இருக்கிறது..

80களில் இளையராஜா புயல் வீசிய போதும் விடாமல் ஆண்டுக்கு 40 படங்கள் இசையமைத்த இந்த ஜோடி 93ல் பிரிந்தது.. அடுத்த சில ஆண்டுகளில் சங்கர் காலமானார்.. இந்தப் பிரிவு இவர்களது சரிவுக்கு ஒரு மிகமுக்கிய காரணம்.. அதுமட்டுமன்றி  92ல் ரகுமானின் வருகையும் அதன் மூலம் ஏற்பட்ட ரசனை மாற்றமும் மற்றொரு காரணம்.. ஒரு பார்சல் வெடிகுண்டில் தனது கைவிரல்களையும் கண்பார்வையையும் கணேஷ் இழந்தார்...


அதேபோல 90களில் இவரது இடத்தை தேவா சகோதரர்கள் பிடித்துக் கொண்டதும் மிகமுக்கிய காரணம்... இடையில் கணேஷ் 8 படங்களில் ஹீரோவாக நடித்தார்.. "பூக்களைத்தான் பறிக்காதீங்க" உட்பட பல பாடல்களிலும் தோன்றினார்... ஜகதலப்ரதாபன் என்ற படம் தயாரித்தனர் இவைகள் எவையுமே பெரிய அளவில் இந்த ஜோடிக்கு வெற்றி தரவில்லை... இப்போதும் "கருவேலன், பப்பு கொப்பம்மா, இயக்குனர்" என்று படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் கணேஷ்... தனது பெயரை தனியாக போடாமல் மறைந்த தனது நண்பர் பெயருடன் சேர்த்து "சங்கர்கணேஷ்" என்றே இன்றும் அடையாள படுத்திக்கொள்கிறார்...

நம்பர் 1 என்கிற இடத்தை தொட முடியாவிட்டாலும் 50 ஆண்டுகளில் நாம் இன்றும் நினைவில் இருத்தும் ஏராளமான நல்ல பாடல்களை வழங்கி தமிழ் திரை இசையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்கிறது  இந்த இணை!!

Saturday, September 17, 2016

கல்யாணத் தேன் நிலா!!

அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர்.. அடுத்த ஆண்டு தனது சினிமாத் துறையின் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறவர்.... எம்.ஜி.ஆர் பாடல்கள் மூலம்  பிரபலமாகி பின்னர் இளையராஜா சங்கர் - கணேஷுடன் கால் நூற்றாண்டு ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கியவர்... எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் காலம் தொட்டு ஜி.வி.பிரகாஷ் காலம் வரையில் சற்றேறக்குறைய 1000 பாடல்கள் எழுதிய ஒரு உன்னதமான சினிமா கவிஞர்... யார் அவர் ????

மக்கள் திலகத்தின் "குடியிருந்த கோயில்" படத்திற்கு பாடல் எழுத அந்தக் கவிஞருக்கு அழைப்பு வருகிறது... யார் யாரோ வந்து எழுதிப்பார்த்து சரிவராத பாடல்... எழுதத் தொடங்கினார்... "நான் யார்?.. நான் யார்?.. நீ யார்?" ... கேள்வியுடன் தொடங்குகிற பல்லவி... பாடல் முழுவதும் கேள்விகள் தான்...

"உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?" 

என்று பாடலில் மொத்தம் 73 வார்த்தைகள் "ஆர்" விகுதியில் முடியும்.. சின்னவருக்கு பாடல் பிடித்துப் போக அன்றே பாடல் பதிவு... அதிலிருந்து வரிசை கட்டி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதினார்... உதாரணத்திற்கு சில சூப்பர் ஹிட் பாடல்கள் :



  • ஆயிரம் நிலவே வா  - அடிமைப்பெண் 
  • எங்கே அவள் எங்கே மனம் - குமரிக்கோட்டம் 
  • பூமழை தூவி வசந்தங்கள்  - நினைத்ததை முடிப்பவன் 
  • பாடும் போது நான் தென்றல் காற்று  - நேற்று இன்று நாளை 
  • நீங்க நல்லா இருக்கோணும்  - இதயக்கனி 
  • சிரித்து வாழ வேண்டும்  - உலகம் சுற்றும்  வாலிபன்
  • ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க
  • இந்த பச்சை கிளிக்கொரு  - நீதிக்கு தலைவணங்கு 
  • நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை 
  • நாளை உலகை ஆளவேண்டும் - உழைக்கும் கரங்கள்
  • ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்
  • உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன் 


எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த இறுதிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (தென்றலில் ஆடும் கூந்தலில்) பாடல்கள் எழுதி இருக்கிறார்.. எம்.ஜி.ஆர் நடிச்சு கடைசியா வெளிவந்தது பாக்யராஜோட "அவசர போலீஸ்" ஆச்சேன்னு யாராவது கெளம்புனீங்கன்னா.. அதுலயும் "நீ நெனச்சதும் மழையடிக்கணும்" பாட்டு இவர் எழுதினது தான்..

எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு, 80 களில்  இளையராஜா  இவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்... குறிப்பாக  எண்பதுகளின் மத்தியில் மனிதர் படு பிசியாக  இருந்திருக்கிறார்... உதாரணத்துக்கு அந்த கால கட்டத்தில் இவர் எழுதிய பாடல்களில் கொஞ்சூண்டு...



  • கூ கூ என்று குயில் - காதல் பரிசு
  • கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு - காக்கி சட்டை
  • நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் ("நெலா அது" பாட்டைத் தவிர மற்ற அனைத்து பாடல்களும் இவர் எழுதியது )
  • ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
  • அமுதே தமிழே அழகிய மொழியே - கோயில் புறா 
  • காற்றோடு குழலின் நாதமே - கோடை மழை 
  • புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
  • மாலைக் கறுக்கலில் சோலைகருங்குயில் - நீதியின் மறுபக்கம்
  • தாழம்பூவே  வாசம் வீசு - கை கொடுக்கும் கை
  • செவ்வந்தி  பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள் (பானுப்ரியாவின் முதல் தமிழ் படம்)
  • உச்சி  வகுந்தெடுத்து பிச்சிப்பூ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
  • விழியிலே மணிவிழியில் மௌனமொழி - நூறாவது நாள் 
  • நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் - முந்தானை முடிச்சு
  • ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை - தங்கமகன்
  • வெண்மேகம் மண்ணில் வந்து - நான் சிகப்பு மனிதன்...


1980ல் வெளிவந்த "கண்ணில் தெரியும் கதைகள்" படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள்.. அதில் ராஜாவின் இசையில் "நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்" எழுதியவர் இவர் தான்

இளையராஜாவுடன் மட்டுமல்ல சங்கர் - கணேஷோடு பொன் அந்தி மாலைப்பொழுது (இதயவீணை), பட்டுவண்ண ரோசாவாம் (கன்னிப் பருவத்திலே), அழகிய விழிகளில் (டார்லிங் டார்லிங் டார்லிங்), சங்கத்தில் பாடாத  கவிதையை (ஆட்டோ ராஜா), பனிவிழும் பருவ நிலா (பன்னீர் நதிகள்), மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) (ஏறத்தாழ 200 படங்கள் ஷங்கர் கணேஷுடன் பணி செய்திருக்கிறார்)...

சந்திரபோஸுடன்  "என்ன கத சொல்லச் சொன்னா (அண்ணா நகர் முதல் தெரு)" .. பாக்யராஜுடன் "பச்சமல சாமி ஒண்ணு (இது நம்ம ஆளு)"... ரவீந்திரன் மாஸ்டருடன் "பாடி அழைத்தேன் (ரசிகன் ஒரு ரசிகை) என்று மற்ற இசை அமைப்பாளர்களுடன் நீளுகிறது பட்டியல்

90களில் மாறிய இசைவடிவத்துடன் இவரது வெற்றிப் பாடல்கள் தொடர்கின்றன :


  • அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
  • கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம் (மொத்தம் 38 "லா"க்கள் கொண்டு முடியும் பாடல் வரிகள்)
  • மழை வருது மழை வருது - ராஜா கைய வச்சா
  • விழியின் வழியே நீயா வந்து போனது - சிவா 
  • மணமாலையும் மஞ்சளும் சூடி  - வாத்தியார் வீட்டு பிள்ளை
  • வாசக் கறிவேப்பிலையே - சிறையில் பூத்த சின்னமலர்
  • உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி  - பணக்காரன்
  • சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா - அழகன்
  • தத்தித்தோம் - அழகன்
  • மெதுவா தந்தி அடிச்சானே - தாலாட்டு
  • எதிலும் இங்கு இருப்பான் - பாரதி
  • ஆத்தோரத்திலே ஆலமரம் - காசி


இந்நேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்... இவர் கண்ணதாசனல்ல... வைரமுத்துவல்ல... தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்... ஆனால் இவர் கவிஞர் முத்துலிங்கமும் இல்லை..  இவர் ஒரு "Octogenarian" ஆனால் இவர் பஞ்சு அருணாசலமும் அல்ல.. இரண்டு முதல்வர்களோடு நெருங்கிய அரசியல் தொடர்புடையவர்...  எம்.ஜி.ஆர்- சிவாஜி முதல் விக்ரம் - சூர்யா வரை நான்கு தலைமுறை கண்ட கவிஞர்... தொடர்ந்து படியுங்கள்...

90 களுக்கு பிறகு மாறிய புதிய இசை அலைகளில் இவர் பங்களிப்பு முந்தைய காலகட்டங்களை போல இல்லை என்றாலும் யுவன் இசையில் "எங்கெங்கோ கால்கள் போகும் பாதையில் - நந்தா", ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "அழகு நிலவே - பவித்ரா தேவா இசையில் "ஒரு கடிதம் எழுதினேன் - தேவா" என்று கிடைத்த வாய்ப்பிலெல்லாம் நிறைவான பாடல்கள் தந்திருக்கிறார்... எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் என்று தொடர்ந்து சமீபத்திய "தெறி" படத்தில் "தாய்மை வாழ்க" பாடல் வரை நீள்கிறது இவரது இசைப்பயணம்...

எழுதிய பாடல்களில் 90 % மெல்லிசைப்பாடல்கள் தான்... அதிலும் இவரது சிறப்பு இலக்கிய நயத்துடன் பாடல்கள் எழுதுவது ... அவற்றையும் கொஞ்சம் அலசுவோம்....

மரகதமணியின் இசையில் அழகன் படத்தில் அனைத்துப் பாடல்களும் இவர் தான்.. அதில்
தனது மானசீக குருவான பாவேந்தரின் "குடும்ப விளக்கு" சாயலில் "சாதிமல்லிப் பூச்சரமே" பாடல் எழுதி இருப்பார்...

எனது வீடு எனது வாழ்வு 
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே 
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல 
ஒன்றுதான் 
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் 
ஒன்றுதான் 
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது

என்னும் வரிகள்... பாவேந்தரின்

"தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் தானுண்டு இவையுண்டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்" 

என்பதன் லைட் வடிவம்...

"தத்தித்தோம்... வித்தைகள் கற்றிட தத்தைகள் சொன்னது தத்தித்தோம்...
தித்தித்தோம்... தத்தைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்... "

காளமேகப் புலவரின் சித்திரக் கவியான

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி" யின் Inspiration.

"வாசக் கறிவேப்பிலையே" பாடலில்

"உடம்போ தங்கத்துல வார்த்தது போல
உதடோ முள்முருங்க பூத்தது போல" 

என்று எழுதி இருப்பார்.. இது குற்றாலக் குறவஞ்சியில்

"திருந்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும். இதழினாள் 
வரிச்சிலையைப் போல்வளைந்து 
பிறையைப் போல் இலங்கு நுதலினாள்" 

என்று வசந்தவல்லியை வர்ணித்து திரிகூடராசப்பர் எழுதியதன் சினிமாட்டிக் வடிவம்... (பூமுருக்கு - பூ முருங்கை / முள் முருங்கை )

"குழலைப் பார்த்து முகிலென மயில்கள் நாணும்"... 

"அதோ மேக ஊர்வலம்" பாடலின் சரணத்தில் வரும் இந்த வரிகளின் மூலம் "சிறுபாணாற்றுப்படையில் இருக்கிறது...

"நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,             
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன்           
மயில், மயிற் குளிக்கும் சாயல்" 
(விறலியரின் கூந்தலை மயில்கள் மழைமேகம் என்று கருதியதாக வரும் பாடல்)

நீ ஒரு காதல் சங்கீதம்... நாயகன் படத்தில் வரும் இந்தப் பாடலின் சரணத்தில்

"பூவைச் சூட்டும் கூந்தலில் - எந்தன் 
ஆவியை ஏன் நீ  சூட்டுகிறாய் " 

என்று கவிதை மழை பொழிந்திருப்பார்... 

"முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்" 

என்று கலிங்கத்துப்பரணி கடைதிறப்பு பகுதியில் வரும் பாடலின் சாரம் தான் இது....

தன் மனைவியின் பெண்மை மீது விழுந்த களங்கத்தை மனதில் சுமந்து கொண்டு "வட்டக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க..." என்று செம்பட்டை கதாபாத்திரம் பாடுவதாய் அமைந்தவை... சொல்லவந்ததை சொல்லாமல் வேறு ஒன்றை சொல்லும் "பிறிதுமொழிதல் அணி" என்னும் இலக்கிய இலக்கணம்...

"பூமழை தூவி வசந்தங்கள்" பாடலின் சரணத்தில்

"வெண்சங்கு கழுத்தோடு பொன்மலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா? 
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது
என்றாடும் விதமல்லவா..." என்னும் வரிகள் 

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனின் கொடி அசைந்தது கோவலனை வராதே என்னும் விதமாக அசைந்தது போல் இருந்ததாக இளங்கோவடிகள் "தற்குறிப்பேற்ற அணியாக"

"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 
வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட"

என்று எழுதிக் காட்டியதைப் போல தங்கையின் கழுத்தில் ஆடும் மணிகள் "அண்ணனை மறவேன்" என்று தலையசைப்பதாக தனக்கு தோன்றியதாக எழுதி இருப்பார்..

அதுவே "தங்கை தன் அண்ணனை மறவேன்" என்று நாம் எடுத்துக் கொள்ளும் விதமாகவும் "எம்.ஜி.ஆர்... அண்ணாவை நான் மறவேன்" என்று பாடுவதாய் நாம் எடுத்துக் கொள்ளுமாறும் "இரட்டுற மொழிதலாய்" எழுதி இருப்பார்....

சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை இலக்கிய திறன் இவர்  பாடல்களில்.... இவர் வரிகளிலேயே சொல்வதென்றால் இவரது  புலமையைக் கண்டு

"உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்.. இன்னும் என்ன சொல்ல? "

சரி 80 வயது.. எம்.ஜி.ஆர். இளையராஜா என்றெல்லாம் சொன்னதை வைத்து இவர் கவிஞர் வாலி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. இவர் வாலியும் அல்ல (பரம நாத்திகர்).... 4 முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருது, அரசவைக் கவிஞர் பட்டம் பெற்றவர்.. அதுமட்டுமல்ல தமிழக சட்டப்பேரவையின் (மேலவை) முன்னாள் துணை சபாநாயகர்.... அண்ணா திமுக உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர்... அந்தக் கட்சியின் அவைத்தலைவராக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தவர்...

அவர் வேறு யாருமல்லர்... பேரூர் தமிழ்க்கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, சென்னை சாந்தோம் பள்ளியில் எம்.எஸ்.வியின் பிள்ளைகளுக்கு தமிழ் வாத்தியாராக இருந்து பின் நான் முதல் பத்தியில் சொன்ன "குடியிருந்த கோயில்" திரைப்படம் மூலம் பாடலாசிரியர் ஆன..... தலை, மீசை, உடை, சிரிப்பு என்று எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும்

"புலவர் புலமைப்பித்தன்"...... 


நான் மீண்டும் மீண்டும் வியந்து போகும் ஒரு விஷயம் "இலக்கியத்திறன், அரசியல் தொடர்பு, படவாய்ப்புகள், வெற்றிகரமான பாடல்கள்" இவை அனைத்தும் இருந்தும் இவரது சமகாலத்தவர்களான வாலி - வைரமுத்துவை போல இவர் பெயர் அந்த அளவுக்கு பிரபலம் அடையாதது ஏன் ? என்பது தான்... காலம் எப்போதுமே புரிபடாதது....

Saturday, September 10, 2016

அது ஒரு "பாப்" காலம்

நேத்து டிவில பிஸ்தா படத்துல வர்ற "அழகு புயலா அல்ட்ரா மாடர்னா" பாட்டு பாத்திட்டு இருந்தேன்.. மைண்டு அப்படியே பின்னோக்கி போயிடிச்சு.. இந்த படம் வந்த புதுசுல சன் டிவி திரைவிமர்சனம் ல இந்த பாட்டப் பத்தி "நீங்க வழக்கமா மெலடி தானே பண்ணுவீங்க.... இது எப்படின்னு?" கேள்விக்கு "நான் பாப் ஆல்பம் எல்லாம் பண்ணிருக்கேங்க.. அதனால அதெல்லாம்.. ஈஸியா வந்துருச்சு.." அப்படின்னு பதில் சொன்னாரு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.. இன்னிக்கு தேதி வரைக்கும் நானும் அந்த ஆல்பத்தை தேடிட்டே இருக்கேன் கிடைக்க மாட்டேங்குது...

அவரு போட்டது இருக்கட்டும்... 90 களின் மத்தியில தமிழ்நாட்டுக்கே புதுசா ஒரு ஜுரம் வந்தது.. அது தான் "பாப்" ஜுரம்.. அதாவது பாப் பாடல்கள் அல்லது அந்த வகையைச் சேர்ந்த தனிப் பாடல்கள்னு நாம இதை வச்சுக்குவோம்.. சரியா சொல்லனும்னா 1995ல வெளிவந்து சக்கைப்போடு போட்ட "Alisha Chinay" யின் "Made In India" தான் இதுக்கு  பிள்ளையார் சுழி.. ஸ்கூல், காலேஜ் னு எங்க ஆண்டு விழா நடந்தாலும் "Made In India" தான்..

அதுக்கு அடுத்த ஆண்டு வெளிவந்த "Hariharan - Lesle Lewis" ஜோடியின் "Colonial Cousins" ஆல்பம் ரெண்டாவது பெரிய காரணி... முதன்முதலா "டாடா காப்பி" விளம்பரத்துல தான் அதை நம்மாளுங்க கேட்டாங்க... "கிருஷ்ணா நீ பேகனே"ல ஆரம்பிச்சு ஆங்கில வரிகள் ல தொடரும் வித்யாசமான கலப்பிசை... ஆல்பம் பயங்கர ஹிட்.. அத்தோட நாம சும்மா இருக்க மாட்டோமே... இறங்கினாங்கப்பா நம்மாளுங்க தமிழ் பாப் பாடல்களோடு களத்துல... அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு என்னென்ன எல்லாம் நடந்ததுன்னு பாப்போம்...

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கால இசை ரசனை மற்றும் சூழல் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சிக்கிறது நல்லது.. 80களின் கிராமியப் பின்னணி படங்கள் மாறி 90களின் காலேஜ் பின்னணிப் படங்கள் வெற்றிகரமா ஓடிட்டு இருந்தன.. ராஜா தன்னோட "Peak Period" முடிந்து அவரது அடுத்த கட்டத்துக்கு போயிருந்தார்.. 92ல ரகுமானின் வருகை நிறைய புதிய இசை ரசனையை (மேற்கத்திய கலப்பிசை) ஏற்படுத்தி இருந்தது.. அதே மாதிரி இளையராஜா பாணியிலே ஜெராக்ஸ் அடிச்ச தேவாவும் இதே 95ல வெளிவந்த ஆசை படத்து மூலம் வேறு இசை வடிவத்துக்கு தன்னை மாத்திக்கிட்டாரு.. தூர்தர்ஷனே கதின்னு இருந்த தமிழனுக்கு 93-94ல சன் டிவி, ராஜ் டிவி ன்னு ரெண்டு புதிய சேனல்களும் அதன் புதிய விளம்பர யுக்திகளும் ஏற்படுத்திய ஈர்ப்பு முக்கியமான ஒரு மாற்றம்... இந்த சூழல்ல தான் நான் சொன்ன தமிழ் பாப் பாடல்கள் வரிசை கட்டின... அதுக்கு பெரும் பங்கு "ராஜ் டிவி யில் முக்கால் வாசி நேரம் வந்த அவற்றின் விளம்பரங்கள்.."

1987லேயே தமிழில் பாப் ஆல்பம் வரத்தொடங்கி விட்டதாக இணையத்தில் சில தகவல்கள் கிடைக்கின்றன... என் நினைவுக்கு எட்டிய வரை சன் மியூஸிக்கில் 1995/96ல் வெளிவந்த பாப் பாடல் "Philip - Jerry" இரட்டையர்களின்  "Dance Natyam" ஆல்பத்தில் உள்ள "Banana Boat" தான் முதல் ஹிட் ... அரை நிஜாரும் தலையில் தொப்பியுமாய் இவர்கள் ஆடும் விஷுவல் அடிக்கடி அப்போது ஒளிபரப்பாகும்...

இதே காலகட்டத்தில் இந்த தமிழ் பாப் இசை அலையின் இரண்டு முக்கிய நபர்களின் ஆல்பங்கள் வெளி வந்தன.. ஒன்று 13 வயதில் பாப் ஷாலினி பாடி வெளியிட்ட "ஷாலினி" என்கிற ஆல்பம்.. மற்றொன்று "சுரேஷ் பீட்டர்ஸ் பாடி வெளிவந்த "மின்னல்"... இரண்டும் செம ஹிட்.. மின்னலில் "இது வானம் சிந்தும் ஆனந்த கண்ணீர்", வா மானே வா தேனே ரெண்டும் நிறைய முறை கேட்டிருக்கிறேன்.. இதில் ரெண்டாவது பாட்டை , பின்னாளில் தான் இசையமைத்த "கூலி" படத்தில் "பூப்பூவா பூப்பூவா" என்று மீண்டும் பயன்படுத்திக் கொண்டார் சுரேஷ் பீட்டர்ஸ்..

1997 தமிழ் பாப் இசையில் தமிழ் நாட்டையே கலக்கிய 4 ஆல்பங்கள் வெளிவந்தன.. முதலாவது.... மால்குடி சுபா பாடிய "வால்பாறை வட்டப்பாறை"..... மொத்தம் 10 டிராக்குகள் என்றாலும் டைட்டில் டிராக் இன்றும் பாப்புலர்.. (இந்த பாட்ட கேக்கும் போது "என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா" எதுக்கு எனக்கு நியாபகம் வருது??? ) எஸ்.எஸ். மியூஸிக்கில் அடிக்கடி வரும்... (திமிரு ஹீரோயின் ஷ்ரியாவுக்காகவே எஸ்.எஸ்.மியூசிக் பார்த்த காலம் அது... ம்ஹ்ஹ்ஹம்ம்ம்.. இப்போ ஷ்ரியாவுக்கெல்லாம் வயசாகி இருக்கும்)

இரண்டாவது... ஹிந்தியில் ஹரிஹரன் பாடி வெளிவந்த காதல் பாடல்களை தமிழில் வைரமுத்துவின் வரிகளில் மொழிபெயர்த்து வெளிவந்த "காதல் வேதம்".. இரண்டே நாட்களில் இதன் எட்டுப் பாடல்களையும் வைரமுத்து எழுதி இருக்கிறார்..

"இருதயம் இடம் மாறித் துடிக்கும் வலது புறத்திலே" ,

"மலையும் நதியும் நிலவும் ஒருநாள் மறையும்
 காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு".. இந்த இரண்டும் அடிக்கடி ராஜ் டிவியில் விளம்பரங்களில் வரும்.. எட்டுமே மெலடி ரகம் தான்..

மூன்றாவது.... அன்று புதுமுகங்களாக இருந்து இன்று பிரபலங்கள் ஆகி இருக்கும் ஆறு பேர் சேர்ந்து உருவாக்கிய "டான்ஸ் பார்ட்டி" என்கிற பாப் ஆல்பம்.. 15 நிமிடத்துக்கு ஒரு முறை ராஜ் டிவியில் விளம்பரம் வரும்.. யுகேந்திரன் பாடிய "சொல்லித்தரவா.. கற்றுக்கொள்ளவா", அனுராதா ஸ்ரீராம் பாடிய "உயிரின் உயிரே", தேவிஸ்ரீ பிரசாத் பாடிய "ஜிங்கி சிக்கிச்சாரோ", எஸ்.பி.பி.சரண் - தேவன் ஏகாம்பரம் குரல்களில் "மல்லிகைப் பூவில் நடனமாடிடும்", ஏற்கனவே "ஷாலினி" பாப் ஆல்பத்தில் அவர் பாடி வெளிவந்த "மாமா உன் புள்ளை இல்லையா", மற்றும் பிரவீண் என்பவர் பாடிய "காரைக்குடி கறம்பக்குடி கல்லக்குடி" என்று ஆறு பாட்டு.. இதில் பிரவீன் என்பவர் மட்டும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.. மற்றவர்கள் ஆளுக்கு 15 பாட்டாவது சினிமாவில் பாடிவிட்டார்கள்..

நான்காவது.. தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவையே.. ஏன் உலக அளவில் பிரசித்தி பெற்ற "வந்தே மாதரம்".. "பரத் - பாலா - கனிகா" தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "அங்கும் இங்கும்" ஒன்று மட்டும் தான் தமிழ்ப் பாட்டு என்றாலும் இந்திய சுதந்திர பொன்விழாவை ஒட்டி வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய தனிப்பாடல் தொகுப்பு என்று ஆணித்தரமாக சொல்லலாம்... நஸ்ரத் பதே அலிகான் பாடிய "சந்தா சூரஜ்" (போறாளே பொன்னுத்தாயி மெட்டில்) சூபி மற்றும் மேற்கத்திய கலப்பிசை வடிவத்தை தமிழக கிராமங்களிலும் அறிமுகப் படுத்தியது...

"பாய்ஸ்" படத்தில் "ஆல்பம் போடறதுன்றது என்ன ஆப்பம் போடுற மாதிரி அவ்வளவு ஈஸின்னு நெனச்சியாடா"னு விவேக் கேட்பாரே... உண்மையில்  இந்த நான்கு முக்கிய ஆல்பங்களும் ஏற்படுத்திய அதிர்வில் ஆளாளுக்கு ஆப்பம் போடுற மாதிரி வரிசை கட்டி வெளியிட்டார்கள்..

டான்ஸ் பார்ட்டி ஹிட் அடிக்க அதில் பாடிய "எஸ்.பி.பி.சரண் - தேவன்" ஜோடி தனியாக "கம்பன் ஒரு கண்ணிலே" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார்கள்.. "கம்பன் ஒரு கண்ணிலே.. காளிதாசன் நெஞ்சிலே" என்று ஒன்று மட்டும் நினைவிருக்கிறது.. மற்றதெல்லாம் கொட்டாவி விடும் ரகம் தான்..

"எதிரும் புதிரும்" படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" என்று டான்ஸ் பாடல் பாடிய புஷ்பவனம் குப்புசாமி அதில் பயங்கர இம்ப்ரெஸ் ஆகி "அடியாத்தி டான்ஸ் டான்ஸ்" என்று ஒரு பாப் ஆல்பம் வெளிட்டார்.. தூக்கு தூக்கி படத்தில் ஜி.இராமநாதன் இசையமைத்த "ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு" பாடலை தாளத்தை மட்டும் மாத்தி

"காக்கா இல்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கயிலே
கண்ணுறங்கும் வேளையிலே கண்டேன் கண்டேன் கனவு ஒண்ணு"

என்று பாடுவார்.. என்ன பாடினாலும் இவரது குரல் அப்பட்டமாக கிராமிய மணத்துடனே ஒலிக்கும்.. அடுத்த வரிகளில்

"மந்திரியா இருக்கச் சொல்லி.. என்ன மத்தியிலே அழைச்சாங்க
வெள்ள வேட்டி இல்லையின்னு வேணாமுன்னு சொல்லிப்புட்டேன்"

என்று போகும்..

இன்று சட்டசபையில் "நீங்க நல்ல இருக்கோணும்" என்று பாடி சங்கீத சபையாக ஆக்கிக் கொண்டிருக்கும் திருவாடானை சமஉ "கருணாஸ்" 90களின் மத்தியில் "ஷாக்" என்றொரு பாப் ஆல்பம் வெளியிட்டார்.. ஆனால் "தெம்மாங்கு", "கானா", என்று பலபட்டறையாக இருந்ததால் தொடர்ந்து இவர் பாப் இசையில் நிறைய பாடவில்லை..

"சன் டிவியின் தமிழ் மாலை"க்கு பின்னணி இசை அமைத்த "ஆகோஷ்" (ஆனந்த் - கோபால் ராவ் - ஷலீன் ஷர்மா) 1997ல் "Come on India" என்று சங்கர் மகாதேவனை வைத்து ஒரு ஆல்பம் இந்தியில் வெளியிட்டார்கள்.. அப்போதைய உலக கோப்பைக்கு அதை புரோமோ பாடலாக மாற்றி காச்சிகுடா ரயில்வே ஸ்டேஷனில் "கமான் இந்தியா" என்று அவர் பாடுவதை விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருந்தனர்.. இந்திப் பாடலாக இருந்தாலும் கிரிக்கெட் ஜுரத்தில் தமிழ் நாட்டிலும் நன்கு ரீச் ஆகியது... ( ஓயாமல் கமான்.. கமான் என்று அழைத்ததாலோ என்னவோ "வங்கதேசம், இலங்கை இருவரிடமும் மரண உதை வாங்கி முதல் சுற்றிலேயே இந்திய ஊர் திரும்பியது...)

"மின்னல்" வெற்றிக்கு பிறகு சுரேஷ் பீட்டர்ஸ் பாடி வெளிவந்த மற்றொரு ஆல்பம் "காத்திருப்பேன்"... "எந்நாளும் அன்பே உன்னை எண்ணி காத்திருப்பேன்" என்றொரு பாடல் இப்போதும் நினைவிருக்கிறது..

ராஜீவ் மேனன் தயாரித்து வெளிட்ட "உஸ்ஸெலே உஸ்ஸெலே" மற்றொரு வெற்றிகரமான ஆல்பம்.. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், டிம்மி குரல்களில் டைட்டில் பாடல் இப்போதும் யூ டியூபில் கிடைக்கிறது.. உன்னிகிருஷ்ணன் பாடிய "எப்போ வருவாரோ", சுஜாதா பாடிய "மழையே" என்று ஆல்பம் முழுக்க நிறைய ஜிலீர் பாடல்கள்...

மில்லீனியத்தை ஒட்டி இசையமைப்பாளர் ஆதித்யன், அப்போது அவரது அப்பரசண்டியாக இருந்த டி.இமான் மற்றும் பாடகர் சோலார் சாய் இவர்கள் மூவர் குரல்களில் "அக்சர் அதிரடி" என்று ஒரு ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிட்டனர் "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்று கைகளில் கிதாரோடு கண்ணனை துரத்திக் கொண்டு ஓடுவது மாதிரி ஒரு விஷுவல் ராஜ் டிவியில் வரும்.. பாகவதர் பாடிய இந்தப் பாடல் உட்பட 14 பாடல்களை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள்...

இதன் தொடர்ச்சியாக 2005ல் "யோகி. பி" மற்றும் "நட்சத்திரா" இணைந்து "வல்லவன்" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டனர்.. "மடை திறந்து தாவும் நதியலை நான்" பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள்... இதற்கு பிறகு சினிமாவிலேயே போதும் போதும் என்று கதறும் அளவுக்கு அடுத்த மூன்று நான்கு வருஷங்களுக்கு ஒரு பாட்டு விடாமல் ரீமிக்ஸ் செய்து தான் ஓய்ந்தார்கள்...

திடீரென ஆரம்பித்த இந்த பாப் அலை திடீரென காணாமல் போய் ரீமிக்ஸ் என்கிற வேறு அலை வந்தது...

இப்போதும் தமிழ் பாப் ஆல்பங்கள் புற்றீசல் போல வந்துகொண்டே இருக்கின்றன.. ஆனால் 90களின் மத்தியில் இருந்த ஈர்ப்பு இல்லை..
இன்டர்நெட் யுகத்தில் சின்ன மொபைலை வைத்து ஒரு சினிமாவே எடுக்கும் காலத்தில் இப்போது பாப் ஆல்பம் என்பது ஒரு பெரிய விஷமேயில்லை...

கடைசியாக ஒரு "Disclaimer" இதில் நித்தி கனகரத்தினம், இ.ஏ.மனோகர் இவர்களின் பாடல்களைத் தேட வேண்டாம்.. சிலோன் பைலா என்பது தனி இசை வடிவமாதலால் அதை இந்த ஆங்கில தமிழ் கலப்பில் வெளிவந்த தமிழ் பாப் பாடல்களில் சேர்க்கவில்லை... அதே போல நான் ஏற்கனவே சொன்னது போல 90களின் மத்தியில் தொடங்கி ஓங்கி வீசிப் பின் ஓய்ந்து போன ஒரு அலையைப் பற்றிய பருந்துப் பார்வை இது... அவ்வளவே!!!!

Sunday, September 4, 2016

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்!!!!

விநாயகர் சதுர்த்தி வருது... (விடுமுறை தினம்னு சொல்லணுமா? தெரியலையே).. எல்லா டிவி சேனலும் பக்திமழை பொழியிறாங்க.. நாமளும் ஏதாச்சும் செய்வோம்....

'மலரோ நிலவோ மலைமகளோ' ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாட்டுக்கு இசை யாருப்பா?? ஜெயச்சந்திரன் பாடிருக்காப்ல... செமி-கிளாசிக்கல்... ரெண்டாவது சரணத்துல ஸ்வரம் எல்லாம் வருது, 'ஸ்ரீதேவி என் வாழ்வில்' பாட்டு மாதிரியே இருக்கு.... வேற யாரு ராஜா தான்...

 'திருப்பரங்குன்றத்தில்  நீ சிரித்தால்' பாட்டு யாரு மியூசிக்கு?? என்ன கேள்விப்பா இது... கந்தன் கருணை கே.வி.மகாதேவன் National Award வாங்கின படம் ஆச்சே ... இது போன்ற தப்பிதக் கற்பனைகள் எனக்கு நிறைய இருந்தததுண்டு... சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

அவர் ஒரு இசைக்கலைஞர்.. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு போன்றவர்களின் படங்களில் பக்கவாத்தியக் கலைஞராக இருந்தவர் பிறகு வாய்ப்புத் தேடி சென்னை வந்து கொலம்பியா எச்.எம்.வி யில் சூலமங்கலம் சகோதரிகள், எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களுக்கு பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்...  (கிட்டத்தட்ட 700 பாடல்களுக்கு மேல் ).. உதாரணத்துக்கு சில :

அழகெல்லாம் முருகனே, முருகனுக்கொருநாள் திருநாள், திருநீறில் மருந்திருக்கு தெரியுமா, ஆடுகின்றானடி தில்லையிலே (சூலமங்கலம் சகோதரிகள்)... கற்பூர நாயகியே கனகவல்லி, தாயே கருமாரி, கண்ணபுர நாயகியே மாரியம்மா, கருணை உள்ளம் கொண்டவளே (எல். ஆர் .ஈஸ்வரி) நாராயணா என்னும் பாராயணம், ஒப்பில்லாத பெருமாள் நம் உப்பிலியப்ப திருமால் (சீர்காழி கோவிந்தராஜன்)

அவரது பக்திப் பாடல்களில் ஒன்றைக் கேட்ட கவியரசு கண்ணதாசன் இந்தப் பாடல் உங்களது படத்தில் வரும் சூழலுக்கு சரியாகப் பொருந்தும் என்று இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல, அந்தப் பாடல் மற்றொரு இசை அமைப்பாளர் இசையமைத்த அந்தப் படத்தில் இடம் பெற்றது... "முருக கானாம்ருதம்" என்னும் பக்திப் பாடல் கேஸட்டிற்கு இவர் இசை அமைத்த பாடல் தான் கந்தன் கருணை படத்தில் இடம்பெற்ற "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"

1969ம் ஆண்டு அதே ஏ.பி.என்னிடம் இருந்து அந்த இசைக் கலைஞருக்கு அழைப்பு வருகிறது.. செல்கிறார்... "வா ராஜா வா" என்கிறார் இயக்குனர்.. இவர் புரியாமல் பார்க்க.. "என்ன பாக்கறீங்க.. இது தான் நீங்க இசை அமைக்கப் போற படத்தோட பேரு" என்று இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் ஏ.பி.என்... அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல வயலின் இசை வேந்தர் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்...



குன்னக்குடின்ன உடனே "நெத்தி நெறய பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி விபூதி பூசிக்கிட்டு, நடுவுல பழைய காலத்து பத்து ரூவா காயின் மாதிரி பொட்டு வச்சுக்கிட்டு, பொன்னாடைல சட்ட தெச்சு போட்டுக்கிட்டு தீபாவளிக்கு தீபாவளி காலைல சன் டிவி ல 06:30 - 07:30 அன்றும் இன்றும் ல மருதமலை மாமணியேவும் இஞ்சி இடுப்பழகாவும் வாசிப்பாரே அந்த குன்னக்குடி தான்" 15 வருஷம் முந்தி வரை எனக்கு தெரிஞ்ச குன்னக்குடி.. 22 படங்கள்.. 700க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்ற விபரம் தாமதமாக நான் அறிந்த ஒன்று..

சரி மீண்டும் விஷயத்துக்கு வருவோம்.. "இறைவன் படைத்த உலகை எல்லாம்", "கல்லெல்லாம் செல செஞ்சான் பல்லவராஜா" என்று அருமையான பாடல்களோடு "வா ராஜா வா" ஹிட் அடிக்க வரிசையாக ஏ.பி.என் படங்களுக்கு குன்னக்குடி இசை அமைத்தார்.

1970ல் வெளிவந்த "திருமலை தென்குமரி' தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுத் தந்த திரைப்படம். ஒரு பேருந்தில்  சில குடும்பங்கள் பக்தித் தலங்களுக்கு யாத்திரை செல்வதாக அமைந்த படம். "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" , குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா", "சிந்தனையில் மேடை கட்டி", என்று அனைத்தும் ஹிட் பாடல்கள்..

"மதுரை அரசாளும் மீனாட்சி".... சீர்காழியின் குரலில் காபி, கானடா, பீம்ப்ளாஸ், குந்தல‌வராளி என்று ராகமாலிகையாய் அமைந்த இந்தப் பாடலில் "திரிபுரசுந்தரி சீர்காழியிலே' என்ற வரியில் "சீர்காழியிலே" என்ற சொல்லை மட்டும் தனியாக ஆலாபித்து பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியை பார்த்து புன்னகைப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.. கடைசியில் வரும் அதி வேக ஸ்வரங்கள் குன்னக்குடி ஸ்பெஷல்..

1972ல் வெளிவந்த அகத்தியர் படம் குன்னக்குடியின் அடுத்த பெரிய ஹிட்.. சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மஹாலிங்கம் என்று இரண்டு இசை வல்லுநர்கள் இணைந்த படம்.. "நடந்தாய் வாழி காவேரி, உலகம் சமநிலை பெறவேண்டும், மலை நின்ற திருக்குமரா", "நமச்சிவாய என சொல்வோமே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை", "இசையாய் தமிழாய் இருப்பவனே" என்று பெரிய பட்டியல்.. அத்தனையும் முத்தான பாடல்கள்...

அதே ஆண்டு வெளிவந்த "தேவரின் தெய்வம்" படம் தான் இன்றளவும் குன்னக்குடியின் கேரியர் பெஸ்ட் படம்.. முருகனின் ஆறுபடை வீடுகளைக் குறிக்கும் விதமாய் ஆறு பாட்டு.. ஆறும் பட்டயைக் கிளப்பிய ஹிட்... மதுரை சோமுவின் "மருதமலை மாமணியே", பெங்களூர் ஏ. ஆர். ரமணி அம்மாள் பாடிய "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்", பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் பாடிய "நாடறியும் ஏழுமலை", டி.எம்.எஸ் - சீர்காழி இணையில் "திருச்செந்தூரின் கடலோரத்தில்", "சூலமங்கலம் ராஜலட்சுமி - எம்.ஆர்.விஜயா குரல்களில் "வருவான்டி தருவான்டி", ராதா-ஜெயலட்சுமி குரல்களில் "திருச்செந்தூரில் போர் புரிந்து".. படம் வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன.. ஆயினும் இன்னும் மனதை விட்டு நீங்காத இசை...

1973ல் வெளிவந்த தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ராஜராஜ சோழனில் "தஞ்சை பெரிய  கோயில் பல்லாண்டு வாழ்கவே", "ஏடு தந்தானடி", தென்றலோடு உடன் பிறந்தாள்" என்று பல நல்ல பாடல்கள்...

அடுத்து வந்த திருமலை தெய்வம், திருவருள் படங்களிலும் வெற்றி பாடல்கள் தொடர்ந்தன "ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை, நாளெல்லாம் உந்தன் திருநாளே, திருவருள் தரும் தெய்வம், கந்தன் காலடியை வணங்கினால், மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க, மாலை வண்ண மாலை" என்று...

பக்திப் படங்களில் இருந்து மாறி சமூகப் படங்களை ஏ.பி.என் எடுத்த போதும் குன்னக்குடியின் இசையில் பக்தி மணம்.. குமாஸ்தாவின் மகள் படத்தில் "எழுதி எழுதி பழகிவந்தேன்", மேல்நாட்டு மருமகள் படத்தில் "முத்தமிழில் பாடவந்தேன்" (நவராத்திரி சுண்டல் பாட்டு.. வருஷத்துக்கு யாராவது ஒருவர் வந்து பாடிடுறாங்க)

குன்னக்குடி என்றதும் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் அவர் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பார்.. அவரது இசையமைப்பில் அப்படி நிறைய இருக்கிறது பேச.... வாங்க பேசுவோம்...

அகத்தியர் படத்தில் சீர்காழி - டி.எம்.எஸ் குரல்களில் ஒலிக்கும் பாடல் "வென்றிடுவேன்" "நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோகனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கௌரி மனோகரி, கல்யாணி, சரஸ்வதி" என்று 16 ராகங்களில் அமைந்த தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ராகமாலிகை.

அது மட்டுமல்ல "நாட்டை"யும் நாதத்தால் வென்றிடுவேன்.. "பைரவி" துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் என்று ஒவ்வொரு வரியிலும் ராகத்தின் பெயரை பாடல் வரியில் கொண்ட பாடல் .. ..

இன்னும் சுவாரஸ்யமாக "சமமா நீ சரிசமமா? மனிதா நீ பாதக மனிதா" சாகசமா? பரிகாசமா? போன்ற சொற்களில் அந்த அந்த எழுத்துக்களைக் கொண்ட ஸ்வரங்களிலேயே வைத்து விளையாடி இருப்பார் வைத்தி... (உதாரணத்துக்கு: சமமா என்பதை "ச" "ம" "ம")...

வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களை முதன் முதலாக சினிமா பாடல் எழுத வைத்தவர் குன்னக்குடி தான்.. "நம்ம வீடு தெய்வம்" படத்தில் "உலகமெல்லாம் படைச்சவளே" என்ற பாட்டு.. (அவர் அடுத்து எழுதிய பாடலும் குன்னக்குடியின் இசையில் தான் "அன்னை அபிராமி" படத்துக்காக).. அதே போல குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பாவை "கல்லெல்லாம் செல செஞ்சான்" என்று "வா ராஜா வா"வில் எழுத வைத்திருப்பார்..

அநேக பாடகர்களை முதன் முதலில் சினிமாவில் பாடவைத்தவர் இவர் ( மதுரை சோமு, பெங்களூர் ரமணி அம்மாள், பித்துக்குளி முருகதாஸ், எம். ஆர்.விஜயா, டி.கே.கலா,உஷா உதூப்" என்று பெரிய பட்டியல்).

தமிழின் முதல் பாப் பாடலான " Life is a Flower.. Love is a Treasure" என்ற பாடலை மேல்நாட்டு மருமகள் படத்தில் உஷா உதூப்பை பாட வைத்திருப்பார்..

கண்காட்சி படத்தில் பீம்பிளாஸ் ராகத்தில் "3 - 2 - 2" என்று ஏழு அட்சரங்களைக் கொண்ட மிஸ்ர நடையில் முதன் முதலாக ஒரு டூயட் பாடல் அமைத்திருப்பார்.. அது கே.டி.சந்தானம் பதிவில் நான் சொன்ன "அநங்கன் அங்கஜன் அன்பன்" என்னும் பாடல் (நடிகர் சங்க மீட்டிங்கில் சிவகுமார் சொன்ன அதே பாடல் )

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு குன்னக்குடி இசையமைத்த "நவரத்தினம்" படத்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு வித்தியாசமான பாடல்கள்.. மேற்கத்திய பாடலுக்கு மூலம் கர்நாடக இசைதான் என்னும் விதமாக பாடல் வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்காக இவர் இசை அமைத்தது...

"Sound of Music" படத்தில் வரும் "Loanely Goathered" பாடலை தியாகய்யரின் "பலுக்கு கண்ட சா" என்கிற நவரச கானடா ராக கீர்தனைக்கு  ஒப்பிட்டு விளக்குவார்.. அடுத்து "Golden Youths Always Rules" என்னும் "My Fair lady"
படப்பாடலை "ஏதாவுனரா" என்னும் கல்யாணி ராக தியாகராஜ கீர்த்தனைக்கு ஒப்பிட்டு பாடிக்காட்டி பின்னர் அதையே ஹிந்துஸ்தானி "அமீர் கல்யாணி"யில் "ஜோ தும் தோடோ பியா" என்னும் மீரா பஜன் பாடலுக்கு ஒப்பிட்டு மீண்டும் ஸ்வரங்களில் இந்த மூன்றையும் இணைத்து பாடிக்காட்டுவார்.. 27 ஸ்ருதிகளில் பாடக்கூடிய ஸ்வர ஞானியாகிய பாலமுரளி பிரமாதப் படுத்தி இருப்பார்..

அப்பேர்ப்பட்ட பாலமுரளி கிருஷ்ணாவை "குருவிக்காரன் பொஞ்சாதி" என்று அதே படத்தில் ஜிப்ஸி பாடலையும் பாட வைத்திருப்பார்..

நடிகர் திலகம் சிவாஜியுடன் இவர் இணைந்த "ராஜராஜ சோழனில்" சிவாஜி கவிதை சொல்லச் சொல்ல டி.ஆர்.மஹாலிங்கம் அதை ராகமாக பாடும் "தென்றலோடு உடன் பிறந்தாள்" ஒரு வித்தியாசமான முயற்சி..

இதே படத்தில் இசைத்துறையில் மூன்று ஆகிருதிகளான "சீர்காழி - டி.ஆர்.மகாலிங்கம் - எஸ்.வரலட்சுமி" ஆகிய மூவரையும் "தஞ்சை பெரியகோயில் பல்லாண்டு வாழ்கவே" பாடலில் இணைத்திருப்பார்.. "நஞ்சைக் கழனிகளின் நாயகனே" என்று ஆரம்பமே படு கம்பீரமாக இருக்கும்.. மூன்று குரல்களும் ஒன்றாக சேர்ந்து ஒலிக்கும் பொழுது "வெண்கல நாதம்" மாதிரி இருக்கும்...

உச்சஸ்தாயியில் மேல்கால சஞ்சாரம் எல்லாம் செய்து பிருகாக்களோடு பாடும் டி. ஆர்.மகாலிங்கத்துக்கு அகத்தியர் படத்தில்  ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் சாகித்யமான எஸ்.ஜி.கிட்டப்பாவின் "ஆண்டவன் தரிசனமே தியாகேசன் தாண்டவ தரிசனமே" பாடலை உளுந்தூர்பேட்டை சண்முகம் வரிகளில் "ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே" என்று பாட வைத்திருப்பார்.. சொல்லத் தேவையே இல்லை ஹோம் கிரவுண்டில் சச்சின் ஆடுவது மாதிரி தான்... பிச்சு உதறி இருப்பர் டி.ஆர்.எம். (இதுபோல தனது பழைய பக்திப் பாடல்களான "ஆடுகின்றனடி தில்லையிலே"  பாடலை "ஏடு தந்தானடி" என்றும் "வேல்வந்து வினை தீர்க்க" பாடலை "காவலுக்கு வேலுண்டு" என்று மனிதனும் தெய்வமாகலாம் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்).

இந்தப் படத்தில் தான் நான் முந்தைய பதிவில் சொன்ன "இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்.. கடகடவென ஓடும் ரன்னிங் நொட்டேஷனில் கவிஞர் கே.டி.சந்தானத்தின் பல்லை உடைக்கிற வார்த்தைகளில் அருமையான Male டூயட்.. இந்த துரித கதி என்பது அவரது ஸ்டைலாகவே இருந்திருக்கிறது.. ஏராளமான பாடல்கள் இதே மாதிரி ஓடும் சங்கதிகளோடு அமைத்திருக்கிறார்.

கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் இவர் இசையில் காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் ஆகிய இரண்டு படங்களில் பாடி இருப்பார்.. அதிலும் காரைக்கால் அம்மையார் படத்தின் கிளைமாக்ஸ் பாடலான "தகதகதக தகதக வென ஆடவா" "திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம்" என்று மூன்று தாளக்கட்டுக்களில் மாற்றி மாற்றி கே.பி.எஸ்.குரலில் ஆனந்த தாண்டவத்தை இசை வடிவமாக கண் முன் நிறுத்தி இருப்பார்...

இவர் திரையில் தோன்றி நடித்த முதல் படமான கந்தர் அலங்காரத்தில் வயலின் இசைத்து அதில் வரும் தீப்பொறியில் ஆறு தீபங்கள் ஏற்றுவதாக ஒரு காட்சி வரும் (கேட்பதற்கு கொஞ்சம் தீப்பொறி திருமுகம் எபெக்ட்டில் இருந்தாலும்) ஷண்முகப்ரியா ராகத்தில் "வெல்லும் பெயர் தானே வேலவன்" என்று எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் பாடல் முழுதும் வயலினை திருப்பி பிடித்து மாண்டலின் போல் வாசிப்பது.. வில்லை எடுத்து மடார் மடார் என்று தந்தியில் அறைவது.. என்று வழக்கமான குன்னக்குடி சேட்டைகள்... என்னென்னெவெல்லாமோ செய்வாரு...

இதே படத்தில் எம்.ஆர்.ராதா கதாகாலட்சேபம் செய்வதாக ஒரு பாட்டு "கந்தா கடம்பா செவ்வேலா" என்று "பாகவதரின் "கிருஷ்ணா முகுந்தா" பாடலை எம்.ஆர்.ராதாவின் குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து மிமிக்ரி செய்திருப்பார்...

நான் முதல் பத்தியில் சொன்ன மலரோ நிலவோ பாடல் இடம்பெற்ற "ராக பந்தங்கள்" படத்தில் மற்றொரு நல்ல பாடல் "சரி கம பத நி என்னும் சப்தஸ்வர ஜாலம்".. இசைப் பயிற்சியின் பல கட்டங்களாக "சரளி, ஜண்டை, கீதம் ஆகியவற்றை" முதன் முதலில் பயிற்றுவிக்கப்படும் "மாயா மாளவகௌளை" ராகத்தில் அமைத்திருப்பார்..

அவருக்கு மாநில அரசு விருது பெற்றுத் தந்த திருமலை தென்குமரியில் அனைத்து மொழி பேசுபவர்களும் பாடுவதாக அமைந்த (பாரத விலாஸ் டைப்) பாடல் ஒன்று உண்டு.. "அமுதே தமிழே" என்று சீர்காழி தொடங்கி வைப்பார் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், நடுவில் "பாடணுன்னு மனசுக்குள்ள ஆச நெறய  கீது" என்று பேட்டை பாஷையில் மனோரமா என்று போய் கடைசியில் காலேஜ் மாணவர்கள் பாடும் ஆங்கிலம் கலந்த தமிழாக முடியும்... அருமையாக செய்திருப்பார்.. எனக்கு இதில் மிகவும் பிடித்தது எம்.ஆர். விஜயா பாடிய "தாசினா கரையுவே பா கிருஷ்ணா" என்கிற கன்னடப் பாடல்..

இதைத் தவிர "ஜெயலலிதா" என்ற ராகத்தை கண்டுபிடித்தது (அட சத்தியமா தாங்க)... மழை வராத பொழுது சென்னை புழல் ஏரியில் நின்று அமிர்தவர்ஷினி வாசித்து இப்படி நெறய இருக்கு...

இவர் தயாரித்து வெளியிட்ட தோடி ராகம் படத்தில் "தோடியில் பாடுகின்றேன்" என்று டி.என்.சேஷகோபாலன் பாடும் அருமையான பாடல் உண்டு (ஜெயா டிவியில் பார்த்ததாக நினைவு... பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)

இந்தப் படத்துல "கொட்டாம்பட்டி ரோட்டிலே.. குட்டி போற ஷோக்கிலே" என்றொரு வண்டிக்காரன் பாட்டு உண்டு.. வில்லங்கமான வார்த்தைகளுடன் வரும் இந்தப் பாடலை பாடியவர் சாட்சாத் குன்னக்குடியே தான்...

வலையப்பட்டி தவிலோடு இணைந்து வயலின்... வயலின் தனிக்கச்சேரி... ராக ஆராய்ச்சி... ஏ.ஆர்.ரகுமான், ஜாகிர் உசேனோடு இணைந்து "கலர்ஸ்" என்னும் கலப்பிசை... இதுபோக சினிமா இசையமைப்பு என்று பல தளங்களிலும் இருந்தாலும் அவரது இசை "பக்தி இசை" என்ற அடையாளத்துக்கு உள்ளேயே வருகிறது.. அதில் குன்னக்குடியின் சாதனை அதை எளிமையாக்கி எல்லாரையும் ரசிக்க வைத்ததே....

இறுதியாக.... இந்தப் பதிவை நான் இப்போது எழுதக் காரணம் வரும் வியாழன் (08-செப்டெம்பர்) அன்னாரின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல்...

குன்னக்குடி அவர்கள் உடலால் மறைந்து எட்டாண்டுகள் ஆயினும் அவர் நாதம்  "குன்றாக் குடி" கொண்டு இருக்கிறது நம் எல்லோர் இதயங்களிலும்...